Ad

வியாழன், 21 ஜூலை, 2022

பள்ளி ஆசிரியை டு ஜனாதிபதி: இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நடந்து முடிந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி(6,76,803) முர்மு வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை(3,80,177) விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.

திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் எதிரெதிர் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

மொத்தமுள்ள 771 எம்.பி-க்களில் காலியாக இருக்கும் ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவரும் வாக்களித்தனர். அதேபோல அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ-க்கள், காலியாகவிருக்கும் ஆறு பேர் நீங்கலாக 4,025 பேர் வாக்களித்தனர். குறிப்பாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகை

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூலை 21) தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு வெற்றிபெற்றிருக்கிறார். வரும் ஜூலை 25-ம் தேதி இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில், குடியரசுத் தலைவராவதற்கு முன்பாக திரௌபதி முர்மு கடந்துவந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்ப்போம்!

திரௌபதி முர்மு-ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்துவந்த பாதை:

குடும்பத்தலைவியாக...

திரௌபதி முர்மு, 1958-ம் ஆண்டு, ஜூன் 20-ம் தேதி ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாநிலத்திலுள்ள பாடிபோசி எனும் கிராமத்தில் பிறந்தார். சந்தால் பழங்குயினத்தைச் சேர்ந்த இவர் தனது கல்லூரிப் படிப்பை புவனேஸ்வரிலுள்ள ரமா தேவி மகளிர் கல்லுாரியில் முடித்தார். அதன் பிறகு, பள்ளி ஆசிரியையாக நீண்டகாலம் பணியாற்றினார். ஷ்யாம் சரண் முர்மு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், இரண்டு மகன், ஒரு மகள் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார். அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார்.

பா.ஜ.க உறுப்பினராக...

ஆசிரியைப் பணியை கைவிட்ட திரௌபதி முர்மு பா.ஜ.க-வில் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டார். முதன்முதலாக 1997-ம் ஆண்டு நடந்த ராய்ரங்பூர் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், ராய்ரங்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் 2000 முதல் 2002 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

திரௌபதி முர்மு

சிறந்த எம்.எல்.ஏவாக...

2004-ம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ராய்ரங்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரௌபதி முர்மு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரௌபதி முர்முவின் சிறப்பான செயல்பாடுகளுக்காக, 2007-ம் ஆண்டு சிறந்த ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினருக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு 2009 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார். அதேசமயம், 2006 முதல் 2009 வரை பா.ஜ.க-வின் பழங்குடிப் பிரிவான `எஸ்.டி.மோர்ச்சா'வின் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.

முதல் பெண் ஆளுநராக...

2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற புகழை அடைந்தார். அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.

திரௌபதி முர்மு, மோடி

குடியரசுத் தலைவராக...

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட திரௌபதி முர்மு, எதிர்பார்த்தபடியே அமோக வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் `இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்’ என்ற புகழையும், `இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர்’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/draupadi-murmu-became-15th-president-of-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக