Ad

சனி, 29 மே, 2021

`இனி கேரளாவின் வயநாட்டிலும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் செல்லும்!' - தமிழக அரசு அறிவிப்பு

உயர் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறைவாக உள்ள நீலகிரி மாவட்ட மக்கள் பெரும்பாலும் கர்நாடகாவின் மைசூரு, கேரளாவின் வயநாடு மற்றும் அருகில் உள்ள கோவை மாவட்டத்தையே மருத்துவத் தேவைக்கு நம்பி உள்ளனர். தற்போது நீலகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

ஊட்டி அரசு மருத்துவமனை

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி மக்கள் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தமிழக அரசு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடு குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினோம். ``நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தொற்று பாதித்தவர்களுக்கு உதவிடும் வகையில் நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட எல்லைகளில் உள்ள கேரளா மாநிலத்திலும் சேர்த்து 9 தனியார் மருத்துவமனைகளில் 656 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் கேரளாவில் உள்ள இரு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கேரளாவின் வயநாட்டில் உள்ள வயநாடு இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் 360 படுக்கைகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெற சாஜித்- 9048115044 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். வயநாடு விநாயகா மருத்துவமனையில் 100 படுக்கைகள் உள்ளன, இங்கு சிகிச்சை பெற விஷ்ணு மோகன்- 9787304403 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு படுக்கை வசதிகள் குறித்து அறிந்து கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இந்த 9 தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். இதுகுறித்து சந்தேகம் இருந்தால் நீலகிரி மாவட்ட திட்ட அலுவலரை 7373004241 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழலில் மக்களின் நலனுக்காக கேரளாவிலும் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்தது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/tn-govt-announces-that-hereafter-cm-insurance-scheme-is-valid-in-wayanad-too

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக