Ad

புதன், 6 ஏப்ரல், 2022

தத்தெடுத்த சிறுமி வன்கொடுமை; பருவமடைந்த பிறகு கொடூர முகத்தைக் காட்டிய குடும்பம் - 4 பேர் கைது

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடியிருந்துவருகிறார். இவர், சென்னையிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். இவரின் சகோதரி, ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக மாணவியின் வீட்டுக்குச் சென்றனர். மாணவியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களையும் போலீஸார் வாக்குமூலமாகப் பதிவு செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அவரின் வளர்ப்பு தந்தை ஷெரீப் (64), அவரின் மனைவி ஜமீலா (58), இவர்களின் மகன்கள் இம்தியாஸ் (34), இர்பான் (29) ஆகிய நான்கு பேரை போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஷெரீப்பின் மகனான அணிப் (26), போலீஸாரால் தேடப்பட்டுவருகிறார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், சிறுமி குழந்தையாக இருந்தபோது அவரின் தாய், தந்தை அடுத்தடுத்து இறந்துவிட்டனர். அதனால் சிறுமியை வளர்க்க முடியாமல் அவரின் உறவினர்கள் சிரமப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் ஷெரீப் என்பவருக்கு மூன்று மகன்கள் இருந்ததால் அவர் சிறுமியைத் தத்தெடுக்க விரும்பினார்.

இதையடுத்து சிறுமியை ஷெரீப் அவரின் மனைவி ஜமீலா, தங்களின் வீட்டுக்கு அழைத்து வந்து மகள்போல வளர்த்தனர். இந்தத் தம்பதியரின் மூன்று மகன்களும் சிறுமியைத் தங்கையாகவே கருதினர். மூன்று அண்ணன்களுக்கு ஒரு தங்கையாக வளர்ந்த சிறுமி, சந்தோஷமாக இருந்தார். பிரபலமான பள்ளியில் சிறுமியைப் படிக்கவும் வைத்தனர். இந்தச் சமயத்தில் சிறுமி பருவமடைந்தார். அதுவரை சிறுமியை மகளாகப் பார்த்த ஷெரீப்பின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.

பாலியல் தொல்லை

அதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை வளர்ப்புத் தாய் ஜமீலாவிடம் கூறி, கதறி அழுதார். அதைக் கேட்ட அவரோ, நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடம் சொல்லாதே என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறார். அதனால் கருவை குடும்பத்தினர் கலைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் ஷெரீப்பால் சிறுமி பாதிக்கப்பட்ட தகவல் குடும்பத்தில் உள்ள இம்தியாஸ் (34), இர்பான் (29), அணிப் (26) ஆகியோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் சிறுமியை மிரட்டிப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். வளர்ப்பு தந்தை, உடன்பிறவாத அண்ணன்களால் தினமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குடும்பத்தில் யாரும் உதவி செய்யவில்லை. இதையடுத்து சிறுமி, தனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் மூலம் இந்தச் சம்பவத்தை காவல் நிலையத்துக்குத் தெரியப்படுத்தினார். இதையடுத்தே நாங்கள் அணிப்பை தவிர மற்றவர்களை கைதுசெய்துள்ளோம். சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-one-family-members-in-pocso-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக