Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

சொத்து பத்திர விஷயத்தில் இவ்வளவு அலட்சியமா; சென்னை மோசடி சம்பவம் உணர்த்தும் உண்மைகள் என்ன?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துளசி வம்சி கிருஷ்ணா என்பவரை, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலமுருகன், தனது நான்கு நண்பர்களின் உதவியுடன் கடத்திச் சென்று, அவர் பெயரில் இருந்த நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தல் சம்பவத்தின் பின்னணி!

எம்.பி.ஏ பட்டதாரியான துளசி வம்சி கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் சுமார் 49,497 சதுர அடி நிலம் உள்ளது. இந்தச் சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 கோடி. இந்த நிலத்தை விற்கும் முயற்சியில், அவ்வப்போது சென்னைக்கு வந்தபோது, பாலமுருகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். தனது நிலத்தை விற்றுத் தருவதற்காக, பாலமுருகனிடம் அதற்கான ஆவணங்களைத் துளசி வம்சி கிருஷ்ணா கொடுத்து சென்றுள்ளார். அந்த ஆவணங்களை 32 லட்சம் ரூபாய்க்கு, பாலமுருகன் அடகு வைத்திருப்பது துளசி வம்சி கிருஷ்ணாவுக்கு பிறகுதான் தெரியவந்தது.

ரியல் எஸ்டேட்

Also Read: இறந்துபோனவரின் நிதி சார்ந்த ஆவணங்கள்..! என்ன செய்ய வேண்டும், ஏன் பாதுகாக்க வேண்டும்?

இதை அறிந்து, சொத்து ஆவணங்களைத் திரும்பத் தருமாறு துளசி வம்சி கிருஷ்ணா கேட்டுள்ளார். அப்போது ஆட்களை வைத்து மிரட்டி, துளசி வம்சி கிருஷ்ணாவைக் கடத்திச் சென்று, சொத்தைத் தன் பெயருக்கு எழுதித் தர வேண்டும் அல்லது 10 கோடி ரூபாய் தர வேண்டும் என பாலமுருகன் மிரட்டியுள்ளார். இதற்காக துளசி வம்சி கிருஷ்ணாவை, 40 நாள்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து, நிலத்தைப் பிடுங்கும் முயற்சியில் பாலமுருகனும், அவரின் கூட்டாளிகளும் ஈடுபட்டுள்ளனர். துளசியை அடைத்து வைத்துள்ள அறையில் இருந்தவர்கள் குடிபோதையில் துாங்கிவிட்டதால், அவர்களிடம் இருந்த மொபைல் போனை எடுத்து, தன் தாய்க்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் தாய் ரூபா, காவல்துறையிடம் புகார் தெரிவிக்க, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதியில் துளசி வம்சி கிருஷ்ணா அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டிருக்கிறார். அவரை கடத்திச் சென்ற பாலமுருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பத்திரங்களைப் பத்திரமாக வைத்திருங்கள்!

ஒரு சொத்தின் ஆவணங்களை ஏன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும், சொத்து ஆவணங்களை யாரிடம் கொடுக்கலாம், யாரிடம் கொடுக்கக் கூடாது என்பது குறித்தும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமனிடம் பேசினோம்.

``துளசி வம்சி கிருஷ்ணாவுக்கு நிகழ்ந்த சம்பவத்தைப்போல பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்த நண்பரின் குடும்பத்துக்கும் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது. அவரது பெயர் ராஜா. அவர் ஒரு நாள், தனக்குச் சொந்தமான வீட்டுப் பத்திரத்தை, அவருடைய நண்பர் குமாரிடம் கொடுத்து, வங்கி லாக்கரில் வைக்கச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை தன் மகன்களிடமோ, மற்ற குடும்ப உறுப்பினர்களிடமோகூட ராஜா சொல்லவில்லை.

அழகுராமன்

சில வருடங்கள் கழித்து அவர் இறந்துபோக, லாக்கரில் வைத்திருந்த பத்திரத்தை எடுத்த குமார், தனது தொழிலுக்குத் தேவையான மூலதனத்துக்காக அதை அடமானமாக வைத்து கடன் பெற்றிருக்கிறார். இதற்கிடையில் ராஜாவின் வாரிசுகள், ஒரிஜினல் பத்திரம் இல்லாமலேயே இன்னொருவருக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய, அந்த வீட்டை வாங்கியவரை அடமானக் கடன் கொடுத்த நிதி நிறுவனம் சுற்றி வளைத்தது. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் இது மாதிரியான தவறுகளில் இருந்து வெளியில் வர பெரும்பாடும் பட வேண்டியிருக்கும்.

ஒரிஜினல் ஆவணங்கள் என்பது ஒருவருடைய சொத்தின் மீதான உரிமை ஆகும். அதைப் பிறரிடம் கொடுக்கிறீர்கள் எனில், உங்களுடைய உரிமையை இன்னொருவருக்கு வழங்குகிறீர்கள் என்று அர்த்தம். அந்த உரிமையை வைத்து, அதைப் பெற்றுக் கொண்ட நபரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

எனவே, எந்தவொரு சொத்தின் மீதான ஆவணங்களையும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களிடம் கொடுப்பது கூடாது. குடும்ப உறுப்பினர்களிடமே அவசியம் எனில் மட்டுமே வழங்க வேண்டும். இல்லையெனில், அதை வங்கி லாக்கரிலோ, உங்களுக்கென்று இருக்கும் பாதுகாப்பான இடத்திலோ வைத்திருப்பதுதான் நல்லது.

ஆவணங்கள்

Also Read: உயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்!

அதே போல, இன்றைய காலத்தில் ஒரிஜினல் பத்திரங்களைப் பிணையமாக வைத்து வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் அதிகம். இதுவும் பிரச்னைக்கு உரிய விஷயம்தான். ஒருவேளை, அந்த சொத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் சொத்து பத்திரத்தின் நகலைக்கூட இன்னொருவரிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது" என்றார் தெளிவாக.

உங்களுடைய சொத்து பத்திரம் எப்போதும் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை இனி எல்லோரும் உணர்ந்து செயல்படுவது அவசியத்திலும் அவசியம்!



source https://www.vikatan.com/business/news/why-we-should-have-to-be-more-careful-in-handling-property-documents-lawyer-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக