Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பாழடைந்த கட்டடத்தில் குட்கா குடோன்; டூ வீலரில் மது விற்பனை- குலசேகரத்தில் சிக்கிய `போலி நிருபர்'

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியில் போலீஸார் ரோந்து சென்றபோது மூடியிருந்த கடையருகே ஒரு மினி டெம்போ நின்றது. அந்த டெம்போவுக்கு அருகில் போலீஸார் சென்றதும், அதிலிருந்து ஒருவர் இறங்கி ஓடினார். போலீஸார் அவரைத் துரத்திப் பிடித்தனர். அந்த மினி டெம்போவை சோதனை செய்தபோது வாழைக்குலைக்கு அடியில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்றவர் பெயர் ஜலீல் எனவும் தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தில் குட்கா குடோன் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

உடனடியாக ஜலீலை அழைத்துக்கொண்டு போலீஸார் அந்த குடோனுக்குச் சென்றனர். அந்த குடோனில் பல மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த குடோனில் இருந்த ரபீக் (40) என்பவரையும் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். மினி டெம்போ மற்றும் குடோனிலிருந்து சுமார் 27 குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. ரபீக், ஜலீல் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட ரபீக்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``குலசேகரம் காவல்ஸ்தலத்தைச் சேர்ந்த ரபீக், தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை நடத்திவருகிறார். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்துவருவதாகவும் கூறுவார். மேலும், தமிழர் கட்சி-யின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவராக இருப்பதாகவும் சொல்லிக்கொள்வார். அது மட்டுமல்லாமல் தன்னைப் பத்திரிகை நிருபர் எனக் கூறிக்கொண்டு பதிவு எண் பெறப்படாத பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியபடி வலம்வந்தார்.

Also Read: கடலூர்: `மளிகை குடோனில் குட்கா மூட்டைகள்!’ - ஸ்கெட்ச் போட்டு வளைத்த காவல்துறை

வாகன சோதனை நடத்தும்போது தன்னை `பிரஸ்’ எனக் கூறிக்கொண்டு சென்றுவிடுவார். ரபீக், தனது பைக்கில் மதுபாட்டில்களைவைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஏற்கெனவே தகவல் வந்தது. ஆனால், அது குறித்து முறையான புகார்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்தநிலையில்தான் தடைசெய்யப்பட்ட குட்கா ஏற்றிவந்த டெம்போவை மடக்கியபோது ரபீக்கின் குடோன் குறித்த தகவல் கிடைத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மினி டெம்போ

இதையடுத்து குடோனிலிருந்து குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், ரபீக் எந்தெந்தப் பகுதிகளுக்கு குட்கா சப்ளை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.

குலசேகரம் பகுதியில் வாழைக்குலைக்கு அடியில் குட்காவை மறைத்துவைத்து எடுத்துச் செல்லப்பட்டதும், குட்கா குடோன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/police-arrests-man-over-running-gutkha-godown-in-kulasekharam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக