Ad

சனி, 18 மார்ச், 2023

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; மாணவியைக் கொலைசெய்துவிட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகள் பவித்ரா (21). கல்லூரி மாணவி. இவரின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் துரைக்கண்ணு (36). துரைக்கண்ணு கொத்தனார் வேலை செய்துவந்தார்.

துரைக்கண்ணுவும், பவித்ராவும் உறவினர்கள் என்பதால், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம், பவித்ராவின் குடும்பத்தினருக்குத் தெரியவரவே, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

உறவினர்களான இருவருக்கும் அண்ணன், தங்கை முறை வரும் என்பதும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

பெற்றோர் கண்டித்ததைத் தொடர்ந்து பவித்ரா, துரைக்கண்ணுவுடன் பழகுவதையும், பேசுவதையும் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், துரைக்கண்ணு கடந்த சில தினங்களாகவே விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பவித்ரா அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தியோருக்கிறார். இந்த நிலையில், பவித்ராவின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து, அவரது வீட்டுக்குச் சென்ற துரைக்கண்ணு, `இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்வோம்' என்று கூறியிருக்கிறார். அதற்கு, பவித்ரா மறுக்கவே, அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து, ஆத்திரமடைந்த துரைக்கண்ணு, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பவித்ராவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதில் சரிந்து விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பவித்ராவை வெட்டிய வேகத்தில், துரைக்கண்ணு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

வேலைக்குச் சென்ற பவித்ராவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, இது பற்றி கேள்விப்பட்ட உறவினர்கள் அங்கு குவிந்தனர்.

உடனே, இது குறித்து ஆலங்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த ஆலங்குடி போலீஸார், பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கு - தற்கொலை

தொடர்ந்து, மாணவியைக் கொலைசெய்த துரைக்கண்ணுவின் வீட்டுக்குள் போலீஸார் சென்று பார்த்தபோது, மின்விசிறியில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

காதலி தனக்குக் கிடைக்காத ஆத்திரத்தில், அவரைக் கொலைசெய்துவிட்டு, வந்த கையோடு துரைக்கண்ணுவும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், இது குறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/youngster-commits-suicide-after-murdering-a-girl-in-pudukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக