Ad

ஞாயிறு, 23 ஜூலை, 2023

திருவாரூர்: உடன் பணியாற்றிய பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - ஆயுதப்படை காவலர் கைது!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தவர் சற்குணம். இவருக்கு வயது 31. இவர் தன்னோடு பணியாற்றிய 22 வயதான பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

கடந்த 18-ம் தேதி அன்று இரவு, திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த 22 வயதான பெண் காவலர் ஒருவர், தன்னுடைய பணி சம்மந்தமாக தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரோடு வேலை செய்யும் சக காவலரான சற்குணம் என்பவர் அந்த பெண் காவலரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, கொரடாச்சேரி என்ற பகுதியில் இறங்குமாறும், பிறகு நான் உங்களை என்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாகவும் கூறியிருக்கிறார். தன்னுடன் பணியாற்றும் சக காவலர் என்ற நம்பிக்கையில் அந்த பெண் காவலர், பேருந்தினை விட்டு கொரடாச்சேரி என்கிற பகுதியில் இறங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து சற்குணம் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் அந்த பெண் காவலரை அழைத்துக் கொண்டு வந்த போது, அம்மையப்பன் என்கிற பகுதியில் வைத்து அந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண் காவலர், அவரிடம் இருந்து தப்பித்து, வேறொரு காவலரின் உதவியோடு, திருவாரூருக்கு வந்து சேர்த்துள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் சற்குணம்..

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவலர், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் தன்னுடன் பணியாற்றும் சக காவலர் சற்குணம் என்பவர் தனக்கு பணியின் போது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் உடனடியாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இப்புகாரினை நேரடியாக விசாரணை செய்த திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார், சற்குணம் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்ததன், அடிப்படையில் அவரை நேற்று ஆயுதப்படை பிரிவிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கொரடாச்சேரி காவல்துறையினர் ஆயுதப்படை காவலரான சற்குணத்தை கைது செய்து திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பெண்களை பொது இடத்தில் வைத்து மானபங்கம் செய்வது ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவாரூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/police-man-was-suspended-and-arrested-in-sexual-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக