Ad

வியாழன், 21 ஜூலை, 2022

நாமக்கல்: ஷட்டரை உடைத்து பணத்தை திருடும் கும்பலின் தொடர் கைவரிசை - அதிர வைத்த சிசிடிவி காட்சிகள்

நாமக்கல் நகரில் உள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே சிவா என்பவர் டி.வி, வாஷிங்மெசின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நள்ளிரவு இவரின் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சிவா நடத்தி வரும் கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 15,000-த்தை திருடி சென்றனர். மறுநாள் கடைக்கு வந்த சிவா, தனது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கடையின் கல்லாவில் இருந்த பணம் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உடனடியாக இது தொடர்பாக அவர் நாமக்கல் காவல் நிலையத்தி புகார் செய்தார். அதன்பேரில், நாமக்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து ஒருவர் கடைக்குள் வந்து, பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில கும்பல் இதேபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள செல்போன் ஷோரூமில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் சுமார் ரூ.50,000 த்தை திருடி சென்றனர்.

சி.சி.டி.வி காட்சி

மேலும், இதே பாணியில் நாமக்கல் டு பரமத்தி சாலையில் உள்ள ரெடிமேட் கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் ரூ.53,000 த்தை திருடி சென்றனர். இப்படி, ஒரே பாணியில் தொடர்ச்சியாக ஷட்டரை உடைத்து திருடும் மர்ம கும்பல் குறித்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மூன்று சம்பவங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவர் உள்ளே சென்று பணத்தை திருடுவதும், மற்றொருவர் வெளியில் காவலுக்கு நிற்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்று, தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

'போலீஸார் இரவு நேர ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாமக்கல்லில் உள்ள கடைகளில் தொடர்ச்சியாக மர்ம கும்பல் ஒன்று ஷட்டரை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/namakkal-police-searching-the-person-who-involved-on-theft-by-breaking-shutter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக