Ad

சனி, 16 ஏப்ரல், 2022

MI vs LSG: 5 முறை சாம்பியன், இன்று 6 முறை தோல்வி; மும்பை இந்தியன்ஸ் வீக்கா, எதிரணிகள் ஸ்ட்ராங்கா?

`கே.ஜி.எஃப்' ராக்கி பாயாக பார்க்கப்பட்ட அணி, கடந்த இரண்டு வருடங்களில் 'மெட்ராஸ்' ஜானியாக அனுதாபப்பட வைத்திருக்கிறது. சென்ற வருடம், டேபிளில் ஐந்தாவது இடத்தில் முடித்ததே மும்பை ரசிகர்களுக்கு அவமானகரமான விஷயமாகத் தோன்றியது. அப்படியிருக்கையில் இந்த வருடம் இதே நிலை தொடர்ந்தால் டேபிளில் கடைசியில் இருக்கும் அந்த அணி, இரண்டடிகள் ஏறுவதுகூட சாத்தியமற்ற இலக்காகவே மாறிவிடும். ஆம், சென்னை 4 முறை தோற்று, ஐந்தாவது முறை வெற்றி பெற்றுவிட, அதன் பங்காளி மும்பை இந்தியன்ஸோ இன்றோடு தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்திருக்கிறது. இந்த முறை மும்பையை அடித்துவிட்டு 'நானும் ரவுடிதான்' என போலீஸ் ஜீப்பில் வாலன்டியராக ஏறியிருப்பது லக்னோ.

ஐபிஎல் 2022-ன் 26-வது போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸும் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும் களம் கண்டன. டாஸ் வென்ற ரோஹித், அதை எதுக்கு கேட்டுகிட்டு என்பதாக வழக்கம்போல, பௌலிங் என்றார். மும்பை பிளேயிங் லெவனில் இடது கை ஸ்பின்னர் ஒருவர் இடம்பெறுவார் என அனைவரும் ஆருடம் சொல்ல, அது சஞ்சய் யாதவாக இருக்கும் என்றே பலர் நினைத்தனர். ஆனால், வெஸ்ட் இன்டீஸின் ஃபேபியன் ஆலானை டிக் அடித்தார் ரோஹித். சிக்ஸர்களை அடிப்பார், ஃபீல்டிங்கும் சிறப்பாகச் செய்வார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம். சோபிக்காத கிருஷ்ணப்ப கௌதமை உட்கார வைத்துவிட்டு மனீஷ் பாண்டேவை வரவைத்தது லக்னோ.

MI vs LSG

திலக் வர்மா பந்தைக் கையில் எடுக்க, முன்னாள் மும்பைகார் டீ காக்கும், கேப்டன் ராகுலும் லக்னோவுக்காக களமிறங்கினர். டீ காக் ஆசைக்காக ஒரு சில பவுண்டரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிக்க, 7, 9, 11, 3 என முறையே முதல் நான்கு ஓவர்களில் ரன் கணக்கு சீராக ஏறியது. அதுவரை அமைதி காத்த ராகுல், மில்ஸ் வீசிய ஐந்தாவது ஓவரில், இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என கியரை மாற்றினார்.

லக்னோ அதுவரை அமைதி காத்ததற்கான காரணம், ரோஹித் பவர்பிளேயில் 'ஆளுக்கொரு ஓவர் போட்டுட்டு வாங்க' என்பதாய் அதுவரை ஆறு பௌலர்களிடம் பந்தைத் திணித்திருந்தார். அப்படி ஆறாவதாக க்யூவில் வந்த ஃபேபியன் ஆலன்தான் மும்பைக்கு முதல் பிரேக்கைக் கொடுத்தார். ராகுல் கியர் மாற்றியதைப் பார்த்துவிட்டு டீ காக்கும் கியரை மாற்றி தன் முதல் சிக்ஸரை ஆலன் ஓவரில் அடித்தார். ஆனால், அடுத்த பந்திலேயே அந்த கியரை பிடுங்கி வெளியே எறிந்தார். ஆலன் அவரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். பவர்பிளே முடிவில் 57 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து சற்று வலுவாகவே இருந்தது லக்னோ.

MI vs LSG

பின்பு ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டேவும், ராகுலும் ஓவருக்கு 10 ரன்கள் என்பதாய் டார்கெட் வைத்துக்கொண்டு ரிஸ்க் பெரிதாக எடுக்காமல் அதற்காக மட்டுமே ஆடினர். 11வது ஓவர் வரை இந்த `அமைதிப்படை' ஃபார்முலா நீடித்தது. மில்ஸ் வீசிய 13வது ஓவர் முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, இனி `அதிரடிப்படை' ஆட்டத்தை ஆரம்பிப்போம் என உற்சாகம் ஆனார் ராகுல். டீம் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் வந்தன.

மற்றொரு பக்கம் பாண்டேவும் முருகன் அஷ்வினை டார்கெட் செய்கிறேன் என ஸ்லாக் ஸ்வீப் எல்லாம் முயற்சி செய்ய, ஸ்டம்புகளை இழந்ததுதான் மிச்சம். இருந்தும் 29 பந்துகளில் 38 ரன்கள் அடித்து வலுவான அஸ்திவாரத்தை அவர் லக்னோவுக்காகக் கட்டியிருந்தார். ராகுல் ரன் வேண்டும் என நினைத்தாரோ என்னவோ கடந்த ஆட்டத்தில் எட்டாவதாக இறங்கிய ஸ்டாய்னிஸ்க்கு டபுள் புரொமோஷன் கொடுத்து 4வது ஆளாக இறக்கினார். 15வது ஓவரில் ராகுலே இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க மொத்தம் 18 ரன்கள் வந்தன. அணியின் மொத்த ஸ்கோரும் 150-ஐ கடந்தது.

இது விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் என்பதை உணர்ந்த ரோஹித், பும்ராவிடம் பந்தைக் கொடுத்தார். வழக்கம்போல டைட் லைனில் பும்ரா பேட்ஸ்மேன்களை அடக்கி ஆள, அந்த ஓவரில் வெறும் ஐந்தே ரன்கள். இந்த ஓவரின் பிரஷரால், உனத்கட்டின் அடுத்த ஓவரில் அடித்தே ஆக வேண்டும் என ஸ்டாய்னிஸ் பேட்டை வீச, கவரிலிருந்த ரோஹித் கேட்சைப் பிடித்தார். 10 ரன்களில் ஸ்டாய்னிஸ் அவுட்டாக புரொமோஷனும் வேஸ்ட்டானது. அடுத்த ஓவரில் ஓவர் தி விக்கெட்டில் வந்த பும்ரா, யார்க்கர், ஃபுல் என மீண்டும் டைட்டாகவே பந்துவீச, ஆட்டத்தின் 18வது ஓவரில்கூட 9 ரன்களே வந்தன.

92 ரன்களில் இருந்த ராகுல், அடித்தே ஆக வேண்டும் என மில்ஸ் வீசிய 19வது ஓவரை டார்கெட் செய்தார். ஒரு பவுண்டரி அடித்துவிட்டு, மறுமுனையிலிருந்த ஹூடாவுக்கு கைமாற்றிவிட, அவர் தன் பங்குக்கு ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடித்து வெளுத்தார். '97 ரன்ல இருக்கேன்பா' என ராகுல் கூவியிருப்பாரோ என்னவோ, ஹூடா ராகுலுக்கு மீண்டும் கைமாற்றிவிட்டார். ஒரு பவுண்டரி அடித்து 56 பந்துகளில், ஐபிஎல்-லில் தன் 3வது சதத்தை நிறைவு செய்தார் ராகுல்.

MI vs LSG
ஷார்ட் பால் போட்டால் கேட்ச் கொடுத்து அவுட்டாக ராகுல் அவசரப்படும் பேட்ஸ்மேனோ, அதிரடி ஆட்டக்காரரோ இல்லை. சேஃபாக தன் விக்கெட்டை இழக்காமல் ஆடும் வித்தைக்காரர். ஆனால், அவருக்குப் போய் மும்பை, ஷார்ட் பால்களை மட்டும்தான் அதிகமாக வீசியது.

சென்சுரி அடிச்சாச்சு என ராகுல் அசால்ட்டாக ஆடினாரா தெரியவில்லை, ஒரு கட்டத்தில் 215 ரன்கள் வரை சாத்தியம் என்று இருந்த வாய்ப்பு உனத்க்ட் வீசிய கடைசி ஓவரில் வெறும் கனவாகிப் போனது. வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து ஹூடாவின் விக்கெட்டையும் எடுத்தார் உனத்கட். மும்பைக்கு டார்கெட் சரியாக 200 ரன்கள்.

மும்பை இப்போது இருக்கும் நிலைமைக்கு இது சற்றே அதிகம்தான் என்றாலும் சூர்யகுமாரின் முரட்டு ஃபார்முடன் ரோஹித், இஷன் கிஷன், பொல்லார்டு, ப்ரீவிஸ் என ஆளுக்கொரு 30 ரன்கள் அடித்தாலே போதுமே என்று குருட்டு நம்பிக்கை துளிர்விட... 'ராமசாமி பணத்தை எடுத்து வைடா' என கவுண்டமணி கணக்காக, இரண்டு பாயின்ட்களை எடுத்து வைக்கச் சொல்லி சவுண்டு விட்டனர் மும்பை ரசிகர்கள்.

ரோஹித்தும் இஷன் கிஷனும் களமிறங்கினர். பவர்பிளேவுக்கு உள்ளாகவே விக்கெட்டுகளை இழக்காமல் நல்லதொரு தொடக்கம் அமைத்தால் மட்டுமே சேஸிங் செய்ய முடியும். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து எனர்ஜி ஏற்றினார் இஷன். இந்த ஐபிஎல்-லில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் இதுவரை அதற்குரிய நியாயம் சேர்க்கவில்லை என்பதால் அவரின் மீதும், தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ரோஹித்தின் மீதும் பல மடங்கு பிரஷர் குவிந்தது.

மூன்றாவது ஓவரில் தன் முதல் பவுண்டரியை அடித்த ரோஹித், அப்போதுதான் பின்னாடி கீப்பிங் நிற்கும் டீ காக்கை கவனித்தார்போல. 'என்ன இருந்தாலும் நம்ம பழைய டீம் பிளேயர்' என்ற பாசப்போராட்டத்தில், தேர்ட் மேன் பக்கம் அடிக்கிறேன் என டீ காக்கிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மும்பை ரசிகர்கள் மனம் நொந்தனர். ரோஹித் பேன்ஸ் `கே.ஜி.எஃப் 2' படத்துக்கு டிக்கெட் இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தனர்.

MI vs LSG

உள்ளே வந்த ப்ரீவிஸ், தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தார். சமீரா வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள், இது போதாது என ஒரு வொயிடில் பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் வந்தன. ஆவேஷ் கானின் அடுத்த ஓவரிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அது அவருக்கு ஓவர் கான்ஃபிடன்ஸைக் கொடுத்தோ என்னவோ, அதே ஓவரில் பந்து வருவதற்கு முன்பே இந்த ஷாட் என மனதில் பிக்ஸ் செய்து நகர்ந்து, பின்னர் அதையும் சொதப்பி ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் வெளியேறினார் ப்ரீவிஸ்.

பவர்பிளே முடிவில் முதலுக்கு மோசமில்லை கணக்காக 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் அடித்திருந்தது மும்பை. பவர்பிளே முடிந்து தன் முதல் ஓவரை வீசவந்த ஸ்டாய்னிஸ், ஒரு ஆஃப் கட்டர் மூலம் ரொம்ப நேரமாகத் திணறிக் கொண்டிருந்த இஷன் கிஷனை வெளியே அனுப்பினார். சூர்யகுமார் யாதவும், திலக் வர்மாவும் களத்திலிருந்தனர்.

இந்த ஜோடி 10, 8, 6, 7 என அடுத்தடுத்த ஓவரில் அமைதியாகவே ஸ்கோர் செய்தது. தேவைப்படும் ரன்ரேட் எகிறுவதைப் பார்த்த சூர்யகுமார், க்ருணால் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, பிஷ்ணாய் ஓவரில் ஒரு பவுண்டரி என அட்டாக் மோடுக்கு மாறினார். திலக் வர்மாவும் ஒரு பவுண்டரி அடித்தாலும் அவரின் 100 என்னும் ஒருநாள் போட்டிக்கான ஸ்ட்ரைக்ரேட் கொண்ட ஆட்டம், சேஸிங்கில் சூர்யகுமாருக்குக் கூடுதல் பிரஷரை ஏற்றியது. 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் என்று இருந்தது மும்பை.

MI vs LSG

விக்கெட்டுகள் இருப்பதால், கொஞ்சம் போராடினால் வெற்றி சாத்தியமே. அதற்கு இந்த ஜோடி, அதிரடி மோடில் சில ஓவர்களை ஆடியாக வேண்டும். இப்போது ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் பெரிய ரிஸ்க் என்ற நிலைமை.

ஆனால் 14வது ஓவரில் ஹோல்டர் வீசிய யார்க்கர், அதே 100 ஸ்ட்ரைக் ரேட்டை மெயின்டெயின் செய்துகொண்டிருந்த திலக் வர்மாவின் ஸ்டம்புகளைப் பெயர்த்தது. 15 ஓவர்கள் முடிந்த நிலையில், 30 பந்துகளில் 75 ரன்கள் தேவை என்ற இலக்கு, மும்பைக்குச் சற்றே கண்ணைக் கட்டுவதாகவே இருந்தது.
MI vs LSG

அடுத்த ஓவரில் மும்பையின் மிச்சம் மீதி நம்பிக்கையான சூர்யகுமார் யாதவ்வும் டாப் எட்ஜாகி கேட்ச் கொடுத்து, 37 ரன்களில் நடையைக் கட்டினார். 4 ஓவர்களில் 68 ரன்கள் தேவை. 'என்ன ரங்கா நியாயமா?' என மும்பை ரசிகர்கள் கண் கலங்கினர். இருந்தும் ஆலன், பொல்லார்டு என இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் களத்தில் இருப்பதால் போராடுவார்கள் என ஆறுதல் அடைந்தனர். அதற்கேற்றாற்போல, சமீரா ஓவரில் பொல்லார்டு இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து அடித்து 17வது ஓவரில் 16 ரன்களைச் சேர்த்தார். ஆனால், ஆவேஷ் கான் 18வது ஓவரைக் கட்டுக்கோப்பாக வீசி, 9 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆலனின் விக்கெட்டையும் தூக்கினார்.

இரண்டு ஓவர்களில் 43 ரன்கள் தேவை என ஸ்கோர்போர்டு வாசிக்க, 'இனி அதை எதுக்கு உருட்டிக்கிட்டு' என்றே தோன்றியது. ஹோல்டரின் ஓவரில் உனத்கட் ஆசைக்கு ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. பொல்லார்டு களத்தில் இருக்கிறார் என்பதால் ஏதேனும் மேஜிக் நடந்துவிடாதா என்று ஆதங்கப்பட்டனர் மும்பை ரசிகர்கள்.

சமீரா வீசிய அந்தக் கடைசி ஓவர், சுவாரஸ்யம் குறையாததாக இருந்தது. யாருக்கு? லக்னோ ரசிகர்களுக்கு! கேட்ச், போல்ட் எல்லாம் பத்தாது என உனத்கட்டும், முருகன் அஷ்வினும் புதிதாகச் சிந்திக்கிறேன் என டிசைன் டிசைனாக ரன் அவுட்டாகி வெளியேறினர். 14 பந்துகளில் 25 ரன்கள் அடித்துப் போராடிக்கொண்டிருந்த பொல்லார்டும் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்களில் மும்பை அணி, 181 ரன்கள் மட்டுமே எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

MI vs LSG

முந்தைய போட்டிகள் மற்றும் மும்பை தற்போது இருக்கும் ஃபார்மை எல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இது அவமானகரமான தோல்வி இல்லை. போராட்டங்கள் நிறைந்த இன்னிங்ஸ்தான். ஆனால், தொடர் தொடங்கி 26 மேட்சுகள் முடிந்த பின்னரும் இப்படி மெதுவாக ஃபார்முக்கு வந்துகொண்டிருந்தால், தொடர் வெற்றிகளை அவர்கள் பெறும்போது லீக் போட்டிகளே முடிந்துவிடும் போல!

எதிரணிகள் அத்தனை பலம் வாய்ந்ததாக இருக்கின்றனவா, அல்லது மும்பை வீக்காக இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்தால், அதற்கான விடை சந்தேகமே இல்லாமல் இரண்டாவது ஆப்ஷன்தான். ஏனென்றால், `தோனி' படத்தில் வரும் வசனம்போல, `நாம எங்கே தோத்தோம் தெரியுமா?' என மும்பை ரசிகர்களிடமே கேட்டால், அவர்கள் சொல்லப்போகும் பதில், ஆக்ஷன் டேபிள்!


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-mumbai-continues-their-painful-form-by-losing-the-match-against-lucknow

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக