Ad

சனி, 29 மே, 2021

`கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு!’ - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவினை அறிவித்துள்ளார் அதன்படி, ``தமிழகத்தில் நோய் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு பிரிவு அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேற்படி ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் முதல்வர் கீழ்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா மரணம்

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களில் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லாது உறவினர்/ பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு வைக்கப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியையும் ஒரு சிறப்பு குழுவால் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அனைத்து நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும் நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்த குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கொண்டு அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-announces-relief-funds-for-the-childrens-who-lost-their-parents-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக