Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

Doctor Vikatan: உறவினர்களின் அடுத்தடுத்த புற்றுநோய் மரணங்கள்; எனக்கும் பாதிப்பு ஏற்படுமா?

என் உறவினர்கள் நிறைய பேர் சமீபத்தில் அடுத்தடுத்து புற்றுநோய் பாதித்து இறந்துவிட்டார்கள். அவற்றைப் பார்த்ததிலிருந்து எனக்கு பயம் அதிகரித்துவிட்டது. எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ இந்த நோய் வந்துவிடுமோ என பயப்படுகிறேன். இந்த பயம் நீங்கி, நான் ஆரோக்கியமாக வாழ ஆலோசனை சொல்லுங்கள்.

- சாரா பானு (விகடன் இணையத்திலிருந்து)

உளவியல் நிபுணர். சித்ரா அர்விந்த்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த்.

``நம் உறவினர்கள், நண்பர்களில் யாருக்காவது ஏதேனும் உடல்நல பாதிப்பு ஏற்படும்போது அந்தப் பாதிப்பு நமக்கும் வந்துவிடுமோ என பயப்படுவது சாதாரணமானதுதான். பேய்ப்படம் பார்க்கும் சிலருக்கு சில நாள்களுக்கு பேய் பயம் இருப்பதும், பிறகு அது தானாகச் சரியாவதும் போன்றதுதான் இந்த நினைப்பும். கொரோனாவாகட்டும், புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களாகட்டும்... நமக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களைத் தாக்கும்போது அது குறித்த பயம் நம்மையும் சில நாள்களுக்குத் தொற்றிக்கொள்ளும். அது தானாக மறைந்துவிடும். ஆனால், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த பயம் நம்முடனேயே தங்கிவிடும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கலாம்.

Also Read: Covid Questions: புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

அவற்றை யோசிக்காமல் நம் கட்டுப்பாட்டில் உள்ளவற்றை மட்டும் யோசிப்பதுதான் ஆரோக்கியமானது. ஒருவருக்கு ஒரு நோய் பாதிக்க உடல்ரீதியான காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள், பிற காரணங்கள் எனப் பல இருக்கலாம்.

நோய் வராமலிருக்க சரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதுதான் நம்மால் செய்ய முடிந்தது. தேவையற்ற பயத்தைத் தவிருங்கள். பயம் நீங்க ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். சரியான நேரத்துக்குத் தூங்குவது, சரிவிகித ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி போன்றவை மிக முக்கியம். மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க பாசிட்டிவ் சிந்தனை மிக முக்கியம். நெகட்டிவ்வான விஷயங்களை நினைத்து பயப்படுவது நம் மனதின் இயல்பு.

Cancer

Also Read: `மெட்டி ஒலி' உமாவின் உயிரைப் பறித்த மஞ்சள் காமாலை; யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

ஆனால் அதை மாற்றி, தேவையில்லாத காழ்ப்புணர்ச்சி, பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இடம்கொடுக்காமல், நமக்குக் கிடைத்தவற்றுக்கு நன்றி உணர்வுடன் வாழ்க்கையை அணுகப் பழக வேண்டும். மன உளைச்சல் உங்களை ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலையிடம், குடும்பம் என எல்லாவற்றிலும் சந்தோஷமான, நிறைவான சூழலை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்த பாசிட்டிவ் அணுகுமுறை நிச்சயம் உங்களை நோய்களிலிருந்தும் காக்கும். `சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்' என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள். என்றோ இறக்கப் போகிற நாளை நினைத்து நிகழ்கால சந்தோஷங்களை இழக்காதீர்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/many-of-my-relatives-passed-away-due-to-cancer-will-i-also-get-affected

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக