Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

சென்னை: வங்கி மேலாளர் என்று பேசிய மர்ம நபர்! - கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று ரூ.87,000 மோசடி

சென்னை புதுப்பேட்டை கொய்யாதோப்பு டி.என்.ஹெச்.பி காலனியில் குடியிருப்பவர் வரபிரசாத் (38). இவர் 4 கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகிறார். கடந்த 18.2.2021 அன்று வரபிரசாத்துக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தன்னை வங்கியின் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர், வரபிரசாத்திடம் நீங்கள் பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டுகளுக்கு போனஸ் பாயின்ட் தருவதாகக் கூறியிருக்கிறார்.

கிரெடிட் கார்டு

அதை நம்பிய வரபிரசாத்தும் தனது கிரெடிட் கார்டுகளின் விவரங்களையும், செல்போனுக்கு வந்த ஓ.டி.பி எண்ணையும் வங்கி மேலாளர் என்று கூறியவரிடம் தெரிவித்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வரபிரசாத்துக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சியளித்திருக்கிறது. அதில் 4 கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தி 87,631 ரூபாய் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து வரபிரசாத் அதிர்ந்து போனார்.

பின்னர் இதுகுறித்து திருவல்லிக்கேணி சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. திருவல்லிக்கேணி சைபர் க்ரைம் போலீஸார் வரபிரசாத்தின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மொபைல் செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.

Also Read: நிம்மதியைப் பறித்த கிரெடிட் கார்டுகள்... தப்பிக்க என்ன வழி..? காப்பாற்றும் வழிமுறைகள்

சைபர் க்ரைம்

இதையடுத்து திருவல்லிக்கேணி சைபர் க்ரைம் போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு விவரத்தைக் கூறி வரபிரசாத்தின் பணத்தை திரும்பக் கொடுக்கும்படி பரிந்துரைக் கடிதம் அனுப்பினர். அதன்பேரில் வங்கி நிர்வாகத்தினர் வரபிரசாத்தின் வங்கி கணக்கிற்கு 57,081 ரூபாயை திருமபச் செலுத்தினர். மீதமுள்ள தொகையை மீட்க திருவல்லிக்கேணி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரபிரசாத்திடம் வங்கி மேலாளர் என பேசி பணத்தை மோசடி செய்தவர் குறித்து எழும்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-cyber-crime-police-take-action-against-fraudulent-bank-calls

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக