Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

குமரி: பெண் ஊழியர்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா! - சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு (29). இவர் செட்டிகுளம் பகுதியில் z3 இன்போடெக் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார். அவரது நிறுவனத்தில் பணிபுரிய மூன்று பெண்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார் சஞ்சு. இதற்கிடையில் அந்த நிறுவனத்தில்  பணி செய்து வரும் பெண் ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது அங்கே மின்விளக்கு மாட்டும் பகுதியில் வித்தியாசமாக ஒரு பொருள் இருப்பதைப் பார்த்திருக்கிறார். அது என்னவென்று ஆராய்ந்தபோது ரகசிய கண்காணிப்பு கேமரா எனத் தெரியவந்தது. கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஊழியர் உடனடியாக வெளியேறிவிட்டார். பின்னர் அதுகுறித்து மற்ற பெண் ஊழியர்களுக்கும் தகவல் கூறியிருக்கிறார். பின்னர் பெண் ஊழியர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிறுவன உரிமையாளரான சஞ்சுவிடம் ரகசிய கேமரா பொருத்திய காரணம் குறித்து கேட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சஞ்சு

அதற்கு சஞ்சு முன்னுக்குப்பின் முரணாகப் பதில்கூறி சமாளித்திருக்கிறார். மேலும், அந்த பெண் ஊழியர்களை மிரட்டும் தொனியிலும் பேசியிருக்கிறார். இதனால், அவர்மீது சந்தேகம் கொண்ட பெண் ஊழியர்கள் ரகசிய கேமரா தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக அங்குசென்ற போலீஸார் சஞ்சுவைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் கழிவறையில் பொருத்தியிருந்த ரகசிய கேமரா, அவரது லேப்டாப், அங்கிருந்த ஹார்ட் டிஸ்க்  உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், சஞ்சுவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கழிவறையில் பொருத்திய ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் அவரது மொபைல் போனில் பார்க்கும் வகையில் உருவாக்கியுள்ளது தெரியவந்தது. மேலும் அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் சஞ்சு சில நண்பர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. எனவே, அவர்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேமரா பொருத்தப்பட்டிருந்த பகுதி

தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சஞ்சுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகசிய கேமராவில் பதிவாகும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பவும், சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் பறிக்கவும் சஞ்சு திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கோட்டார் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/software-company-owner-arrested-in-nagercoil-over-fitting-secret-camera-in-toilet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக