Ad

திங்கள், 3 ஏப்ரல், 2023

``கூட்டணி குறித்து மத்தியில் உள்ளவர்களே முடிவு செய்வார்கள்" - எடப்பாடி பழனிசாமி

சேலம், அண்ணா பூங்கா பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவசிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா பூங்காவிற்கு வருகை தந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக உற்சாகமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் , தாரைதப்பட்டை என பல்வேறு கிராமிய கலைகளை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியபோது, ``நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க தயாராகி வருகிறது. இதில், கூட்டணி குறித்து முடிவு செய்வது மத்தியில் உள்ளவர்களே தவிர மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்வதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர்” என்றார். மேலும், ``அ.தி.மு.க வில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை” எனவும் தெரிவித்தார்.

``எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கும் போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் அ.தி.மு.க ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனையை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது, இறுதியில் தர்மமே வெல்லும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-people-in-the-center-will-decide-about-the-alliance-eps

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக