Ad

வியாழன், 16 மார்ச், 2023

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்: எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசின் நிலைப்பாடுதான் என்ன?!

தமிழக அரசு சேலம் எட்டு வழி்ச்சாலைக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் நிதின் கட்கரி, ``தமிழக அரசு அப்படியாக எந்த அனுமதியும் கோரவில்லை. திட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ”எனப் பதிலளித்துள்ளார். இந்தப் பதில் திமுகவின் 8 வழிச்சாலையின் நிலைப்பாடு குறித்தான  கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், மத்திய அரசால் எட்டுவழிச்சாலை அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்தினால் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  எனவே, இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும்  6 மாவட்டத்தின் விவசாய அமைப்புகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது.

நிதின் கட்கரி

ஆனால், 2021-ம் ஆண்டு வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தவுடன் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ``நாங்கள் வரம்புகள் மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்தோம். சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்குத் திமுக என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” எனப் பேசினார். மேலும், சட்டமன்றத்தில் 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி திட்டம் செயல்படுத்த இருப்பதாகக் கூறியதும் சர்ச்சையானது.

எட்டு வழிச்சாலைத் திட்டம்

திட்டம் எந்த வகையில் கொண்டுவரப்பட்டாலும் விவசாய நிலம் கையகப்படுத்தினால், நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 43-ல், ''விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் நிலைப்படுகளின் இந்த அறிவிப்புகள், அவர்கள் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்னும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாவது, ``இரட்டை வேடம் போடுவது திமுகவுக்கு கை வந்த கலை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு அறிவிப்பு, அதை ஆளுங்கட்சியாக மாறியபின் முற்றிலுமாக மாற்றுவது தான் திமுகவின் வாடிக்கை. காரணம், 8 வழிச்சாலையின் தேவை ஆளுங்கட்சியாக மாறிய பிறகுதான் அவர்களுக்குப் உரைத்திருக்கிறது.

8 வழிச் சாலை அமைக்க திட்டமிட்டபோது, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பாத நிலையில், சமூக விரோத சக்திகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியது திமுகவினர் தான். அந்த வகையில் நிதின் கட்கரி, திமுக 8 வழச்சாலையை எதிர்ப்பதாக காட்டிய பிம்பத்தை உடைத்துவிட்டார். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக இணைந்த போது விமர்சித்தவர்கள், ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பின் அதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தவறு சொல்லவில்லை. ஆனால், இந்த மாற்று நிலைப்பாடுகள் ஏன் என்பதே எங்களின் கேள்வி. தவிர, திமுக சட்டமன்றத்தில் அறிவித்தது போல் ஆறு வழிச்சாலையாக மாற்ற முடியாது. மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி நிலைப்பாட்டை மாற்றி வருகிறது திமுக” என சாடினார்.

நாராயணன் திருப்பதி

இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். அவர், ``ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமெனில், புதிய திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம். ஆனால், அதிமுக ஆட்சியில் மத்திய அரசு கொண்டுவந்த 8 வழிச்சாலை திட்டத்தை, ’எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலிருந்து சென்னைக்கு ரோடு போடுவதாக’ தவறான பரப்புரையை மேற்கொண்டனர். ஆனால், அந்தத் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்தபின் கையில் எடுத்து நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகள் மற்றும் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தினர். ஆனால், இப்போது மக்கள் இதற்கு உண்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ. வேலு, வளர்ச்சி திட்டத்தைக் கொண்டுவரும் போது விவசாய நிலங்கள் அழிய தான் செய்யும் எனப் பேசுவது கண்டனத்துக்குரியது.

பாபு முருகவேல்

‘எங்கள் நிலத்தை முழுவதும் அழிக்கிறது, அதனால் பரந்தூர் விமானம் நிலையம் வேண்டாம்’ என சொல்வதைக் கேட்டும் வளர்ச்சி என்பதைக் காரணம் காட்டி திட்டத்தைத் திணிக்கின்றனர். அதைத் தான் 8 வழிச்சாலைத் திட்டத்திலும் செய்கின்றனர். திட்டங்களைக் கொண்டுவரும் போது மக்கள் எதிர்ப்பது இயல்புதான். ஆனால் அதைப் புரிய வைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால், திமுகவைப் பொறுத்தவரை திட்டம் வேண்டும். ஆனால் எதிர்ப்பே வரக்கூடாது என சொல்வதில் நியாமில்லை.

அதிமுக ஆட்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திதான் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். ஆனால், அதற்கு எதிர்மறையான விசயங்களைப் பரப்பி வருகின்றனர். சரி இவர்கள் சொல்வது போல் நாங்கள் முறையாக ஆட்சி செய்யவில்லை என வைத்துக்கொள்வோம். தற்போது, ஆட்சி அமைத்திருக்கும் திமுக எல்லாத்தையும் சரியாக செய்ய வேண்டியது தானே. மக்கள் எதிர்ப்பை மீறி திட்டத்தை எதற்காகக் கொண்டு வருகின்றனர். இரட்டை வேடம் போட மட்டுமே திமுக-வுக்கு தெரியும். திட்டத்தை முறையாக நிறைவேற்ற அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

சிவ ஜெயராஜ்

இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் விளக்கம் கேட்டோம். அவர், ``எட்டு வழி சாலையைத் தான் திமுக எதிர்த்தது. சாலை அமைப்பதை திமுக எதிர்க்கவில்லை. எட்டு வழிச்சாலை அமைத்தால் விவசாய நிலங்கள் மற்றும் மக்களைப் பாதிக்கும் என்பதால், அதை ஆறு வழிச்சாலையாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் அறிவித்த 8 வழிச்சாலை போல் இந்த 6 வழிச்சாலை அமையாது. திட்டமுறையே முற்றிலுமாக மாற்றப்படும். அதற்கான அறிவிப்பை 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதற்கான ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது விசாரணைக்கு வந்து, தமிழக அரசு சார்பாக பதில் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு வர வேண்டும்.

கடந்த ஆட்சியில் மக்களிடம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கருத்துகேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் ஆறு வழிச் சாலை அமைக்க திட்டம் தொடங்கப்பட்டால் மக்களிடம் நிச்சயம் கருத்துக் கேட்கப்படும். திட்டத்துக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டால் மட்டும்தான் திட்டம் செயல்படுத்த தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஆனால், அதை இன்னும் திமுக அரசு தொடங்கவில்லை. ஆரம்ப கட்ட பணியில் தான் இருக்கிறது. அது பற்றி இப்போது பேச தேவையில்லை. திமுக அரசு எட்டு வழிச்சாலைக்குத் தான் எதிராக நின்றதே தவிர சாலை அமைப்பதற்கு அல்ல” என முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-idea-of-dmk-on-8-way-chennai-salem-road-project

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக