Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

அரியலூர்: `கூலி வேலைக்குச் சென்ற தாய்; 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை!'- போக்சோவில் கைதான உறவினர்

அரியலூர் அருகே தாய் கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சிறுமியின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ளதுடன், சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. திருப்பூரில் வேலை செய்து வந்த மணிகண்டன், கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்து, விவசாயப் பணிகளை செய்து வந்துள்ளார்.

மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு 4 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். பெண்ணின் கணவர் திருப்பூரில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்குச் சென்று விட்டார்.

Also Read: திருச்சி: `மனநலம் பாதித்த பெண் வன்கொடுமை; ஹெச்.ஐ.வி நாடகம்!' - சிக்கிய ஆட்டோ கும்பல்

அந்த சமயத்தில் மணிகண்டன் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மணிகண்டன் அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதையடுத்து நேற்று அந்த சிறுமி, வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார். இதில் பதறித் துடித்த சிறுமியின் தாய், தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் இதுதொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், வழக்கு பதிந்த போலீஸார் மணிகண்டனைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய அப்பகுதியினர்,``வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மணிகண்டன் 4 வயதே ஆன சிறுமியை கடைக்கு போகலாம் வா என அழைத்து கொண்டு அடுத்த தெருவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி கொண்ட மணிகண்டன், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியை சீரழித்த மணிகண்டன்

தனக்கு என்ன நடந்தது என்று சொல்வதற்கான விபரம் கூட அறியாத அந்த சிறுமி, இரண்டு தினங்களாக வலியோடு தவித்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் வலியைப் பொறுக்க முடியாமல் அழுதிருக்கிறார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய், `மகளுக்கு உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிகிட்டு போகணும்' என்று தனது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கொடூரனையே உதவிக்கு அழைத்தது பெரும் கொடுமை.

ஒன்றும் தெரியாததை போல் வந்த அந்த கொடூரனைப் பார்த்துமே அந்த சிறுமி நடுங்கியிருக்கிறாள். தன் தாயின் புடவைக்குள் மறைந்திருக்கிறார். இதையடுத்து ஆட்டோ ஒன்றில் சிறுமியை அழைத்து கொண்டு இருவரும் ஆஸ்பத்திருக்கு சென்ற போதும் சிறுமி பயத்தில் நடுங்கியபடியே சென்றுள்ளார்.

Also Read: ஒடிசா: `பாலியல் தொல்லை; கருக்கலைப்பு!’ - 13 வயதுச் சிறுமி விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர்

பின்னர் மருத்துவமனையில் சேர்த்தபிறகு சிறுமியின் பிறப்புறுப்பு காயங்கள் இருப்பது கண்டு சிறுமியின் தாய் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கலங்கி துடித்த தாய், `என்னாச்சு பாப்பா. உன்னை யார் இப்படி செய்தது?' என கண்ணீருடன் கேட்டிருக்கிறார். `மணிகண்டன் மாமாதான் வீட்டுக்கு வந்து என்னை அழைச்சுகிட்டு போனாங்க' என திக்கித் திணறி பதில் சொல்லியிருக்கிறார் அந்தச் சிறுமி. `கூடவே இருந்துக்கிட்டு இப்படி செய்துட்டானே?' என அழுது புலம்பியபடியே சிறுமியின் தாய் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பின்னர், மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/ariyalur-police-arrested-man-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக