Ad

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

மும்பை: தொடர்ந்து வழக்கு ஒத்திவைப்பு... நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய நபர்!

மும்பை மான்கூர்டு மகாராஷ்டிரா நகரில் வசித்து வருபவர் பிரதீப் சுபாஷ். 2016-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் பிரதீப் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிரதீப்பிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இச்சிறைத்தண்டனையை எதிர்த்து பிரதீப் மேல் முறையீடு செய்திருந்தார்.

இதனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனாலும் மேல்முறையீட்டு மனு தொடர்ந்து பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். உடனே, `வழக்கை விரைந்து முடித்து என்னை இவ்வழக்கில் இருந்து விடுவியுங்கள்’ என்று கத்தினார்.

கைது

அதோடு தனது கையால் அருகில் இருந்த மேஜை மீது அடித்துக்கொள்ள ஆரம்பித்தார். அந்நேரம் அருகில் செருப்பு ஒன்று கிடப்பதை பிரதீப் பார்த்தார். உடனே அந்த செருப்பை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக செருப்பு நீதிபதி மீது படவில்லை. இச்சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அருகில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் பிரதீப்பை கைது செய்தனர். அவர் மீது நீதிமன்றத்தை அவமதித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குர்லா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீதான வழக்கை தினமும் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



source https://www.vikatan.com/crime/continued-adjournment-man-throws-sandal-at-judge-in-mumbai-court-in-anger

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக