Ad

ஞாயிறு, 19 மார்ச், 2023

`கோல்டி பிரர் உங்களுடன் பேச விரும்புகிறார்’ - சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போது மான்களை வேட்டையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் வேட்டையாடியதற்கு கோர்ட் தண்டனை கொடுத்துவிட்டது. ஆனால் சல்மான் கான் வேட்டையாடிய மான் வகைகளை புனிதமாக கருதும் பிஸ்னோய் இன மக்கள் சல்மான் கான் மீது கோபத்தில் இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த பிரபல கிரிமினல் லாரன்ஸ் பிஸ்னோய், இது தொடர்பாக சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்திருந்தான். அதோடு சல்மான் கானை கொலை செய்ய மும்பைக்கு ஆட்களையும் அனுப்பி வைத்திருந்தான்.

கடந்த வாரம் லாரன்ஸ், `சல்மான்கான் மான்களை வேட்டையாடிதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று மிரட்டல் விடுத்திருந்தான். அவன் மிரட்டல் விடுத்த அடுத்த சில நாள்களில் கனடாவில் பதுங்கி இருக்கும் கோல்டி பிரர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். சல்மான் கான் அலுவலகத்திற்கு இந்த கொலை மிரட்டல் வந்துள்ளது. ரொஹித் கார்க் என்பவர் இந்த மிரட்டல் மெயிலை அனுப்பி இருந்தான். அதில், `கோல்டி பிரர் உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதோடு லாரன்ஸ் பிஸ்னோய் விடுத்துள்ள கொலை மிரட்டல் குறித்தும் மெயிலில் நினைவூட்டப்பட்டது. இக்கொலை மிரட்டல் குறித்து பாந்த்ரா போலீஸில் சல்மான் கான் புகார் செய்துள்ளார். சல்மான் கானின் மேலாளர் பிரசாந்த் இந்த புகாரை கொடுத்துள்ளார். இப்புகாரை தொடர்ந்து லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரர் ஆகியோருக்கு எதிராக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொலை மிரட்டலால் நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/crime/threats-to-actor-salman-khan-again-security-increased-due-to-threat-from-canada

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக