Ad

வியாழன், 23 மார்ச், 2023

நாமக்கல்: 'ரூ.1.5 லட்சம் கொடுத்தால், காரை டோர் டெலிவரி செய்கிறேன்' - லாரி டிரைவரை ஏமாற்றிய மர்ம நபர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 54). இவர், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்தமாக கார் வாங்க ஆசைப்பட்டு, அதற்காக பணத்தை சேர்த்து வந்திருக்கிறார். அதோடு, லட்சுமணன் பழைய கார் வாங்குவதற்காக, ஃபேஸ்புக் மூலம் பழைய கார் யாராவது விற்பனைக்கு வைத்திருக்கிறார்களா என்று தேடி வந்திருக்கிறார். இந்த நிலையில், அவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், லட்சுமணனிடம் தன்னிடம் பழைய கார் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு அந்த கார் நல்ல நிலையில் உள்ளதாகவும், அதனை குறைந்த விலையில் தருவதாகவும் கூறியிருக்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த லட்சுமணன், அந்த காரை தான் வாங்கிகொள்வதாக அந்த மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு

இந்நிலையில், அந்த மர்ம நபர், 'ரூ.1.5 லட்சம் கொடுத்தால் அந்த காரை வீட்டிற்கே கொண்டு வந்து டோர் டெலிவரி செய்கிறேன்' என்று லட்சுமணனிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய லட்சுமணன், அந்த நபர் கொடுத்த வங்கி கண்க்கில் போன் பே மூலம் மூன்று தவணையாக, ரூ. 1,50,000 பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பணம் அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த நபர் காரை கொடுக்கவில்லை. மேலும் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்துள்ளது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன், இதுபற்றி நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி டிரைவரை கார் வழங்குவதாக கூறி அவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/namakkal-lorry-driver-was-cheated-in-the-name-of-used-car

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக