Ad

ஞாயிறு, 17 ஜூலை, 2022

திடீர் வாந்தி.. மரணம் - போதை ஊசியால் கோவை கல்லூரி மாணவருக்கு நடந்த அதிர்ச்சி

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அந்த மாணவர். தன் நண்பருடன், அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வாந்தி எடுத்ததால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோவை

பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே, குறிப்பிட்ட மாணவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து மாணவனின் தந்தை கொடுத்தப் புகாரின் பேரில், இயற்கைக்கு முரணான மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, மாணவனின் பிரேத பரிசோதனையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதை ஊசி

இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு (Syringe) மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரிய தெரியவந்தது.

மாணவனின் நண்பர்களை விசாரணை செய்ததில், மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்த போலீஸார் முகமது பஷீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது பஷீர்

``மாணவர்கள் இளம் வயதிலேயே போதை போன்ற தவறான வழியில் செல்லக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது.” என கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-college-student-death-after-drug-addict

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக