Ad

வியாழன், 21 ஏப்ரல், 2022

`திமுக-வுக்கு பதிலடி தரும் கே.எஸ்.அழகிரி?’... `அனிதா, கீதா... யார் பதவி காலி?’ | கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க-வில் தொடர்புப் பணிகளை கவனித்துவரும் ‘மன்னர்’ பிரமுகரிடம் ஆஃப் தி ரிக்கார்டாக டெல்டா மாவட்டங்களின் டாஸ்மாக் பார்களை ‘கவனித்து’க்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பார் ஒன்றுக்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாயும், மாதம் இரண்டு லட்சம் ரூபாயும் மாமூலாகக் கொடுக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறதாம் மன்னர் பிரமுகர் தரப்பு. நன்றாக ஓடும் பார் உரிமையாளர்கள், இவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு பார் நடத்திவருகின்றனர்.

பணம் கொடுக்காத பார்களில் அதிகாரிகளைவைத்து அடிக்கடி ஆய்வுசெய்து அபராதம் விதிப்பது உட்பட பல்வேறு வகையில் டார்ச்சர் செய்துவருகிறதாம் மன்னர் தரப்பு. இது பற்றி பாதிக்கப்பட்ட பார் உரிமையாளர் ஒருவர், கரூர்க்காரரிடம் புலம்ப... “அதெல்லாம் முடியாது... அவர் சொன்னதைத்தான் செய்யணும்” என்று கறார் காட்டியிருக்கிறார். இதையெல்லாம் யாரிடம் சொல்லிப் பிரச்னைக்கு தீர்வு காண்பது என்று புலம்புகிறார்கள் டெல்டா ஏரியா பார் உரிமையாளர்கள்!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனுக்கும், துணை மேயர் மகேஷ் குமாருக்கும் இடையே பனிப்போர் தொடங்கிவிட்டது என்கிறது ரிப்பன் மாளிகை வட்டாரம். பிரியா ராஜனுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதால் துணை மேயர் மகேஷ் குமார், அதிகாரத்தை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாராம்.

சென்னை மேயர்

இதையடுத்து, ‘மேயர் பதவி என்கிற கெளரவத்துடன் சும்மா அமர்ந்திருந்தால் போதும்... உங்களுக்குத் தேவையானது தேடி வரும். என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று துணை மேயரின் ஆதரவாளர்கள் பிரியா ராஜன் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால், பிரியா ராஜன் அதற்கு ஒப்புக்கொள்ளாததால், இப்போது பஞ்சாயத்து அமைச்சர் சேகர் பாபுவிடம் சென்றிருக்கிறது என்கிறார்கள்!

தி.மு.க-வில் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் கீதா ஜீவனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இருக்கின்றனர். இருவருக்குமே அமலாக்கத்துறையின் வழக்கு, தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இருவரின் துறைகளிலும் சொல்லிக்கொள்ளும்படியாகச் செயல்பாடுகள் இல்லை என்று முதல்வரும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கீதா ஜீவன் - அனிதா ராதாகிருஷ்ணன்

இதனால், இவர்களில் ஒருவரை மாற்றிவிட்டு அந்தப் பொறுப்புக்கு உதயநிதியின் ஆதரவாளரான மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலைக் களமிறக்கலாம் என்ற யோசனையில் தலைமை இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. இதையடுத்து, அனிதா, கீதா ஜீவன் இரு தரப்புமே தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள, ஜோயலுக்கு எதிராக தலைமையிடம் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இவர்களின் மூவ்களை தெரிந்துகொண்ட ஜோயல், இப்போதே இது பற்றி உதயநிதி தரப்பில் எடுத்துச் சொல்லியிருக்கிறாராம்!

‘மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட வட்டார, நகரத் தலைவர்களையோ, நிர்வாகிகளையோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையோ மாவட்டத் தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது என்பது செல்லாது. மாநிலத் தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்குழுவுக்கும் தகவல் தெரிவித்த பிறகே எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்க வேண்டும்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் சொந்தக் கட்சிக்கே போட்டி வேட்பாளர்களாக நின்றவர்கள், கூட்டணிக் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்டவர்கள், அதில் வெற்றிபெற்று பிரதிநிதிகளாக இருப்பவர்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களே கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இப்படியோர் அறிவிப்பை அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில தி.மு.க-வினர், தங்கள் பதவிகளை வாபஸ் பெறாத நிலையில், தி.மு.க தலைமையால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அதனாலேயே, இப்படியோர் அதிரடி அறிவிப்பு என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்!

புதுச்சேரியில் கடந்தகாலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் நேரடியாக அரசுப்பணி நியமனங்கள் கொடிகட்டிப் பறப்பது வழக்கம். குறிப்பிட்ட ஒரு துறைக்கு 100 பணியாளர்கள் இருந்தாலே போதும் என்றால், அங்கு 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதிலும் அவரின் தொகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களைப் பணியமர்த்துவது ரங்கசாமியின் ஸ்டைல்.

முதல்வர் ரங்கசாமி!

அதனால் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துவருவதுடன், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வருடக்கணக்கில் சம்பளமின்றி தவித்துவருகின்றனர். அந்த வகையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ‘பாண்லே’ நிறுவனத்தில் தற்போது புதிதாக 250 பணியாளர்களை நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் சுமார் 500 பணியாளர்களே போதுமென்ற நிலையில், தற்போது சுமார் 1,200 பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இதனால் பாண்லே நிறுவனம் விரைவில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று புலம்புகிறார்கள் தொழிற்சங்க நிர்வாகிகள்!

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலை பார்வையிட வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அப்படியே அழகர்கோயிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து 11 அடி உயரமுள்ள அரிவாளைக் காணிக்கையாக வழங்கியிருப்பது பலரின் பார்வையும் உயர்த்தியிருக்கிறது. கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாளையே காவல் காத்துவரும் கருப்பணசாமி, மிகவும் துடியான சாமி; இங்கு வேண்டிக்கொண்டால் அது பலித்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த அடிப்படையில், தன்மீதான வழக்குகள் பிரச்னை இல்லாமல் முடிய வேண்டும்...

எஸ்.பி.வேலுமணி

தன்னை எதிர்ப்பவர்கள் அழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அரிவாள் காணிக்கை கொடுத்திருக்கிறாராம் வேலுமணி. இதேபோல் கடந்த ஆண்டும் இங்கு அரிவாள் காணிக்கை கொடுத்ததால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்ற முடிந்தது; அதிலிருந்து பதினெட்டாம்படி கருப்பன் மேல் அதிக பற்றுக் கொண்டுவிட்டார் வேலுமணி என்கிறார்கள். இதைத் தொடர்ந்து சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை குருபகவான் கோயிலிலும் சிறப்பு பூஜை செய்திருக்கிறார் வேலுமணி. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததுடன், இந்த பூஜைகளின்போது வேலுமணி பக்கத்திலேயே இருந்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நீலகிரி எம்.பி ஆ.ராசாவுக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே பனிப்போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமிப்பதற்கு முன்பு வரை, ஆ.ராசாவுக்கு கோவையில் தனி செல்வாக்கு இருந்தது. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் ஆக்டிவாகக் கலந்துகொள்வார். ஆனால், செந்தில் பாலாஜி வருகைக்குப் பிறகு கோவையில் ‘ஒன் மேன் ஷோ’ மட்டுமே நடக்கிறது. இதில் ஆ.ராசா கடும் அப்செட் என்கிறார்கள்.

ஆ.ராசா

அதனால்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மார்ச் மாதம் கோவையில் நடந்த தி.மு.க செயற்குழுக் கூட்டத்தின் போஸ்டரில் ‘ஆ.ராசா சிறப்புரையாற்றுவார்’ என்று குறிப்பிட்டிருந்தும் ஆ.ராசா கலந்துகொள்ளவில்லை. அதேபோல சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியிலும் ஆ.ராசா தலைமை, செந்தில் பாலாஜி முன்னிலை வகிப்பதாக இருந்தது. நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ், போஸ்டர்கள் அடிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை!



source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-ks-azhagiri-plan-on-dmk-party-postings-issues-and-other-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக