Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மும்பை: நள்ளிரவு 1 மணிக்கு வந்த கார்; 20 ஜெலட்டின் குச்சிகள்! - அம்பானியின் வீட்டை தாக்க முயற்சி?

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மும்பையின் தென்பகுதியில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு சொந்தமான அடுக்குமாடி சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது. இப்பங்களாவின் மேல் தளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ஹெலிகாப்டர் வந்து இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அண்டிலியா என்று பெயரிடப்பட்டுள்ள அக்கட்டடத்துக்கு வெளியில் நேற்று பிற்பகல் கேட்பாரற்று கார் ஒன்று நின்றது. அம்பானி வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அந்தகார் யாருக்கு சொந்தம் என்று விசாரித்த போது யாரும் உரிமை கோரவில்லை.

மர்ம கார்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஸ்கார்பியோ காரை சோதனை செய்து பார்த்த போது உள்ளே வெடிக்கும் தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. அவை வெடிகுண்டுகளாக இல்லாமல் அப்படியே இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஒரு மணியில் இருந்து அக்கார் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மர்ம நபர் அம்பானியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் காரை கொண்டு வந்து நிறுத்தினார்களா அல்லது போலீஸாருக்கு பயந்து காரை கொண்டு வந்து நிறுத்தினார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. காரின் நம்பர் அம்பானிக்கு பாதுகாப்பு கொடுக்கும் கார் ஒன்றின் நம்பரோடு ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது. காரில் வேறு சில நம்பர் பிளேட்களும், மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விபரத்தை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சமீபத்தில்தான் இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஜெலட்டின் குச்சிகள் அம்பானியின் வீட்டிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்பானியின் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் காரை நிறுத்திய நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காரிலேயே இருந்துள்ளார். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ``இச்சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார். உள்துறை இணையமைச்சர் சம்புராஜ் தேசாய் கூறுகையில், ``அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது குறித்து முழு விசாரணை நடத்தும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அம்பானியின் வீட்டிற்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இச்சம்பவத்தால் அம்பானியின் வீட்டிற்கு அருகில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளனர்

முகேஷ் அம்பானி

அம்பானியின் வீடு தென்மும்பையில் உள்ள அல்டமண்ட் ரோட்டில் கடலை நோக்கி இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு கட்டும் போது 15 ஆயிரம் கோடியாகும். அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 2014ம் ஆண்டு 2 பில்லியன் டாலர் ஆகும். இக்கட்டடத்தை அமெரிக்க நிறுவனம் வடிவமைத்தது. ஆஸ்திரேலியா நிறுவனம் கட்டி முடித்தது. 27 மாடிகள் கொண்ட இந்த வீடு 168 கார்களை நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகவும் விலை மதிப்பு மிக்க பங்கிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக அம்பானியின் அண்டில்லா வீடுதான் மிகவும் விலை மதிப்பு மிக்கது ஆகும். இங்கு 600 வேலைக்காரர்கள் பணியாற்றுகின்றனர். இதில் தியேட்டர், ஸ்பா, யோகா செண்டர், தியான மையம், நடன ஸ்டூடியோ, ஐஸ்கிரீம் பார்லர், வெளியில் இருந்து வருபவர்களை குளிர்விக்க ஐஸ் ரூம் என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அண்டிலியா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அம்பானியின் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட போது மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் பெட்ரோலிய தொழிலில் மட்டும் ஈடுபட்டு வந்த அம்பானி இப்போது தொலைபேசி, ஜவுளி, பிளாஸ்டிக், சில்லறை வியாபாரம் போன்ற அனைத்திலும் கொடி கட்டிப்பறக்கிறார்.



source https://www.vikatan.com/news/india/car-confiscated-with-bombs-near-ambanis-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக