Ad

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

நோட்டமிட்ட கொள்ளைக் கும்பல்; ஓடும் வாகனத்தில் 264 பவுன் நகை திருட்டு; 2 பேர் கைது! - நடந்தது என்ன?

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் மளிகைக்கடை நடத்திவரும் தங்கபெருமாளின் மகன்கள் பெரியசாமி, ஆனந்த ராசு ஆகியோர் குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊருக்கு டெம்போ டிராவலர் வேன் மூலமாக 9-ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது, தங்களது உடைமைகளை சூட்கேஸில் வைத்து வேனின் மேற்பகுதியில் தார்ப்பாய் கொண்டு கட்டிச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கடையில் அதிகாலையில் தேநீர் அருந்திவிட்டு அவர்கள் வந்தபோது, 264 பவுன் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த இரண்டு சூட்கேஸ்கள் மட்டும் வேன் மீதிருந்து காணாமல்போயிருந்துள்ளன.

கொள்ளை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கபெருமாள் குடும்பத்தினர், திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணையை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நிலையில், குற்ச்ற செயலில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் நேற்றைய தினம் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 24 பவுன் நகைகள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். "விக்கிரவாண்டி அருகே சிசிடிவி கேமராக்களைச் சோதித்துப் பார்த்தபோது, தங்கபெருமாள் குடும்பத்தினர் வந்த டெம்போ டிராவலர் வாகனத்தின் பின்புறம் ஒரு வாகனம் நின்றிருப்பதை அறிந்தோம். அந்த வாகனத்தின் விவரங்களைச் சேகரித்துப் பார்த்தபோது மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவரின் பெயரில் இருந்தது. மேலும், சம்பவத்துக்கு முன்தினம்கூட அந்த வாகனம் டோல்கேட்டைக் கடந்து செல்வதாகவும், திரும்புவதாகவும் இருந்தது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் மதுரைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கணேசன் என்ற ஒருவனின் டீமைக்கொண்டுதான் இந்தக் குற்ற செயல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக இர்ண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து பேர் வரை இந்தக் குற்ற செயலில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

இந்த கும்பல், சம்பவத்துக்கு முன்தினமே விக்கிரவாண்டி பகுதிக்கு சென்று வசதியான குடும்பத்தினர் வரும் வாகனங்களை நோட்டமிட்டு, திருட்டுக்குச் சரியான இடங்களைக் கண்காணித்துவந்துள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று ஒரு காரை இந்த டெம்போ டிராவலர் வேனுக்கு முன்புறமும், டாட்டா ஏஸ் வகை லோடு வண்டியைப் பின்புறமாகவும் செலுத்தி பின்தொடர்ந்து வந்துள்ளனர். வேகத்தடை உள்ள பகுதியில், வேன் மீது ஏறி சூட்கேஸை எடுத்து டாட்டா ஏஸில் போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

விக்கிரவாண்டி டோல்கேட்

இந்தக் கொள்ளைக் கும்பலில் உள்ளவர்கள் மீது, ஏற்கெனவே இது போன்ற பல வழக்குகளும் உள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/two-people-are-arrested-in-connection-with-the-robbery-of-264-pounds-of-gold-jewelry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக