Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மதுரை: `இப்படி ஆகும்னு யாரும் நெனைச்சு பாக்கலியே..’ -மாவோயிஸ்டுளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் மரணம்

"இப்பத்தான் ஊருக்கு வந்து பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா இருந்து, சொந்த பந்தத்தை பார்த்துட்டு மறுபடியும் ராணுவத்துக்கு போனாப்ல... இப்படி ஆகும்னு யாரும் நெனைச்சு பாக்கலியே...'' என்று ஆற்றாமையுடன் புலம்புகிறார்கள், மதுரை அருகிலுள்ள பொய்கைக்கரைப்பட்டி மக்கள்.

வீரர் பாலுச்சாமி

மதுரை மாவட்டம் பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் பாலுச்சாமி, நேற்று சத்தீஸ்காரில் தீவிரவாதிளுடன் நடந்த மோதலில் மரணமடைந்ததை தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி வட்டாரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

பொய்கைக்கரைப்பட்டி லட்மணனுக்கு 4 மகன்கள். மூன்றாவது மகன் பாலுச்சாமி 14 ஆண்டுகளாக இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் நக்சல் தடுப்புப் பிரிவில் வீரராக பணியாற்றி வந்தார். பஞ்சாப், அஸ்ஸாம், ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பணிபுரிந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது, இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான்பணிக்குத் திரும்பியுள்ளார்.

மனைவி மகளுடன்

இரண்டு நாட்களுக்கு முன் இரவு வரையிலும் குடும்பத்தினருடன் போனில் மகிழ்ச்சியாக பேசிய நிலையில் 24-ம் தேதி காலை மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை முன்னேற விடாமல் தடுக்க முயற்சி செய்த வீரர்கள், அவர்களுக்கு எதிராக முன்னேறிச் சென்றனர். அப்போது மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாலுச்சாமி மரணமடைந்துள்ளார். அவருடன் இணைந்து போரிட்டு காயமடைந்த சகவீரர் இந்தத் தகவலை பாலுச்சாமியின் குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளார்.

உடற்கூராய்வு முடிந்து ராணுவ வீரரின் உடல் பெங்களூரு எடுத்துவரப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக பொய்கைகரைப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பாலுச்சாமி, வேலையில் ஆர்வமும், சக வீரர்களுடன் அன்பும் கொண்டவர். அதே நேரத்தில் முகத்துக்கு நேரே எதையும் பேசி விடுகிற நேர்மையான பண்பாளர் என சக வீரர்கள் கூறியுள்ளனர். இவர் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகாமிலுள்ள வீரர்கள் அனைவருமே உணவு உண்ணாமல் கண்ணீர் வடிப்பதாக பாலுச்சாமி நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

மணமாகி இரண்டு வருடங்களிலேயே கணவனை இழந்த மனைவி அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்.



source https://www.vikatan.com/news/india/madurai-soldier-died-in-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக