Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

``இந்தியா தனது ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும்!" - மாலத்தீவு புதிய அதிபரின் கோரிக்கையும் பின்னணியும்

மாலத்தீவின் புதிய அதிபராக நவம்பர் 17-ம் தேதி அன்று பதவியேற்ற முகமது மூயிஸு (Mohamed Muizzu), மாலத்தீவிலிருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முகமது மூயிஸு தனது கோரிக்கையை, இந்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுடனான சந்திப்பின்போது முறையாக தெரிவித்தும் இருக்கிறார்.

முகமது மூயிஸ் - கிரண் ரிஜிஜூ

முக்கியமான சுற்றுலாத் தலமான மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸு பதவியேற்ற உடனேயே இவ்வாறு இந்தியாவுக்கு அழுத்தம் தரும் வகையில் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

முகமது மூயிஸும், சீனாவும்!

மாலே மாகாணத்தின் முன்னாள் அமைச்சரும், மேயருமான அதிபர் முகமது முய்ஸு, 2013 முதல் 2018 வரை மாலத்தீவின் அதிபராக இருந்து சீனாவிடம் பெருமளவில் கடன் வாங்கிய முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு (Abdulla Yameen) நெருக்கமானவர். இதே முகமது முய்ஸுதான், சீனாவுடன் வலுவான உறவை விரும்புவதாக ஒரு வருடத்துக்கு முன்பு கூறியிருந்தார்.

சீனா - மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்

அதாவது, ``2023-ல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்நோக்குகிறோம். அப்படி ஆட்சிக்கு வருகையில், அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எங்கள் இரு நாடுகளுக்கும் (சீனா - மாலத்தீவு) இடையிலான வலுவான உறவுகளின் அத்தியாயத்தை எழுதுவோம்" என்று கூறியிருந்தார். இதற்கிடையில், ஊழல் செய்த குற்றவியல் வழக்கில் அப்துல்லா யாமீன் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதன் காரணமாகத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதையடுத்து, தன்னுடைய இடத்துக்கு முகமது முய்ஸுவை அவர் பரிந்துரை செய்தார்.

புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு!

டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு விளங்குகிறது. அதேசமயம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் முக்கிய ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில், மாலத்தீவு ஒரு புவிசார் அரசியல் ஹாட்ஸ்பாடாக மாறியிருக்கிறது. இந்தியாவும், சீனாவும் நீண்ட கால புவிசார் அரசியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவின் வளர்ச்சியில் தாராளமாக முதலீடுகள் செய்திருக்கின்றன.

மாலத்தீவு

மாலத்தீவில் இந்திய ராணுவம்!

மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், இந்தியாவால் வழங்கப்படும் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக, இந்திய போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல ஏதுவாக இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்களின் இந்த சிறிய குழு பல ஆண்டுகளாக மாலத்தீவில் நிலைகொண்டிருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு, பல மருத்துவ அவசர காலங்களில் இந்திய ஹெலிகாப்டர்கள் உதவியதையும் குறிப்பிட்டுள்ளார்.

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு

முகமது மூயிஸு பேசியது என்ன?

``எங்களின் பாதுகாப்பு என்று வரும்போது, அதற்கு ஒரு எல்லைக் கோட்டை நான் வரைவேன். அதேசமயம், மற்ற நாடுகளின் எல்லைக் கோடுகளையும் மாலத்தீவு மதிக்கும். மேலும், இந்திய ராணுவத்துக்குப் பதிலாக சீனப் படைகளைக் கொண்டு பிராந்திய சமநிலையை உயர்த்த விரும்பவில்லை" என்று ஊடகத்திடம் முகமது மூயிஸு தெளிவுபடுத்தியிருக்கிறார். முகமது மூயிஸு சீனாவிடம் நெருக்கம் காட்டுபவராக அறியப்பட்டாலும், இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே, இந்த விவகாரம் எதை நோக்கிச் செல்லும் என்பது தெரியும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/maldives-new-president-mohamed-muizzu-requests-india-to-withdraw-their-military-troops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக