Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

IND v NZ: பேரழிவிற்குக் காரணமான அந்த ஒரு முடிவு... இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு?!

மீண்டும் ஒரு மோசமான தோல்வி. நியூசிலாந்துக்கு எதிராக ஐ.சி.சி தொடரில் இந்திய அணி மீண்டும் சொதப்பியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இது மூன்றாவது முறை. 2019 உலகக்கோப்பையை போல, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை போல, இந்த டி20 உலகக்கோப்பையிலும் வென்றே ஆக வேண்டிய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தோற்றிருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. 111 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 15 ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டது. இந்திய அணி போட்டியே அளிக்கவில்லை. இந்த மோசமான தோல்விக்கான காரணம் என்ன?

டாஸிலேயே இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனே டாஸை வென்று சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

இந்த டி20 உலகக்கோப்பையில் துபாய் மைதானத்தில் இந்த போட்டிக்கு முன்பு வரை 6 போட்டிகள் நடந்திருக்கின்றன. அந்த 6 போட்டிகளிலும் ஸ்கோரை சேஸ் செய்த அணியே வென்றிருக்கிறது.

6 போட்டிகளில் 5 போட்டிகளில் டாஸை வென்ற கேப்டன்கள் சேஸிங்கைத் தேர்வு செய்து போட்டியை வென்றிருக்கின்றனர். ஒரே ஒரு போட்டியில் டாஸை வென்றும் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பேட்டிங்கைத் தேர்வு செய்திருப்பார். பாகிஸ்தானுக்கு எதிராக அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றிருக்கும். ஆக, துபாய் மைதானத்தில் சேஸ் செய்யும் அணிகளுக்கு 100% வாய்ப்பு இருந்தது. டாஸில் இந்தியா தோற்று முதல் பேட்டிங்கை செய்ய வேண்டும் என்ற போதே இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியிலும் கோலி டாஸை தோற்றிருந்தார். இந்தியா முதலில் பேட் செய்திருந்தது. போட்டியை தோற்றிருந்தது. டாஸ் இங்கே ரொம்பவே முக்கியம். ஆனால், டாஸ் தோல்விக்கு கோலியையோ இந்திய அணியையோ துளி கூட குறை சொல்ல முடியாது. இங்கே சில முடிவுகளும், போராட்டமே இல்லாமல் தோற்கும் இந்திய அணியின் அணுகுமுறையும்தான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

நேற்றைய போட்டியில் ப்ளேயிங் லெவனில் இந்திய அணி இரண்டு மாற்றங்கள் செய்திருந்தது.

Ishan Kishan
காயமுற்ற சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இஷன் கிஷன் உள்ளே வந்திருந்தார். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் உள்ளே வந்திருந்தார். இந்த இரண்டு மாற்றங்களுமே எதிர்பார்த்ததுதான். பல முன்னாள் வீரர்களும் இந்திய அணி இந்த மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால், இந்த மாற்றத்திற்காக பேட்டிங் ஆர்டரில் நிகழ்த்தப்பட்ட குழப்பத்தைத்தான் சகித்துக் கொள்ளவே முடியாது.

இஷன் கிஷன் அணிக்குள் வருகிறார் என்றவுடன் அவரை ஓப்பனராக இறக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். இதற்கு வலுவான பின்னணியும் இருக்கிறது. நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் இஷன் கிஷன் மிடில் ஆர்டரில் இறங்கி வரிசையாக பல போட்டிகளிலும் சொதப்பியிருந்தார். அப்போது அவருக்கு ஒரு இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் போது இஷன் கிஷனை ரோஹித் ஓப்பனராக்கியிருப்பார். ஓப்பனரானவுடன் இஷன் கிஷன் அடித்து வெளுத்து நல்ல ஃபார்மிற்குத் திரும்பியிருப்பார். ஆக, இஷன் கிஷனுக்கு ஓப்பனிங் இறங்குவதில் ஒரு சௌகரியம் இருந்தது. மேலும், ஐ.பி.எல் நடைபெறும் போதே உன்னை ஓப்பனிங் ஆப்சனாகவே பார்க்கிறோம் என கோலியும் இஷன் கிஷனுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தார். இதுபோக, இஷன் கிஷன் இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்டை சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற கணக்குகளும் ஓடியிருக்கும். இரண்டு பேரும் ஒரே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதெல்லாம் சரிதான், ஆனால்...

இஷன் கிஷனை ஓப்பனிங் இறக்குவதற்காக டாப் ஆர்டரில் நடந்த குளறுபடி இருக்கிறதே அதுதான் இங்கே பிரச்னை.
ரோஹித் சர்மா

இஷன் கிஷனுக்காக ஓப்பனரான ரோஹித் நம்பர் 3 இல் இறக்கப்பட்டார். கோலி தனது இடத்தை விட்டுக் கொடுத்து நம்பர் 4 க்கு சென்றார். ஓப்பனிங்கில் புதிய கூட்டணியாக ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி களமிறங்கியது. இந்த மூன்று முடிவுகளுமே இதற்கு முன் நிரூபிக்கப்படாதவை அல்லது தவறென நிரூபிக்கப்பட்டவை. ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி பெரிதாக முயன்று பார்க்காத கூட்டணி.

இதற்கு முன் இங்கிலாந்து சீரிஸில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி ஓப்பனிங் இறங்கியிருந்தது. அந்தப் போட்டியில் ராகுல் டக் அவுட் ஆகியிருப்பார்.

ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கும் என்பதற்கு தரவுகளே இல்லை. ரோஹித் சர்மா ஓப்பனிங் இல்லாமல் ஆர்டரை இறக்கிக் கொண்டு நம்பர் 3&4 இல் கடைசியாக எப்போது வந்தார் என்றே ஞாபகம் இல்லை. இந்திய அணிக்காக 100 க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோஹித் சர்மா மூன்றே மூன்று போட்டிகளில் மட்டுமே நம்பர் 3 இல் இறங்கியிருக்கிறார். 7 போட்டிகளில் மட்டுமே நம்பர் 4 இல் இறங்கியிருக்கிறார். அதுவும் வெகு சமீபத்தில் இல்லை.

டி20 போட்டிகளை பொறுத்தவரைக்கும் ஓப்பனிங் அல்லது நம்பர் 3 இதுதான் கோலியின் ஆஸ்தான இடம். அதைவிட்டு கோலி நம்பர் 4 இல் இறங்கியிருந்தார். கடந்த போட்டியில் ஒட்டுமொத்த அணியும் சொதப்பியபோது நம்பர் 3 இல் இறங்கியிருந்த கோலி மட்டுமே நின்று ஆடியிருந்தார். மற்ற வீரர்களுக்காக கோலி தனது ஆர்டரை மாற்றிக்கொள்ளும் போது பெரும்பாலான சமயங்களில் சொதபியிருக்கவே செய்கிறார். நேற்றும் சொதப்பினார். வென்றே ஆக வேண்டிய போட்டியில் அதுவும் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக இப்படி அதிகம் நிரூபிக்கப்படாத ஆப்சன்களோடு களமிறங்கியது பெரும் பின்னடைவாகிப் போனது.

ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி மூன்று ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. ட்ரென்ட் போல்டை சாமர்த்தியமாக எதிர்கொள்வார் என அனுப்பப்பட்ட இஷன் கிஷன் அவரின் பந்திலேயே அவுட் ஆகியிருந்தார். ரோஹித் சர்மா ட்ரென்ட் போல்டின் ஒரே ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டார். அந்த ஒரு பந்திலும் மில்னே கேட்ச் ட்ராப் செய்திருந்தார். ட்ரென்ட் போல்டுக்காக ரோஹித்தை கோலி நம்பர் 3 ஆக்கியிருந்தால் கோலியின் அடிப்படை போர்க்குணத்தின் மீதே கேள்வி எழுகிறது.

போல்ட் - கோலி

என ட்ரென்ட் போல்ட் போட்டிக்கு முன்பான ப்ரஸ் மீட்டில் பேசியிருப்பார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கோலி,

என பேசியிருந்தார். ரோஹித்தை நம்பர் 3 க்கு இறக்கியதில் என்ன அட்டாக்கிங் மனோபாவத்தை இந்திய அணி வெளிக்காட்டியது? போல்டுக்கு எதிராக சீனியர் பேட்ஸ்மேனை பதுக்கி வைத்து இந்திய அணி டிஃபன்ஸிவ்வாக மட்டுமே யோசித்திருந்தது. இது கோலியின் குணாதிசயமே கிடையாதே! மேலும், அவருக்கு சரி வராத ஒரு இடத்தில் இறக்கி சொதப்பவும் வைத்திருந்தது.

கோலி 5.5 வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்திரிந்தார். 10.1 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். மொத்தம் 26 பந்துகள். இந்த 26 பந்துகளில் கோலி மட்டுமே 17 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். காரணம், ஸ்பின்னர்கள். பவர்ப்ளே முடிந்தவுடன் இரண்டு எண்ட்டில் இருந்துமே இஷ் சோதி, சாண்ட்னர் என ஸ்பின்னர்களை வைத்து வில்லியம்சன் அட்டாக் செய்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலியின் அணுகுமுறை சமீபமாக சுமாராகவே இருக்கிறது.

Also Read: "காரியம் துணை" எனக் களத்தில் பேசும் கேமியோ நாயகன்... பினிஷர் ஆசிஃப் அலியின் சக்சஸ் ஸ்டோரி!

விராட் கோலி

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த பேட்ஸ்மேன்களில் கோலியும் ஒருவர். இப்படியான நிலையில் இரண்டு எண்ட்டில் இருந்தும் ஸ்பின்னர்களை எதிர்கொண்டதாலயே கோலியால் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் கூட ஆடியிருக்க முடியவில்லை. கடைசியில் லெக் ஸ்பின்னரான இஷ் சோதியிடமே வீழ்ந்திருந்தார். ஒருவேளை கோலி நம்பர் 3 இல் இறங்கியிருந்தால் இரண்டு எண்ட்டில் இருந்தும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்காது.

இஷன் கிஷனுக்காக பேட்டிங் ஆர்டரில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களே இந்திய அணிக்கு பேரழிவாக அமைந்தது. உலகக்கோப்பையில் முக்கியமான போட்டியில் இப்படியான ஏற்கெனவே நிரூபிக்கப்படாத மாற்றங்களைச் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. Do or die போட்டியில் இப்படி மாற்றங்கள் செய்வதே பாவம். ஆனாலும், அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட மாற்றங்களாக இருந்திருந்தால் பாதிப்பையாவது கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம். ரோஹித் சர்மா-இஷன் கிஷன் ஓப்பனிங், நம்பர் 3 இல் கோலி, நம்பர் 4 இல் ராகுல் என இறக்கப்பட்டிருந்தால் சேதாரம் குறைந்திருக்கக்கூடும். ஏனெனில் மூன்றுமே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டவை. ரோஹித் - இஷன் கிஷன் கூட்டணி ஐ.பி.எல் இல் ஓப்பனிங் இறங்கிய அனுபவம் இருக்கிறது. நம்பர் 3 கோலி ஆட்சி செய்யும் இடம். இந்திய அணிக்காக நம்பர் 4 இல் ராகுல் ஏற்கெனவே கலக்கியிருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் வெற்றிகரமாக கேப்டன்சி செய்திருக்கும் தோனியின் அனுபவத்திற்காகவே அவர் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இப்படியான முக்கியமான போட்டிகளில் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அணிக்கு உதவுவதற்காகவே தோனி வரவழைக்கப்பட்டார். ஆனால்,

ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்
ஆலோசகர் தோனி, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி என மூவரும் இணைந்து செய்த மாற்றங்கள் எதுவுமே இந்திய அணிக்கு நல்ல பலனை தரவில்லை என்பதே உண்மை.

பேட்டிங்கில் இவ்வளவு குழப்பமும் சொதப்பலும் அரங்கேறிய பிறகு பந்துவீச்சை பற்றி பேசி பலனில்லை. ஆனாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு துளி கூட தடுமாற்றத்தை கொடுக்கவே இல்லை. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்கள். இரண்டையுமே பும்ரா மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

Also Read: IND v NZ: ஏறக்குறைய `நாக் அவுட்'... இந்தியா அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக்க என்ன செய்யவேண்டும்?

கோலி-வில்லியம்சன்

நியுசிலாந்து அணி ரொம்பவே எளிதாக 15 வது ஓவரிலேயே டார்கெட்டை சேஸ் செய்துவிட்டது. இந்தியாவின் ரன்ரேட்டும் பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறது. இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக சாத்தியமில்லை என சொல்ல முடியாது. இந்தியா அடுத்து வரும் போட்டிகளில் பெரிதாக வெல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை அப்செட் செய்ய வேண்டும்... அதன்பிறகு இந்தியா நமீபியாவை... என எக்கச்சக்க சிக்கலான கணக்குகள் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே இந்தியாவிற்கு ஒரு வாய்ப்புண்டு.



source https://sports.vikatan.com/cricket/indias-semi-final-chances-are-bleak-after-their-defeat-against-newzealand

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக