Ad

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

மஞ்சள் தேமல் நோயை விரட்டும் உயிர் உரங்கள்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் தன்னுடைய அனுபவங்களை இந்த இதழில் பகிர்ந்துகொள்கிறார். இவருடைய தோட்டம் ஓமலூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள எட்டுக்குட்டப்பட்டி கிராமத்தில் இருக்கிறது. ஒரு காலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.

“எங்களுக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்துல விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன். நான் 8-ம் வகுப்பு படிச்சுகிட்டிருக்கும் போது, அப்பா செலவுக்குக் கொடுக்குற காசெல்லாம் சேர்த்து வச்சு வெண்டை விதையை வாங்கிட்டு வந்து கொஞ்ச இடத்துல சும்மா நட்டுப்பார்த்தேன். தினமும் அதுக்கு காலையில, சாயங்காலம் தண்ணிக் கொடுப்பேன். சரியா ஒரு வாரத்துல விதை முளைச்சு வந்துச்சு. நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன். ஒரு கட்டத்துல செடி வளர்ந்து, பூ வைக்கிற நேரத்துல செடியில மஞ்சள் தேமல் நோய் படர ஆரம்பிச்சது. அத பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன். கொஞ்ச நாள்ல அது எல்லா செடிகளையும் பாதிச்சுடுச்சு. அதனால காய் காய்க்காம அத்தனை செடிகளும் காஞ்சுபோய்டுச்சு. இவ்வளவு நாளா பட்ட கஷ்டமெல்லாம் பாழாப் போயிடிச்சேனு ரொம்ப வருத்தப்பட்டேன்.

வெண்டை சாகுபடி வயலில் நாகராஜன்

‘செடிகள்ல பூச்சி தாக்கினா, அதுக்கு முன்கூட்டியே மருந்து வைக்கணும். மருந்து வைக்கத் தவற விட்டதனாலதான் செடி செத்து போயிடுச்சு’ன்னு அப்பா சொன்னாரு. அதுக்கப்புறம் மறுபடியும் விதை வாங்கிட்டு வந்து விதைச்சேன். செடிகள உன்னிப்பா கவனிச்சுகிட்டே இருப்பேன். ஏதாவது நோய் தாக்கினா அந்தச் செடியைப் பறிச்சிட்டு போய் உரக்கடைக்காரங்ககிட்ட காட்டுவேன். அவங்க அதுக்கான மருந்து கொடுப்பாங்க. ‘நான் வளர்ந்ததுக்கப்புறமும் இப்படியே தான் போய்ட்டு இருந்துச்சு’’’ என்றவர், தன் தற்போதைய விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வெண்டை சாகுபடி வயலில் நாகராஜன்

“முதல்ல குறைஞ்ச அளவுல வெண்டை விவசாயம் செஞ்சுகிட்டு இருந்த நான், 3 ஏக்கர்ல வெண்டை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். பெரிய அளவுல பயிர் செய்யும்போது அதை எப்படி பராமரிக் கணும்னு எனக்குத் தெரியல. இலைச்சுருட்டு, சாம்பல் நோய்னு பல அறிகுறிகள் செடிகள்ல வந்துச்சு. தோட்டக்கலை அதிகாரிககிட்ட போய்ச் சொன்னேன். அவங்க வயல் மண்ணை பரிசோதனைக்கு எடுத்துட்டு வரச் சொன்னாங்க. எடுத்துட்டுப்போய் கொடுத்தேன். பரிசோதனை பண்ணி பார்த்தவங்க, ‘மண்ணுல கார்பன் அளவு கம்மியா இருக்கு’னு சொன்னாங்க. அதன் பிறகு வயல்ல மரக்கட்டைகளை எரிச்சு கிடைக்கிற கரிக்கட்டைகளை வாங்கி பொடியா அரைச்சு மண்ணோட மண்ணாக் கலந்தேன். டீக்கடைகள், உணவகங்கள்ல கிடைக்கிற அடுப்புச் சாம்பலையும் வாங்கிட்டு வந்து போட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம் இதுமாதிரி செஞ்சு, மறுபடியும் வெண்டை சாகுபடி செஞ்சேன். அதன் பிறகு நோய்த் தாக்குதல் குறைஞ்சது. ஆனாலும் பயிர் வளர்ச்சி, மகசூல் சரியா இல்ல.

வெண்டை சாகுபடி


சரி, வேற பயிர் பண்ணலாம்னு ராகி, நெல் போட்டேன். எதிர்பார்த்த மகசூல் கிடைக்கல. இவ்வளவுக்கும் சேலம் மாவட்ட மண் வகைக்கு நல்லா வளர்ற மரவள்ளிக்கூட போட்டுப் பார்த்தேன். மரவள்ளியும் வளரல. மண்ணையும் சோதனை செஞ்சிட்டோம். பயிருக்குத் தேவையானதையும் சரியா கொடுக்கிறோம். அப்படியிருந்தும் ஏன் இது சரியா வளரலனு புரியாம இருந்தேன். பலபேர்கிட்ட பேசினதுல தண்ணிய ஒருமுறை சோதனை பண்ணி பார்க்கச் சொன்னாங்க. சரி, அதையும் பார்த் திடுவோம்னு சோதனை பண்ணினேன். ஒரு போர்வெல்ல 1200 ‘டி.டி.எஸ்’, இன்னொரு போர்வெல்ல 920 ‘டி.டி.எஸ்’ இருந்துச்சு. விவசாயத்துக்கு 300 ‘டி.டி.எஸ்’க்குள்ளதான் இருக்கணுமாம். ஆனா, எங்க போர்வெல் தண்ணில சோடியத்தோட அளவு அதிகமா இருக்குறதும் தெரிஞ்சது. முன்ன கிணத்து தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்ததால இந்த விஷயம் பெரிய பாதிப்பு ஏற்படுத்துல. போர்வெல் போட்டதும் இந்த பிரச்னை வந்துடுச்சு. செடிகள் மண்ணுல இருக்கிற சத்தை எடுத்துக்க முடியாம இருந்ததை புரிஞ்சுக்க முடிஞ்சது. அதுக்குப் பிறகு, ‘ஹியூமிக் ஆசிட்’, ‘பல்விக் ஆசிட்’, ‘அமினோ ஆசிட்’ கலந்த இயற்கை உரக்கலவையை நிலத்துக்குக் கொடுக்கச் சொன்னாங்க. ஏக்கருக்கு 5 கிலோ வாங்கி தெளிச்சேன். அதன் பிறகுதான் அந்த பிரச்னை சரியாச்சு. இதுபோல ‘வேம்’ என்ற இயற்கை உரமும் இந்த வேலையைச் செய்யுது’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

விவசாயம்

“வெண்டைக்காய் அறுவடை முடிஞ்சதும் அடுத்த நடவுக்கு நிலத்தை உழவு ஓட்டணும். இப்படி உழவு ஓட்டும்போது வெண்டைக்காய் செடிகள் சீக்கிரத்துல மட்காது. அது மட்குற வரைக்கும் காத்துட்டு இருப்பேன். இதுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சேன். 100 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் ஈஸ்ட், 2 கிலோ கடலை மாவு, அரைக்கிலோ சர்க்கரையை கலந்து ஒரு நாள் ஊற வெச்சிட ணும். பிறகு, அந்தக் கரைசலை எடுத்துத் தெளிச்சு விட்டா போதும். எல்லாமே சீக்கிரத்துல மட்கிடுது. இதை உழவு ஓட்டுறதுக்கு முன்னாடியும் தெளிக்கலாம்.

இப்படி வெண்டைச் சாகுபடியில வேர் முதல் நுனிவரை எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அதை நானே சரி செஞ்சிடுறேன். மத்த விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். என்னோட 20 வருஷ தோட்டக் கலைப் பயிர் சாகுபடியில பல தவறுகள செஞ்சுருக்கேன். அந்தத் தவறுகள்ல முதன்மையானது அறியாமைதான். அந்த விஷயத்த தெரிஞ்சுக்கும்போது தான் விஷயம் புரிஞ்சது.

இன்னைக்கு வெண்டைச் சாகுபடி யில மாசம் 30,000 ரூபாய் சம்பாதிச்சுக் கிட்டு இருக்கேன். நான் செய்ற அத்தனை தவறுகளையும் தோட்டக்கலை, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கள்கிட்ட சொல்லி ஆலோசனைக் கேட்குறேன். கிணத்துல போட்ட கல்லாக நாம செய்ற தவறுகளோடேயே விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தா வளர முடியாது. வெளியில நாலு பேர போய்ப் பார்த்தாதான் தீர்வு கிடைக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, நாகராஜன்,

செல்போன்: 99652 62373

- தொடரும்

கால்நடைத் தீவனத்திலும் சுழற்சி முறை

“கால்நடை தீவனம் சாகுபடி செய்யும்போது கோ.4, கோ.எஃப்.எஸ்னு தீவனங்களை விதைக்கிறோம். ஆனா, தொடர்ந்து அதையே சாகுபடி செய்யும்போது மண் வளம் பாதிக்கப்படுது. சாகுபடி செய்யப்படுற தீவனங்களோட மகசூலும் குறையுது. அதனால கோ.4, கோ.எஃப்.எஸ் சாகுபடி செய்றதுக்கு அடுத்த முறை வேலிமசால், முயல் மசால் மாதிரியான பயறு வகை தீவனங்களைச் சாகுபடி செய்தால் மண்வளம் மேம்படும். சாகுபடி செய்ற தீவனங்கள்ல மகசூலும் அதிகரிக்கும். கால்நடைகளுக்கும் மாற்றுத் தீவனம் கிடைக்கும்” என்கிறார் நாகராஜன்.

சாகுபடி வயலில் நாகராஜன்

நோயை விரட்டும் உயிர் உரங்கள்

மஞ்சள் தேமல் நோயைச் சமாளிக்கும் விதம் குறித்து பேசிய நாகராஜன், “ஒரு தடவை எங்க ஊருக்குப் பக்கத்துல தோட்டக்கலைத் துறைக்காரங்க ஒரு முகாம் நடத்தினாங்க. அந்த முகாம்ல நானும் கலந்துகிட்டேன். அந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான் வெண்டை தோட்டக்கலைப் பயிர்கள்ல ஒண்ணுங்கற விஷயமே புரிஞ்சது. அதேமாதிரி அங்கதான் உயிர் உரங்கள் மூலமாவும் பயிர்கள்ல வர்ற நோய்கள தடுக்க முடியும்ங்கற விஷயம் தெரிஞ்சது. இத்தன நாள் இதைத் தெரிஞ்சுக்காம இருந்துட்டோமேனு வருத்தப்பட்டேன்.

அதுக்குப் பிறகு, இப்ப வரைக்கும் அதைத்தான் செய்யுறேன். வெண்டையில வர்ற மஞ்சள் தேமல் நோய்க்கு 100 லிட்டர் தண்ணிக்கு ‘அசாடிராக்டின்’ 300 மி.லி, ‘பவேரியானா பேசியானா’ 400 மி.லி (பவுடராக இருந்தால் 300 கிராம்), 50 கிராம் காதிசோப் கலந்து கரைசலாக்கி தெளிச்சா, இந்த நோய் கட்டுப்படும். அதேமாதிரி வெண்டைக்காய்ல முனை வளைஞ்சுடும். அதுக்கு 100 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ கலந்துக் கொடுத்தா சரியாயிடுது. இந்த அளவுகள் 1 ஏக்கருக்கான அளவு. இதுக்கான செலவெல்லாம் 500 ரூபாய்க்குள்ள அடங்கிடும்” என்றார்.

அனுபவங்களை அனுப்புங்கள்

விவசாயத்தில் தவறு செய்திருந்து, அதற்குத் தீர்வு கண்டது குறித்து மற்ற விவசாயிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களின் அனுபவங்களை எழுதி அனுப்பவும். சிறந்த அனுபவங்கள், இந்த பகுதியில் இடம்பெறும்.

தவறுகளும் தீர்வுகளும், பசுமை விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600002

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப்: 99400 22128



source https://www.vikatan.com/news/agriculture/bio-fertilizers-control-plant-disease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக