Ad

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தேனிலவில் மனைவிக்குக் காத்திருந்த அதிர்ச்சி! - போலீஸில் புகார்; நீதிமன்றத்தை நாடிய கணவன்

மும்பை அருகிலுள்ள நவிமும்பை ரபாலே பகுதியைச் சேர்ந்தவர் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நிதின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் நிதினின் தந்தை, அனுஷ்யாவைத் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தபோது நிதினுக்குத் தன்னைவிடச் சம்பளம் குறைவாக இருப்பதாகக் கருதி மாப்பிள்ளை வேண்டாம் என்று அனுஷ்யா தெரிவித்தார். ஆனால் நிதின் தனக்கு ஆண்டுக்கு 14 லட்சத்துக்கு வேலை கிடைத்திருப்பதாகக் கூறி, கடிதத்தைக் காட்டினார். அதை நம்பி திருமணத்துக்குச் சம்மதித்தார் அனுஷ்யா. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்குப் பிறகு இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்தபோது, தேனிலவுக்கு தன் நண்பர்களும் வருவார்கள் என்று நிதின் தெரிவித்தார்.

தேனிலவு

இதனால் அதிர்ச்சியடைந்த அனுஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர்களும் வந்தால் ஜாலியாக இருக்கும் என்று கூறி சமாதானப்படுத்தி சம்மதிக்கவைத்தார் நிதின். தேனிலவின்போது இருவருக்கும் இடையே எந்தவித தாம்பத்திய உறவும் நடைபெறவில்லை. மாறாக படுக்கையறையில் நிதின் தனது மொபைல் போனை கையில் வைத்துக்கொண்டு சுயஇன்பம் அனுபவிப்பதை அனுஷ்யா பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மறுநாள் நிதின் போனுக்கு அனுஷ்யாவின் தந்தை போன் செய்தார். போன் பேசிவிட்டு அதைச் சோதித்தபோது அதில் ஓரினச் சேர்க்கையாளர் மொபைல் ஆப் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. அதோடு மொபைலில் ஓரினச் சேர்க்கை தொடர்பான சாட்டிங், வீடியோ போன்றவையும் அதிக அளவில் இருந்தன. அதோடு நிதின் ஓர் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தெரியவந்தது. இதனை மறைத்து அனுஷ்யாவைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். இது குறித்து நிதினிடம் கேட்டதற்கு கத்தியைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அனுஷ்யா, இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்தார். அவர் இது பற்றி போலீஸில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டார். எனவே போதிய ஆதாரங்களைத் திரட்டுவதற்காகத் தொடர்ந்து நிதினுடன் தங்கியிருந்து அவரின் போனை சைபர் பிரிவில் கொடுத்து அனைத்துத் தகவல்களையும் அனுஷ்யா சேகரித்தார். இதைத் தொடர்ந்து அனுஷ்யா ஆதாரங்களுடன் போலீஸில் புகார் செய்தார்.

போலீஸ்

இது குறித்து அனுஷ்யா கூறுகையில், ``ஆண்டுக்கு ரூ.14 லட்சம் சம்பளம் என்று கூறி என்னைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார். அதோடு தேனிலவில் அவர் என்னுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை. அவரின் நடவடிக்கைகள் மற்றும் அவரின் மொபைல் போனை சோதனை செய்து பார்த்தபோது நான் நினைத்துப் பார்க்க முடியாதவை அதில் இருந்தன. அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் மட்டுமல்லாமல், அவருக்கு பாலியல் நோய் இருப்பதையும் கண்டுபிடித்தேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. எனது கணவரின் ஓரினச் சேர்க்கை தொடர்புகள் குறித்து எனது வீட்டிலும் கூறாமல் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். இறுதியில் இது குறித்து எனது சகோதரியிடம் தெரிவித்தேன்” என்று தெரிவித்தார்.

அனுஷ்யா போலீஸில் புகார் செய்திருப்பதைத் தெரிந்துகொண்டு உடனே நிதின் தானே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. ஓரினச் சேர்க்கையாளர் என்பதை மறைத்து, திருமணம் செய்துகொண்டது தவறு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் நிதின் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/a-man-who-cheated-on-a-young-woman-by-marrying-her-in-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக