Ad

புதன், 17 பிப்ரவரி, 2021

`என் முன்னால சரிக்குச் சமமா பீடி குடிப்பியா?’ - தேனியில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது டொம்புச்சேரி கிராமம். பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில், அடிக்கடி பட்டியல் இன சமுதாய மக்களை, மற்றொரு சமுதாய மக்கள் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது, பட்டியல் இன சமுதாய நபர் ஒருவர் அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

காயமடைந்த பழனிச்சாமி

Also Read: தேனி: தாய் கண்முன்னே மகனும்... கணவர் கண்முன்னே மனைவியும் சாலை விபத்தில் பலி!

டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது24). அக்கிராமத்தில் உள்ள பட்டியல் இன சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அடிக்கடி பிரச்னைகள் செய்வதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, அப்பகுதிக்குள் நுழைந்த அலெக்ஸ்பாண்டியன், மரத்தடியில் அமர்ந்து பீடி புகைத்துக்கொண்டிருந்த பழனிச்சாமி (வயது 45) என்பவர், அருகே சென்று அமர்ந்துள்ளார். தொடர்ந்து, தனக்கும் பீடி வேண்டும் என கேட்க, உடனே, தன்னிடம் இருந்த பீடியை அவரிடம் கொடுத்துள்ளார் பழனிச்சாமி.

கைது செய்யப்பட்ட அலெக்ஸ்பாண்டியன்

Also Read: தேனி: பன்றி தழுவும் போட்டி - மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் 17 நாள்களுக்குப் பிறகு வழக்கு!

பீடியை பற்றவைத்த அலெக்ஸ்பாண்டியன், திடீரென தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து, `என் முன்னால சரிக்கு சமமா பீடி குடிப்பியா?’ என கேட்டவாறு பழனிச்சாமியின் சமுதாயத்தைப் பற்றி இழிவாக பேசி, அவரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில், இடது காது மற்றும் அதன் கீழ்ப் பகுதி மற்றும் கழுத்துப் பகுதி, கைகளில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், பழனிச்சாமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, விசாரித்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அலெக்ஸ்பாண்டியனைக் கைது செய்தனர்.



source https://www.vikatan.com/news/crime/theni-police-arrests-man-over-caste-discrimination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக