Ad

செவ்வாய், 21 மார்ச், 2023

``டெல்லி காவல்துறையைப் பார்த்து ராகுல் காந்தி பயந்து ஓடுவது ஏன்?" - அனுராக் தாகூர் கேள்வி

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி, `பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட சில பெண்கள் தங்கள் வாழ்வில் பாலியல் வன்கொடுமைகளைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டனர்’ என்றார். அதனடிப்படையில் அந்தப் பெண்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டுக்கு நேரிலும் சென்றது. காவல்துறை சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு ராகுல் காந்தி காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். ராகுல் காந்தி மட்டும் தனியே காரில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ராகுல் காந்தி ஒரு எம்.பி என்ற முறையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை காவல்துறையிடம் வழங்குவது அவரின் பொறுப்பு. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நடந்தபோது, கார் அணிவகுப்புடன் அங்கு சென்ற ராகுல் காந்தி, இப்போது டெல்லி போலீஸிடமிருந்து பயந்து ஓடுவது ஏன்... என்ன நிர்பந்தம்... பெண்களுக்கு நீதி கிடைப்பதில் அவருக்கு விரும்பமில்லையா?

ராகுல் காந்தி

பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது என்பதால், நாடாளுமன்றம் இயங்குவதை நாங்கள் விரும்புகிறோம். ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டால் நாடாளுமன்றம் இயங்கும். இந்தியாவிலிருந்து ஜனநாயகம் துடைத்து எறியப்பட்டதாக லண்டனில் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். ஆனால் உண்மையில் இந்திய ஜனநாயகத்தில் இருந்து காங்கிரஸ்தான் துடைத்து எறியப்பட்டுவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-rahul-running-scared-from-delhi-police-asks-anurag-thakur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக