Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

சசிகலா: 3 நாள்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு; முக்கியஸ்தரின் மறைமுக ஆதரவு?! -பரபரக்கும் அதிமுக

சசிகலாவை முன் வைத்து அதிமுகவுக்குள் நடைபெற்று வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், தஞ்சாவூரில் தங்கியிருந்த படி சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் வீட்டிலிருந்தபடியே இன்று மதியத்திலிருந்து மூன்று நாள்கள் தனது ஆதரவாளர்களை சந்திப்பதுடன் அவர்களுடன் போட்டோ எடுத்து கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிமுக-வில் பரபரப்பை கூட்டியுள்ளது.

சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்கள்

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் நடைபெற்ற தினகரன் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த சசிகலா, அருளானந்த நகர் அருகே பரிசுத்தம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான இல்லத்தில் தங்கியிருந்தபடி தனது சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

28ம் தேதி தஞ்சாவூரிலிருந்து மதுரை சென்றவர் அங்கிருந்தப்படி 29-ம் தேதி கமுதி,பசும்பொன்னிற்கு சென்று தேவர் சமாதியில் மரியாதை செய்து விட்டு மீண்டும் தஞ்சாவூர் திரும்பினார்.

சுற்றுப்பயணத்தில் சசிகலா

இது குறித்து சசிகலா தரப்பில் சிலரிடம் பேசினோம், ``அதிமுகவில் தனக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டிருந்தாலும் நிதானமாகவே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா பயன்படுத்திய காரினை தொடர்ந்து பிரசாரம் வாகனத்தையும் தனது சுற்றுப் பயணத்தில் பயன்படுத்த தொடங்க இருக்கிறார். ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவான கருத்தை கூறிய பிறகு முன்னாள் அமைச்சர்கள் சிலர் சசிகலாவிடம் போனில் பேசியதாக தெரிகிறது. அவங்ககிட்ட எதையும் கொஞ்சம் பொறுமையாகவே செய்ய வேண்டும் நான் சொல்கிற வரை காத்திருங்கனு கூறியதாக தெரிகிறது.

Also Read: `100 பவுன்சர்கள் முதல் ஓபிஎஸ் தம்பியின் எதிர்பாரா என்ட்ரி வரை!'- தினகரன் வீட்டு விசேஷ ஹைலைட்ஸ்.

அதிமுகவில் சோழ மண்டலத் தளபதி என அழைக்கப்படும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில் தனது சம்மந்தி தவமணி மூலம் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டி வருவதாக வெளியான தகவல் சசிகலாவை உற்சாகம் கொள்ள வைத்துள்ளதாம். மதுரையிலிருந்து பசும்பொன் சென்ற போது மானாமதுரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலை ஒரத்தில் நின்ற ஆதரவாளர்கள் சால்வை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

தொண்டர் படை

அதே போல் 132 இடங்களில் சசிகலாவின் வாகனத்தை மறித்து மரியாதை செய்ததும் சசிகலாவுக்கு பெரும் நம்பிக்கையினை கொடுத்துள்ளது. இந்த சூழலில் தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சசிகலாவின் உதவியாளர் கார்த்தி பலருக்கு போன் செய்து 1-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. நீங்க வர வேண்டும் இடத்தை பின்னர் சொல்கிறேன் என சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

Also Read: ``அதிமுக என்ற யானை மீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!" - போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்

ஆனால் தற்போது ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டாம். ஆதரவாளர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாட்டை மட்டும் செய்யுங்க என சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா ரொம்பவே நிதானமாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. மதியம் வீட்டிலிருந்தபடியே தனது ஆதரவாளர்களை சந்திக்கும் சசிகலா போட்டோவும் எடுத்து கொள்கிறார். இதையடுத்து 2 மற்றும் 5ம் தேதியும் தொண்டர்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாட்டை இளவரசி மகன் விவேக், சசிகலா கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜூ உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

இதற்காக ஜெயா டிவி லைவ் வாகனம் மற்றும் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தொண்டர் படை தயார் நிலையில் உள்ளது. தீபாவளி அன்றும், அதற்கு முதல் நாளும் தொண்டர்களை சந்திக்க வில்லை. 5-ம் தேதிக்கு பிறகு சென்னை புறப்படும் சசிகலா சில நாள்களுக்கு பிறகு பயணங்களை திட்டமிட்டு கொண்டு மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அப்போதிலிருந்து சசிகலா வேகம் காட்டுவார்” என தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/sasikala-plans-to-meet-the-supporters-and-take-photos-with-them

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக