Ad

சனி, 23 ஜூலை, 2022

விதை முளைப்புத் திறனில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு... ஓர் ஆராய்ச்சி பார்வை!

விதை என்பது விவசாயத்தின் அடிப்படை மற்றும் மிக முக்கியமான உள்ளீடு பொருள் ஆகும். உயர்தரமான விதைகள் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு விவசாய உத்தியும் உற்பத்தி முறைகளும் பயனற்றதாகவே இருக்கும்.

சாதகமான வயல் சூழ்நிலைகளில் நல்லதரமான விதைகளுடன் மற்ற பரித்துரைக்கப்பட்ட உள்ளீடுகள் பயன்படுத்தும் போது விதை சீரான மற்றும் விரைவான முளைப்புத்திறனுடன் வளரும். அத்துடன் ஆரோக்கியமான பயிர் உற்பத்தி, நல்லதொரு பயிர் அறுவடை ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்குகிறது.

விதையின் தரமானது அதன் உடல் மற்றும் மரபியல் தூய்மை, விதைமுளைப்பு, வீரியம், விதை ஆரோக்கியம் மற்றும் அளவு, வடிவம், எடை மற்றும் நிறம் போன்ற பல அளவுருக்களை கொண்டுள்ளது. இந்த அளவுருக்கள் ஒவ்வொன்றும் முழு பயிர் வளர்ச்சிக் காலத்திலும் அடுத்தடுத்த விதை செயலாக்கத்திலும் நிலவும் காலநிலை மாறுதலைப் பொறுத்தது. தட்பவெப்பநிலைக் சாதகமற்று அமைந்தால் தரம் குறைந்த விதைகள் உருவாக்கப்படுவதுடன் குறைந்த சந்தைமதிப்பைப் பெற்று இறுதியில் விவசாயிகள் மிகுந்த பொருளாதார நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாகிவிடும்.

விதைகள் முளைப்பு

உயர்தரமான விதைகளைப் பெறுவதற்கு, வயலில் தரமான உள்ளீடுகளுடன், சரியான நேரத்தில் விதைக்க வேண்டும். சீரான முளைப்பு, வளர்ச்சி, பூக்கும் வரை சரியான விதத்தில் பராமரிக்க வேண்டும்.

அவற்றில் முக்கிமாக, மகரந்தச்சேர்க்கையை தொடர்ந்து கரு உருவாக்கம் மற்றும் கருத்தரித்தல், என்டோஸ்பெர்ம் வளர்ச்சி, விதை முதிர்ச்சி சரியான நேரத்தில் அறுவடை மற்றும் பதப்படுத்துதல் ஆகிய உத்திகளைக் கையாளுதல் வேண்டும். இந்த நீண்ட சங்கிலியின் ஒவ்வொரு கட்டமும் உயிரியல் மற்றும் உயிரற்ற கூறுகளைக் கொண்டு வரையறுக்கக்கூடியது.

பயிர் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகள்

தாவர வளரச்சியின் ஒவ்வொரு நகரலிலும் பல்வேறு அறிவியல் குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனகளால் பல அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே வெப்பமயமாதல் காரணியானது வாசந்தகாலத்திலிருந்து இலையுதிர் காலம் வரை விதைமுளைப்பதில் மாற்றங்களை உண்டு செய்யும் என்பது தெரியவந்துள்ளது.

இயற்கையாகவே விதை உறக்கநிலை என்பது பருவநிலை மாற்றத்தால் விரும்பத்தகாத நேரத்தில் பல்வேறு வேதியியல் மாற்றத்தின் மூலம் விதை முளைத்தலை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் அதிகபட்ச வெப்பநிலையானது கோதுமைப் பயிரில் மகரந்த மலட்டுத்தன்மை ஏற்பட காரணமாக இருக்கின்றது. மேலும் பயிர் வளர்ச்சியின் போது குறைந்த வெப்பநிலை பயிரின் காலத்தை அதிகரிப்பதுடன் மற்றும் அதிகப்படியான வெப்பநிலையானது பயிரின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் முதிர்ச்சியை துரிதப்படுத்துகிறது. குறைந்த வெப்பநிலை காரணியானது மகரந்தச்சேர்க்கையின் போது மலட்டுத்தன்மையை பல தாவரங்களில் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மகரந்த தானியப் பயிர்களின் முளைப்புத்திறன் குறைந்து நல்ல விதைகளை வழங்குகிறது.

கோதுமை

பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல வெப்பநிலையானது திட்டமிட்ட அதிகரிப்புக்கு மேல் இருப்பதால் விதை முளைப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கம் கார்காலப் பயிர்களில் குறைவாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பருவமழை தாமதம், முன்கூட்டியே தொடங்குதல், வறட்சி மற்றும் வெள்ள அபாயம் போன்ற வானிலை தீவிரங்கள் அதிகரிப்பு காரணமாக ஒட்டுமொத்த கார்காலப் பயிர் விவசாயம் பாதிக்கப்படும். வெப்பநிலையில் தினசரி சமச்சீரற்ற தன்மை, ஈரப்பதத்தில் மாற்றம், பூச்சிதாக்கம், வீரியம் குறைதல், அதிக வெப்பம் மற்றும் நீர் சமச்சீரற்ற தன்மை, அழுத்தம் போன்ற காரணிகள் பயிர் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

விதையின் தரம் குறை காரணம்

பருவநிலை மாற்றத்தால் நிகழும் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அழுத்தம் விதை முளைப்பை மட்டுமல்லாது விதையின் தரம் மற்றும் விளைந்த பயிர்களின் செயல்திறனையும் பாதிக்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் பயிர் வளர்ச்சியில் மாற்றம், விதை மூலம் பரவும் நோய் பரவலை ஊக்குவித்தல், மகரந்தச்சேர்க்கை காரணிகளைப் பாதித்தல், பகுதிமாற்றம், விதை விளைச்சலில் சரிவு, விதைகளின் சேமிப்பு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகிய காரணங்கள் விதை உற்பத்தியில் பயிர் இனங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இதனால் இறுதியில் விதைத் தொகுப்பு மற்றும் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது. விதை அளவு குறைவதால் விதை செயலாக்கத்தின் போது சிக்கல்கள் ஏற்படலாம். இருப்பினும் ஒவ்வொரு பாதகமான விளைவும் முழு விதையின் தரமான பண்புகளைப் பிரதிபலிக்கிறது. இது குறைந்த சந்தை மதிப்பு மற்றும் மலிவற்ற பண்ணை பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. போதுமானளவு விதை உற்பத்தி செய்யப்பட்டாலும் பயிர் வளர்ச்சியின் போது ஏற்படும் சாதகமற்ற வானிலையால் விதையில் பல ரசாயன வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு விதையின் தரம் குறைகிறது.

உழவு

விதை எண்ணெய் வித்துக்களில் காணப்படும் ஃபாலிபீனால்கள் மற்றும் பல்வேறு கொழுப்பு அமிலக் கலவை ஆகிய காரணிகள் விதைமுளைப்புத் திறன், விதை உறக்கநிலை, விதையுறை ஊடுருவல் மற்றும் விதைசேமிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. மேலும் வெவ்வேறு வகையான கொழுப்புகள் மற்றும் கரையக்கூடிய சர்க்கரைகளின் குவிப்புத் தன்மையானது விதைகளுக்கு ஏற்படும் பெராக்ஸிடேடிவ் நொதிக்காரணியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. ஒலியிக் அமிலம் மற்றும் லினோஒலியிக் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமில விகிதம் போன்ற காரணிகள் விதை முளைத்தலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. லினோஒலியிக் அமில அதிக முனைப்பு விகிதத்துடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரணு சவ்வுகளின் முக்கியகூறுகளான கிளைக்கோலிப்பிடுகளின் தொகுப்பிற்கு இது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஆனால் தாவரபயிர்களில் உள்ள கொழுப்பு அமிலத் தன்மை மற்றும் அதன் விகிதம் சுற்றுச்சூழல் அழுத்தக் காரணிகளால் பாதிப்படையும். எண்ணெய் உற்பத்தி செய்யும் தாவரங்களில், குளிர் காலநிலையில் வளரும் தாவரங்கள் செறிவுற்ற மற்றும் ஒற்றைசெறிவில்லா கொழுப்பு அமிலங்களை அதிகமாகவும் செறிவூட்டப் பெற்ற கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருக்கும்.

இந்த பருவநிலை மாற்றமானது விதைகளின் உயிர்வேதியியல் கலவையில் பாதகமான மற்றும் கவனிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் விதைத் தரத்தில் பல தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர் ஊக்கிகள் மற்றும் இரசாயனங்கள் (ஜிப்ரெலிக் அமிலம், அப்சிசிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்றவை உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகளின் செயல்பாடுகள் விதைகள் முளைக்கச் செய்வதில் பங்கேற்கின்றன.

நாற்றுகள்

சமீபத்திய ப்ரோட்டியோமிக்ஸ் ஆய்வுகளின்படி விலைமதிப்பற்ற நுணுக்கங்கள் மூலம் உலோக அயனிகள் (எ.கா.தாமிரம் மற்றும் காட்மியம்) வழங்கியுள்ளன. சுற்றுப்புறச்சூழல் காரணிகளின் அடிப்படையில், இதுவரையில் 600க்கும் மேற்பட்ட புரதங்கள் விதைகளை முளைவிப்பதில் பல்வேறு வெளிப்பாடு வடிவங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கிய நொதிகளான கேலேஸ் (-1,3டி-குளுக்கனேஸ்), சுக்ரோஸ் மற்றும் ஸ்டார்ச் சிந்த்தேஸ்,ஹைட்ரோஜினேஸ் - மற்றும் அமிலேஸ்;இன்வர்ட்டேஸ்,புரோட்டியேஸ்,லிப்பேஸ்,மேனேஸ்,பெராக்ஸிடேஸ் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான அப்சிசிக் அமிலம் ஜிப்ரலின்ஸ் எத்திலின் ஃபிராசினோஸ்டீராய்ட்ஸ், ஆக்ஸின் மற்றும் சைட்டோகைனின் போன்றவை நல்லதரம் மிகுந்த விதைகளின் வளர்ச்சி மற்றும் விதைமுதிர்வுக்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

இத்தகைய நொதிகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவை சில ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூலக்கூறு செயல்முறைகளை ஒழுங்கு படுத்துவதுடன் விதைவளர்ச்சி முதிர்ச்சி ஆகிய செயல்முறைகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக விளங்குகின்றன. தாவரங்கள் மற்றும் விதைகளில் அழுத்த சகிப்புத்தன்மையை வழங்கும் ஃபுரோலின் போன்ற அமினோஅமிலங்கள் மற்றும் ஃபுரோலின் கார்பாக்ஸிலேட் சிந்த்தேஸ், ஆர்னிதைன் அமினோடிரான்ஸ்பெரேஸ் மற்றும் ஃபுரோலின் டிஹைட்ரோஜினேஸ் போன்ற அதன் தொகுப்பு பாதையின் நொதிகளும் சுற்றுச்சூழல் அழுத்தத்தால் மாற்றியமைக்கப்படுகின்றன.

விவசாயம்

பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் விதைமுளைப்பதில் பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் வளர்சிதை மாற்ற வழிமுறைகளை முன்னிலைப்படுத்துகின்றனர். மரபணு வெளிப்பாடு மற்றும் புரதத்தொகுப்பு கட்டுப்பாடு, செல் கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு, புரோட்டியோஸ்டாஸிஸ் மற்றும் அதன் டி.என்.ஏ ஒருமைப்பாடு செல் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் மற்ற முக்கிய ஹார்மோன் தூண்டுதல் செயல்பாடுகள். விதை முளைக்கும் திறனை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்குவகிக்கின்றது. ஆகவே எந்தவொரு பயிற்சி நிலையிலும் சீரற்ற வெப்பநிலையானது அத்தியாவசியக் கூறுகளின் இயல்பான செயல்பாடுகளைத் தடுக்கலாம். அதன் விளைவாக இறுதியில் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இதன் விளைவாக இறுதியில் இந்த பருவநிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பை மிகவும் கடுமையாகப் பாதிக்கும். பல்வேறு பரிமாணங்களின் முக்கியத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் பருவநிலை மாற்றத்தினால் ஒட்டு மொத்தத் தாக்கம் ஏற்படும். எனவே இத்தகைய பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்கும் வகையில் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை விதைகளின் தரத்தினை முன்னேற்றும் வகையில் திட்டமிடல் வேண்டும்.

நா.நித்யா,

SRS வேளாண் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம்.

(தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகம்)

ரா.கோபிநாத், வெ.பிரகாசம்

இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம், ஹைதராபாத்.



source https://www.vikatan.com/news/agriculture/impacts-of-climate-change-on-seed-germination-a-research-perspective

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக