Ad

சனி, 30 அக்டோபர், 2021

ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிப்பு! - காத்திருந்து அழைத்துச் சென்ற ஷாருக் கான், கௌரி கான்

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கானின் மூத்த மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் கிடைத்தும் உடனே விடுதலையாக முடியவில்லை. ஜாமீன் உத்தரவு நகல் வெள்ளிக்கிழமைதான் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஜாமீன் நகல் ஷாருக் கான் தரப்பு வழக்கறிஞர்களிடம் கிடைத்தது. அதனை எடுத்து சென்று சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்து விடுதலை உத்தரவை வாங்கிச்சென்று ஆர்யன்கான் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்ரோடு சிறையில் மாலை 5.30 மணிக்குள் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் சட்ட நடைமுறைகள் முடிந்து ஜாமீன் உத்தரவு விடுதலை நகல், உத்தரவாத ஆவணங்களை சிறையில் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் வெள்ளிக்கிழமை ஆர்யனால் சிறையில் இருந்து வெளியில் வர முடியவில்லை. வெள்ளிக்கிழமையே ஆர்யன் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கையில் ஆர்தர் ரோடு சிறை வாசல் மற்றும் ஷாருக் கானின் மன்னத் இல்லத்திற்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

ஷாருக்கான் இல்லத்திற்கு முன்பு ரசிகர்கள்

கூட்டத்தை கட்டுப்படுத்த இரண்டு இடங்களிலும் போலீஸார் நிறுத்தப்பட்டு இருந்தனர். வழக்கமாக ஆர்தர் ரோடு சிறை வாயிலில் ஜாமீன் ஆவணங்களை போடுவதற்காக ஒரு பாக்ஸ் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாக்ஸ் தினமும் 4 முறை திறக்கப்படும். ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு இறுதியாக திறக்கப்படும். 5.30 மணிக்கு கிடைக்கும் ஜாமீன் ஆவணங்களை ஆய்வு செய்து சிறை நிர்வாகம் மாலை 7.30 மணிக்கு கைதிகளை விடுதலை செய்வர். ஆர்யன் தரப்பு வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பிறகுதான் ஜாமீன் தொடர்பான விடுதலை ஆவணங்களை பெட்டியில் போட்டனர். காலை 5.30 மணிக்கு பெட்டியை திறந்த அதிகாரிகள் அவற்றை எடுத்து ஆர்யனை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்யன் விடுதலைக்காக ஷாருக் கானின் நீண்ட கால தோழி நடிகை ஜுஹி சாவ்லா ஒரு லட்சத்திற்கான உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்துப்போட்டுள்ளார். நடிகர் ஷாருக் கானும் அவரின் மனைவி கெளரி கானும் தங்களது மகனை சிறையில் இருந்து அழைத்து வர வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

சிறைக்கு வெளியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

சிறையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஷாருக் கான் தனது மனைவியுடன் காரில் மகனின் வரவுக்காக காத்திருந்தார். ஷாருக் கானின் பாதுகாவலர்கள் சிறை வாசலில் ஆர்யனுக்காக காத்திருந்தனர். ஆர்யன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் ஷாருக் கான் பாதுகாப்பான ஆர்யனை ஷாருக் கானின் காருக்கு அழைத்து சென்றனர். கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். ஆர்யன் ஜாமீனில் வெளி வருவதையொட்டு மன்னத் பங்களாவில் வெள்ளிக்கிழமை தீபாவளிக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த மின் விளக்குகள் எரியவிடப்பட்டது.



source https://www.vikatan.com/news/india/shah-rukh-khans-son-aryan-released-from-mumbai-arthur-road-jail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக