Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

புதுச்சேரி: அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த சகோதரர்! - பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன். தி.மு.க எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் இருவரும் ஏற்கெனவே பா.ஜ.கவில் இணைந்துவிட்டனர். அதையடுத்து காரைக்காலில் இன்று நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன், அருள்முருகன் உள்ளிட்டோர் பா.ஜ.கவில் இணைந்தனர்.

பா.ஜ.கவின் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்

அவர்களுடன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின்  சொந்த  தம்பியான வி.பி ராமலிங்கம் அவரது மகன் ரமேஷ்  ஆகியோரும் பா.ஜ.கவில் இணைந்தனர். அதனால் சபாநாயகர் சிவக்கொழுந்துவும் பா.ஜ.கவில் இணைவார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.  இந்நிலையில்  சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து சட்டசபை செயலர் முனுசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ”எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் வகிக்கும் சட்டப்பேரவை தலைவர் பதவியை மட்டும் என் சுய முடிவின்படி ராஜினாமா செய்கிறேன். இதனை இன்றே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த கடிதத்தை சட்டசபை செயலர் முனுசாமி கவர்னர் தமிழிசைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து

பா.ஜ.கவில் அவரது சகோதரர் வி.பி ராமலிங்கம் மற்றும் அவரது மகன் ரமேஷ் ஆகியோர் இணைந்துள்ள நிலையில், சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-assembly-speaker-resigns-his-post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக