Ad

சனி, 29 மே, 2021

`அந்தப் பாட்டு சிம்பு பாடுனது செம சர்ப்ரைஸ்!' - `செல்லக்குட்டி ராசாத்தி' கதை சொல்லும் ரோஷினி

சிம்பு நடித்த `ஈஸ்வரன்' படத்தில் `செல்லக்குட்டி ராசாத்தி... போறதென்ன சூடேத்தி...' பாடல் 100 மில்லியன் வியூஸைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. தமன் இசையில் அந்தப் பாடலை எஸ்.டி.ஆர் எனும் சிம்புவுடன் இணைந்து பாடியிருப்பவர் ரோஷினி.

பின்னணிப் பாடல் துறைக்குப் புதியவரல்ல ரோஷினி. `குத்து' படத்தில் `போட்டுத் தாக்கு' பாடலை சிம்புவுடன் இணைந்து பாடியவரும் இவர்தான். இப்போது விஜய் டிவியின் முகங்களில் ஒருவர். விஜய் டிவியில் `சூப்பர் சிங்கர்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர், அடுத்து `மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியிலும் போட்டியாளர். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ரோஷினியிடம் பேசினோம்.

கணவருடன் ரோஷினி

``பிஸியா பாடிட்டிருந்த டைம்லதான் எனக்கு கல்யாணமாச்சு. கணவர் ஜாக் அமெரிக்காவுல ஐ.டி வேலையில இருந்தார். ஆறு மாச ஷார்ட் ட்ரிப்னு நினைச்சுதான் ரெண்டு பேரும் அமெரிக்கா போனோம். ஆனா, அவருக்கு புராஜெக்ட் முடியலை. அதனால சில வருஷங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாயிடுச்சு. யு.எஸ் போறதுக்கு முன்னாடி நான் பாடினது `திருடன் போலீஸ்' படத்துல `மூடு பனிக்குள்' பாட்டு. யு.எஸ் போன ரெண்டாவது வருஷமே நான் என் கரியர்ல பெரிய இடைவெளி எடுத்துக்கிட்டேன்னு புரிஞ்சது. இதை இப்படியே விட்டுடக் கூடாது, மறுபடி பாட ஆரம்பிக்கணும்னு நினைச்சபோது கன்சீவ் ஆயிட்டேன். குழந்தை, குடும்பம்னு மறுபடி எதைப் பத்தியும் யோசிக்க நேரமில்லை. பாப்பாவுக்கு ஒரு வயசானபோதுதான் மறுபடி என் கரியரை பத்தி யோசிச்சேன்!'' - இடையில் சில வருடங்கள் காணாமல் போனதன் பின்னணியோடு பேசுகிறார் ரோஷினி.

``மறுபடி பாடுற முயற்சிகளுக்காக 2018-ம் வருஷம் இந்தியா வந்தேன். எனக்கு ஏற்கெனவே வாய்ப்பு தந்த இசையமைப்பாளர்களை எல்லாம் சந்திச்சேன். ஏகப்பட்ட மியூசிக் டைரக்டர்ஸ், எக்கச்சக்கமான பாடகர்கள்னு இந்த இடைவெளியில மியூசிக் துறையில நிறைய மாற்றங்கள் வந்திருந்தது. புதுசா வாய்ப்பு தேடி போற பாடகியாகவும் இல்லாம, ஏற்கெனவே ரொம்ப பிரபலமானவங்க பட்டியல்லயும் இல்லாம ரெண்டுங்கெட்டான் இடத்துல இருந்தேன் நான். எனக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகளைக் கொடுக்கிறதுனு அவங்களுக்குமே குழப்பம். என்னை ரொம்ப தெரிஞ்ச மியூசிக் டைரக்டர்ஸ் மட்டும் சில வாய்ப்புகளைக் கொடுத்தாங்க. கணவர் யு.எஸ்ல வேலையைத் தொடர்ந்திட்டிருந்த நிலையில நானும் பாப்பாவும் மட்டும் இந்தியா வந்திருந்தோம். இங்கே எனக்கு கிடைக்கப் போற வாய்ப்புகளைப் பொறுத்துதான் நான் இந்தியாவிலயே செட்டிலாயிடறதா, மறுபடி அமெரிக்கா போறதானு முடிவெடுக்க வேண்டிய நிலை.

ரோஷினி

இந்த நிலையிலதான் எனக்கு விஜய் டிவியில `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில கலந்துக்கிற வாய்ப்பு வந்தது. நான் மறுபடி இந்தியா வந்த டைம்ல சூப்பர் சிங்கர்ல பாடி, சினிமாவுக்குள்ள வந்த பாடகர்கள் நிறைய பேர் இருந்தாங்க. நான் ஏற்கெனவே சினிமாவுல பாடியிருக்கிறதையும் இடையில ஓர் இடைவெளி வந்துட்டதையும் சொல்லித்தான் அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். என்னையும் ஒரு ஃப்ரெஷ்ஷரா நினைச்சுதான் கலந்துகிட்டேன். அதுவரைக்கும் எனக்கு போட்டிங்கிற விஷயமே பழக்கமில்லை. ஸ்கூல் படிச்ச காலத்துலேருந்து பாடிட்டிருக்கேன். என் குரல் பிடிச்சு வந்த வாய்ப்புகள்தான் எல்லாமே. யாரையும் தோற்கடிச்சு அவங்களைவிட பெட்டரா பாடி அந்த வாய்ப்பைத் தக்கவெச்சுக்க வேண்டிய நிலையே வந்ததில்லை.

அதனால சூப்பர் சிங்கர் மேடை எனக்குப் புது அனுபவமா இருந்தது. யதார்த்தம் அதுதான்னு தெரிஞ்சுதான் உள்ளே போனேன். தவிர எனக்குப் புதுசா நிறைய விஷயங்களைக் கத்துக்கணும்ங்கிற ஆர்வம் இருந்தது. சூப்பர் சிங்கர்ல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சூப்பர் சிங்கர் முடிஞ்சதும் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. பெரிய பிரேக் தரக்கூடிய வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லி வாய்ப்புகள் கேட்ட நிலை மாறி, `நீங்க வந்துட்டீங்களா, உங்களை சூப்பர் சிங்கர்ல பார்த்தோம்'னு சொல்லி வாய்ப்புகள் என்னைத் தேடி வர ஆரம்பிச்சது...'' சந்தோஷம் பகிர்பவர், `ஈஸ்வரன்' படப் பாடலையும் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் பாடியிருக்கிறார்.

ரோஷினி

``தமன் சாருக்கு தமிழ், தெலுங்குனு முன்னாடியே நிறைய படங்கள்ல பாடியிருக்கேன். இந்தியா வந்ததும் நான் சந்திச்ச முதல் மியூசிக் டைரக்டர் அவர்தான். கோரஸ், ட்ராக்னு அவர் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கொடுத்திட்டிருந்தார். அப்படித்தான் `ஈஸ்வரன்' படத்துல பாடுற வாய்ப்பு வந்தது. வாய்ப்பு வரும்போது என்ன படம், யார் படம்னெல்லாம் நான் கேட்க மாட்டேன். அப்படித்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம `செல்லக்குட்டி ராசாத்தி' பாட்டையும் பாடிட்டு வந்துட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு அதுல ஒரு கரெக்ஷன் இருந்ததுனு கூப்பிட்டாங்க. அப்பதான் அது எஸ்.டி.ஆர் படம்னு தெரிஞ்சது. அப்புறம் ஒருநாள் தமன் சார் போன் பண்ணி, `உங்க வாய்ஸைதான் யூஸ் பண்றோம், பாட்டு நல்லா வந்திருக்கு'னு சொன்னபோது சந்தோஷமா இருந்தது.

அதுக்கு முன்னாடி நான் பாடின பல பாடல்கள் ரிலீஸாகாமப் போயிருக்கு. இந்தப் பாட்டு ரிலீஸானா சூப்பரா இருக்குமேனு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். எஸ்.டி.ஆரும் சேர்ந்து பாடியிருக்கார்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷமாயிட்டேன். செம சர்ப்ரைஸ். ஏன்னா இதுக்கு முன் எனக்குப் பெயர் வாங்கித் தந்த `போட்டுத் தாக்கு' பாட்டும் நானும் எஸ்.டி.ஆரும் சேர்ந்து பாடினதுதான்'' - எஸ்.டி.ஆர். காம்போ இரண்டாவது முறையும் வொர்க் அவுட் ஆனதில் ரோஷினி செம ஹேப்பி. ஆனால், இதுவரை எஸ்.டி.ஆரை சந்திக்க முடியாததில் அவருக்கு சின்ன வருத்தம்.

மகள் மற்றும் கணவருடன் ரோஷினி

``இந்தப் பாட்டு 100 மில்லியன் வியூஸைத் தாண்டி ஹிட்டடிக்கும்னு அப்போ எதிர்பார்க்கலை. `ஈஸ்வரன்' படம் ரிலீஸானதும் சோஷியல் மீடியாவில் நிறைய பேர் இந்தப் பாட்டை பாராட்டிட்டே இருந்தாங்க. என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டினாங்க. எதிர்பார்க்காத இந்த வெற்றி திக்குமுக்காட வைக்குது. சூப்பர் சிங்கர்ல நான் கலந்துகிட்டதால விஜய் டிவியோட `மிஸ்டர் அண்ட் மிஸஸ்' சின்னத்திரைக்கும் கூப்பிட்டாங்க. சூப்பர் சிங்கர்ல பாடினபோது சில எபிசோடுக்கு என் ஹஸ்பண்ட் வந்திருந்தார். எங்களைப் பத்தி ஏவியெல்லாம் போட்டாங்க. ஜாக் அப்பவே ஓரளவுக்குத் தெரிஞ்ச முகமாயிட்டார். கூச்ச சுபாவியான ஜாக், இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கலகலப்பான நபரா மாறியிருக்கார். பாப்பா தியாவுக்கு ஏழு வயசாகுது. இப்போ மறுபடி இந்தியாவுலயே செட்டிலாயிட்டோம். சில படங்கள்ல பாடியிருக்கேன். இண்டிபென்டென்ட் மியூசிக், மாடலிங்னு நிறைய பிளான்ஸ் இருக்கு. பார்ப்போம்!''

செகண்ட் இன்னிங்ஸில் சக்சஸ் ஆக வாழ்த்துகள் ரோஷினி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/singer-roshini-shares-about-chella-kutty-rasathi-song-experience-and-her-life-journey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக