Ad

புதன், 27 அக்டோபர், 2021

ஆர்யன் கான் பிடிபட்ட போது செல்ஃபி... தலைமறைவாக இருந்த முக்கிய சாட்சி புனேயில் கைது! - அடுத்து என்ன?

மும்பையில் இம்மாத தொடக்கத்தில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணர் கேபி கொசாவி என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். கொசாவி சாட்சியாக சேர்க்கப்பட்ட ஓரிரு நாளில் தலைமறைவாகிவிட்டார். கொசாவி மீது புனே போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை இவ்வழக்கில் தேடி வந்தனர். ஆர்யன் கான் பிடிபட்ட போது அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கொசாவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

ஆர்யனுடன் கொசாவி

கொசாவி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயுடன் சேர்ந்து கொண்டு ஷாருக் கான் மகனை விடுவிக்க பண பேரத்தில் ஈடுபட்டதாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு சாட்சியான பிரபாகர் என்பவர் தெரிவித்திருந்தார். அதோடு ரூ.50 லட்சத்தை ஷாருக் கான் செயலாளர் பூஜாவிடம் வாங்கியதாகவும் தெரிவித்தார். இதனால் கொசாவியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கொசாவி உத்தரப்பிரதேசத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லக்னோ போலீஸில் சரணடைய முயன்றார். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் புனேயில் கொசாவி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவித்தார். கொசாவி பிடிபட்டு இருப்பதால் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீர் வான்கடே பாலிவுட் பிரபலங்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், போலி வழக்குகளை பதிவு செய்ததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கும் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: `ஷாருக் கான் தொடங்கி அனுராக் காஷ்யப் வரை..!’ -சமீர் ரேடாரில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள் யார், யார்?

இந்த குற்றச்சாட்டு குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். புனேயில் கைது செய்யப்பட்டுள்ள கொசாவியை மும்பைக்கு அழைத்து வந்து சமீர் வான்கடே மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தவிர போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் சமீர் வான்கடேயிம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். சமீர் வான்கடே மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக வந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்தனர்.



source https://www.vikatan.com/news/india/witness-who-was-the-mastermind-in-the-aryan-case-was-arrested-in-pune

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக