Ad

ஞாயிறு, 30 ஜூலை, 2023

சேலம்: பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டும் மர்ம நபர் - தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை

சேலம், 2-வது அக்ரஹாரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, சேலம் பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த 45 வயது தொழிலாளி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடன் அவரின் 40 வயது மனைவியும் உடனிருந்து கணவனைக் கவனித்து வந்தார். இந்த நிலையில், இரண்டு நாள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் மனைவிக்கு செல்போனில் தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், மருத்துவமனையில் குளித்துக்கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதாகக் கூறி, தான் அழைக்கும் இடத்துக்கு வரவேண்டும் என மிரட்டியிருக்கிறார்.

மேலும், அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அவர் குளித்துக்கொண்டிருந்த வீடியோவை அனுப்பிவைத்திருக்கிறார். இதைக் கண்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மீண்டும் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய அந்த நபர், தான் கூப்பிடும் இடத்துக்கு வராவிட்டால் அவர் குளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண் சேலம் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் கோகிலா விசாரணை செய்துவருகிறார். மேலும் முதற்கட்டமாக மருத்துவமனையில், வேலை பார்த்து வரும் மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் காவலாளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சேலத்தில் தனியார் மருத்துவமனை பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/person-who-took-a-video-of-a-woman-taking-a-bath-and-threatened-her

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக