Ad

ஞாயிறு, 24 ஜூலை, 2022

“நாங்களும் ஆளணும்! - டாக்டர் ராமதாஸ் #AppExclusive

தேர்தல் களத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் - 8

துரை தமிழ்நாடு ஓட்டலின் முதல் தளம்... அறைக்கு முன்பாகக் கையில் எலுமிச்சை சகிதம்கூடிய தொண்டர் படையை ஓரிரு நிமிடங்கள் சந்தித்து விட்டு. ‘விகடன் பேட்டி.. மெட்ராஸ் லேருந்து வந்திருக்காங்க.. அவங்கனை முடிச்சுட்டு வந்திர்றேனே!’ என்றார்  ராமதாஸ் வேண்டுகோள் தொனியில். தொண்டர்கள் விலகி வழிவிட நாம் அவர் முன்.. கதர் சட்டை அணியும் பழக்கமுடைய ராமதாஸ், அது சுத்தமாக இருப்பதில் மட்டுமே அக்கறையோடு இருக்கிறார். மற்றபடி அங்கங்கே கொஞ்சம் கல்லடையிட்டுக் கிழிந்திருந்தாலும் அதற்காகக் கவலைப்படுவதில்லை. அன்றும் அதே அலட்சியம் தான்! ஒருவேளை, லட்சிய மனிதரின் லட்சணம்? ! மெதுவான குரலில் இயல்பாகப் பேசுவதுதான் டாக்டர் ராமதாஸின் பாணி! இனி அவரது பேட்டியிலிருந்து...

Dr. S.Ramadoss's Exclusive Interview

"வன்னியர் சங்கம் என்று எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஜாதிய இயக்கம் பத்து வருடங்களுக்குள்ளாகப் பாட்டாளி மக்கள் கட்சி என்று பரிணாம வளர்ச்சி பெற்றது. கட்சி தேர்தல் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறிவிட்டதா?"

"முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வன்னியர் சங்கம் வேறு. பாட்டாளி மக்கள் கட்சி வேறு. வன்னியர் சங்கம் 1980-களில் துவக்கப்பட்டபோது, அந்த இன மக்களுடைய சமூக விடுதலைக்காக அது போராடியது. 1987-ல் தொடர் சாலை மறியல் நடத்தி தங்கள் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீட்டு நியாயம் கிடைக்க வெகுண்டெழுந்தது. ஆனால், அந்த வன்னியர் சங்கமே பின்னர் கட்சியாக மாறிவிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்குச் சமூக விடுதலை பெற்றுத் தருவது இவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பதும் அரசியல் அதிகாரம் பெறுவதும்தான் குறிக்கோள். கட்சி தொடங்கிய ஐந்தாவது மாதம் நாங்கள் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைச் சந்தித்தோம். அதில் தனியாகவே நின்று ஏழு சதவிகித வாக்குகளைப் பெற்றோம். கட்சிக்கு மிகச் சிறந்த அங்கீகாரமும் கிடைத்தது. அடுத்தடுத்த கட்டங்களில் எங்கள் பலம் பெருகிக் கொண்டேயிருக்கிறதே தவிர, குறையவில்லை..”

“என்னதான் நீங்கள் வன்னியர் சங்கம் என்ற அடைமொழியை விட்டொழித்தாலும் இன்னமும் அப்படித்தானே பா.ம.க. அடையாளம் காணப்படுகிறது...?”

"எங்களது கட்சியைப் பற்றியும், எங்களது நடவடிக்கைகள் பற்றியும் அறியாதவர்கள்தான் எங்களைத் தவறாக வன்னியக் கட்சி என்று சொல்கிறார்கள். கட்சியை மட்டுமா ஜாதி கட்சி என்கிறார்கள்..? என்னைக் கூடத்தான் மரம்வெட்டி என்கிறார்கள். ஆனால், யதார்த்த நிலைமை என்ன தெரியுமா? வன்னியர்களே அல்லாத தெற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, பசும்பொன், புதுக்கோட்டை போன்ற இடங்களில் கட்சி பலமாக வளர்ந்திருக்கிறது. தேவேந்திரகுல மக்கள், யாதவர், நாடார், முத்தரையர், அருந்ததியர்கள், நாவிதர்கள் போன்ற எல்லா சமுதாய மக்களும் எங்கள் கட்சியிலே பெருவாரியாக இருக்கிறார்கள். இதில் பல ஜாதியினர் கட்சிப் பொறுப்பிலேகூட இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்.? பா.ம.கவின் தலைவரேகூட ஒரு வன்னியர் இல்லையே. தலைவரும் மாநிலப் பொதுச் செயலாளருமான தலித் எழில்மலை ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவராயிற்றே? அது மட்டுமல்ல. எங்கள் கட்சியிலேதான் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்களும் எங்கள் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆதலால், இனியாவது வன்னியக் கட்சி என்கிற அபாண்டம் வேண்டாம்."

Dr. S.Ramadoss's Exclusive Interview

"பா.ம.க. தேர்தலுக்கு எவ்வளவு தூரம் தயாராகி இருக்கிறது?”

"இந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கும் மேலான மக்கள் போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். காவிரி பிரச்னை, கர்நாடகத் தமிழர்கள் பிரச்னை, இடஒதுக்கீடு, பஸ் கட்டண உயர்வு, தடா எதிர்ப்பு, உர விலையேற்ற எதிர்ப்பு, இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து... என்று வகை வகையான போராட்டங்கள்! இவையனைத்தும் மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி நான் தொடர்ந்து தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் மக்களின் எண்ண ஓட்டம் புரிகிறது. பாமக - மக்கள் நலனுக்காகத் தேர்தலைச் சந்திக்க முழுவீச்சில் தயாராக இருப்பது போலவே மக்களும் எங்களை ஆதரிக்க அதே வேகத்தில் தயாராக இருக்கிறார்கள்."

"வாழப்பாடிக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது நியாயமா?”

“வாழப்பாடியாருக்காக நாங்கள் விலகவில்லை. அவர் கட்சி வேறு. எங்கள் கட்சி வேறு. ஏழு கட்சிக் கூட்டணி என்றிருந்த தி.மு.க. கூட்டணி எட்டு, ஒன்பது என்று கூடவேண்டுமே எனும் எண்ணத்தில்தான் நான் வாழப்பாடியைக் கூட்டணியில் இருத்திக்கொள்ள வேண்டி கலைஞரிடம் பேசினேன். ஆனால், வாழப் பாடி விலகலில் கலைஞர் உறுதியாக இருந்ததால் அந்தப் பிரச்னையை அதோடு விட்டாச்சு. வாழப்பாடி குறித்து எந்த நிபந்தனையும் நாங்கள் வைக்கவில்லை. தி. மு. க. தனது மாநாட்டுக்கு, தோழமைக் கட்சியின் தலைவர்களைக் கூப்பிடுவதாகச் சொன்னது. ஆனால், கடைசிவரை ஒரு அழைப்புகூட வரவில்லை. தவிர, தோழமைக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டச்சொல்லி நாங்கள் கேட்டும் கலைஞரிடமிருந்து அதற்குச் சரியான பதில் வரவில்லை. இதையெல்லாம் பார்த்தபோது, தி.மு.க. தனது மாநாட்டில் பொதுக்குழுவைக் கூட்டி பா.ம.க. குறித்து வேறு ஏதாவது முடிவு எடுத்துவிடுமோ என்று கூட நாங்கள் நினைத்தோம். அதனால்தான் அப்படி அவர்கள் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பாக நாமே ஒரு முடிவை எடுத்து நமது கட்சி நிலைப்பாட்டை வெளிப் படுத்திவிடலாம் என்று எண்ணினோம். செயல்பட்டோம்.”

"இப்போது நீங்கள் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறதே" -

“தி மு. க. எங்க ளது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பான வீர பாண்டி ஆறுமுகமும் என்னைச் சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்தன. நல்ல முடிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது. இதைப் பற்றிய திட்டவட்டமான அறிவிப்பை சென்னையில் மார்ச் 16-ம் தேதி நடைபெற இருக்கும் எங்கள் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டில் வெளியிடுவோம்...”

“இப்படி நாள் கடத்துவதன் மூலம் நீங்கள் தொகுதிப் பங்கீட்டில் அதிக இடம் கிடைக்கவும், ஆட்சியில் பங்கு கேட்டும் தி.மு.க-வோடு ‘பார்கெய்ன்’ செய்கிறீர்கள் என்று எடுத்து க் கொள்ளலாமா?”

"இன்னமும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களே துவங்கவில்லை. அதில் எந்தப் பிரச்னையும் வராது. கூட்டணி அமைய அது எந்தவிதத்திலும் முட்டுக் கட்டையும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பதைப் பொறுத்த வரையில் நாங்கள் கூட்டணி ஆட்சி என்றே முதலில் சொல்லிக் கொண்டிருந் தோம். ஆனால், கலைஞர் அதற்கு உடன்படவில்லை. தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு தனித்தே ஆட்சி அமைக்கும் - எனினும் பா.ம.க.வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும்' என்று நேரிலும் பத்திரிகைகளிலும் சொல்லி வருகிறார். கலைஞர். அதனால் நாங்கள் அந்தக் கூட்டணி ஆட்சி பேச்சை வலியுறுத்த வில்லை. தவிர, அமைச்சரவையில் இடம்பெறுவதா இல்லையா என்பது பற்றியும் பிற்பாடு எங்கள் தலைமைக் குழுவே பேசி முடிவெடுக்கும்.”

“பண்ருட்டி பா. ம.க-விலிருந்து விலகியதால் கட்சி எந்த அளவு பாதிக்கப்பட்டது..?”

“பண்ருட்டியின் பின்னால் அவர் நிழல்கூடப் போகாது என்பது அனை வரும் அறிந்த உண்மை. அதனால் சிறுபாதிப்புகூடக் கிடையாது."

"ஜான் பாண்டியன் விலகியதாலாவது பாதிப்பு உண்டா..? தேவேந்திரகுல மக்கள் அவர் பின்னால் பெருமளவு இருக்கிறார்கள் போலிருக்கிறதே...?”

"ஜான் பாண்டியன் எங்கள் கட்சியிலே செல்வாக்கோடு இருந்தர்ர். அவருடைய அணுகுமுறையால் அவரேதான் எங்களை விட்டுப் போனார். இப்போதைய நிலை என்னவென்றால், அவர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பது. இதனால் தேவேந்திரகுல மக்கள் அவர் மீது கொதிப்படைந்து போயிருக்கிறார்கள். இன்று யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை."

“வன்னியர் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலோர் இன்று பா.ம.க-வில் எனில், வன்னியர் சங்கம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இது உங்கள் கட்சியைத் தேர்தலில் பாதிக்காதா?”

எங்களின் சாலைமறியல் போராட்டத்தைத் தவறு என்று சொல்வது இடஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகள்தான். அவர்கள்தான் நாங்கள் வன்முறையாளர்கள், மரம்வெட்டிகள் என்றெல்லாம் பொய்ப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்திருப்பவர்கள்.அந்தச் சாலை மறியல் ஏன் நடந்தது? நியாயம் கேட்கப்போன பதினோரு பேரை ஒரே நேரத்தில் போலீஸ் கட்டுக் கொன்றபோது, விழுப்புரம் மாவட்டத்தில் கொந்தளிப்பு அதிகமாகியது. அந்த நேரத்தில் உணர்ச்சிவயப்பட்டு வாகனங் களுக்குத் தடையை ஏற்படுத்த மக்களாக மரங்களைச் சாய்த்தார்கள். இது எதுவும் திட்டமிட்ட செயலல்ல. அப்படித் திட்டமிட்டிருந்தால் ஒரு மரம்கூட இன்று இருந்திருக்காது. அன்று நடந்து முடிந்தது மக்கள் ஆவேசம். யதேச்சையாக நேர்ந்தது அது! இதில் எங்களுக்கு ஏன் குத்த வேண்டும் வன்முறை முத்திரை?

மண்டல் கமிஷன் அறிக்கை வெளியிட்ட பிறகு வடநாட்டில் கலவரங்கள் நடந்தன. அமளிக்கு நடுவே சிலர் தீ வைத்துக்கொண்டு ஜாலம் செய்தார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான அது ஏன் பெரிதுபடுத்தப்படவில்லை?. வன்முறை யாகச் சித்திரிக்கப்படவில்லை?.

காவிரி நீர்ப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஜெயலலிதா அரசியல் ஸ்டண்ட் அடித்தபோது நான்கு வழிகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் அரசாங்க பஸ் ஊழியர்களுக்கும் தனியார் பஸ் டிரைவர்களுக்கும் தகராறு ஏற்பட்டபோது ஒரே மணி நேரத்தில் எண்பத்தேழு பஸ்கள் சேதமடைந்தன.

நாகர்கோவிலில் காமராஜர் சிலை பீடம் சேதப்பட்டதற்காக இருநூறு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... இதெல்லாம் வன்முறை இல்லையா?.

இன்று குடிதண்ணீர், சாலை வசதி கேட்டு ஆங்காங்கே கிராம மக்களே எந்தக் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் தன்னெழுச்சியாகப் போராடும் நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் பதினோரு பேரை மாய்த்த துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்து நடத்திய சாலை மறியல் மட்டும் வன்முறை ஆகிவிடுமா?.. அப்போது எங்கள் மக்கள் நூறு மரங்களை வெட்டியிருந்தால் அதிகம். ஆனால் பிற்பாடு.? சாலையை விரிவு படுத்துவதாகச் சொல்லி நெடுஞ்சாலைத் துறையே நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தியதே!.. அதை ஏன் மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை?. இப்போது நான் பசுமைத்தாயகம் என்ற பெயரில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக் காக ஒர் இயக்கம் ஆரம்பித்துள்ளேன். அதையும்கூட வெட்டின மரங்களுக்கு பிராயச்சித்தம் பண்ணுகிறார் . ராமதாஸ்' என்று கிண்டலடிக்கிறார்கள். இப்படி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும். மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள் எங்களுக்கு வோட்டு போடுவார்கள்

"எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்படிப் பலவாகப் பிரிந்திருப்பதால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தானே லாபம்?”

“ஒருக்காலும் இல்லை. எத்தனை கூட்டணிகள் ஏற்பட்டாலும், எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியில் இருக்கின்றன எனும் இறுதி நிலை ஏற்படாவிட்டாலும் கூட இன்று தமிழ்நாட்டில் உள்ள யதார்த்த நிலை என்னவெனில், ‘ஜெயலலிதா எதிர்ப்பு அலை’தான்! மக்கள் மத்தியில் பலமாக வீசுகின்ற இந்த அலையால் ஜெயலலிதா மீண்டும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. தேர்தல் நெருங்க... நெருங்க அவரை வீழ்த்துகிற ஒரு பலமான அணி நிச்சயமாக உருவாகும். அந்த அணிக்குப் பாட்டாளி மக்கள் கட்சி பக்கத்துணையாக நிற்கும். ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கும் இருக்கும்."

"நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா?. சத்தியம் இன்னமும் அப்படியே அமலில் இருக்கிறதா?”

"கட்டாயம்! நான் 1980-ல் வன்னியர் சங்கம் துவக்கப்பட்டபோதே மூன்று சத்தியங்கள் செய்தேன். அதாவது, எந்தச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அது என் சொந்தச் செலவில்தான்! எந்தக் காலகட்டத்திலும் நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்! எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட்டேன்! இன்னொரு உபசத்தியம், என்னுடைய வாரிசுகளோ குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வரமாட்டார்கள் என்பது. இவை என் இறுதிமூச்சு வரையிலும் எனக்குப் பின்னாலும் அமலில் இருக்கும்."

"உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?”

"முதலில் சுற்றுப்புறச் சூழல் - நிலம், நீர், வானம் என்று எதிலும் மாசுபடாத நிலையை உருவாக்க முனைவோம். இரண்டாவது கட்டாயக் கல்வி - அதிலும் தரமான கல்வி, ஏழைக்கு ஒரு கல்வி. பணக்காரனுக்கு ஒரு கல்வி என்றிருக்கக்கூடாது. எல்லாம் பொதுவான கல்வியாக இருக்க வேண்டும். மூன்றாவது தமிழ் - எல்லாவற்றிலும் ஆட்சி மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். மழலையர் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எல்லாம் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பதுதான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும் என்பது உலக வல்லுநர்களின் கூற்று. நான்காவதாக இடஒதுக்கீடு - புதுவிதமான ஃபார்முலாவை நாங்கள் வைத்திருக்கிறோம். இதனால் எல்லாவித மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் அனைவரியும் எங்கள் ஃபார்முலா திருப்திப்படுத்தும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்."

“இப்போது அநேகமாக எல்லா ஜாதியினரும் பேரணி, மாநாடு நடத்தி தங்கள்_பலத்தை_நிரூபிக்கத் துவங்கி விட்டார்களே. இது அரசியலில் சரியான போக்குதானா?"

"வெவ்வேறு ஜாதி அமைப்புகள் தங்கள் பலம் நிரூபிப்பதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?... காலங்காலமாக வோட்டு வங்கிகளாகவே இருந்துவிட்ட ஒடுக்கப்பட்ட ஜாதி மக்கள், அரசியல் அதிகாரம் பெறாத ஜாதிகள் தாங்களும் அரசியல் அதிகாரம் பெறும் துடிப்போடு இருப்பதைத்தானே இந்தத் தேர்தலிலே காண முடிகிறது! இப்படிப்பட்ட மக்கள் உணர்வுக்கு ஈடுகொடுக்கிற் அரசியல் கட்சிகளே இன்று தப்பிப் பிழைக்க முடியும்! 'நாங்களும் வாழணும்’ என்ற அவலக் குரல் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுந்தது ஒரு காலம்! இப்போது அந்த மக்களே வேறு மாதிரி சொல்கிறார்கள். 'இதுவரை எங்களை யாரும் வாழ வைக்கவில்லை... நாங்களே ஆண்டால்தான் நாங்கள் வாழ முடியும் என்பது தெளிவு. எனவே, இனி நாங்களும் ஆளணும்!' அவர்கள் நம்புவது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை."

- எஸ். சுபா

படம் கே. ராஜசேகரன்

(17.03.1996 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


source https://www.vikatan.com/government-and-politics/policies/dr-sramadosss-exclusive-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக