Ad

திங்கள், 20 நவம்பர், 2023

``விஷம் குடித்து செத்தாலும் சாவோம், எடப்பாடி பக்கம் செல்ல மாட்டோம்!" - மருது அழகுராஜ் அட்டாக்

மதுரை வந்திருந்த மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான்கரை வருடம் முதலமைச்சராக ஆட்சி நடத்த காரணமான ஓ.பி.எஸ் குறித்து தடித்த வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

இன்று கத்தை பணத்தை களத்தில் இறக்கி, மொத்த தமிழகத்தையும் விலைக்கு வாங்குவேன் என்ற முஸ்தீபுகளில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார்.

மருது அழகுராஜ்

இந்திய அரசியலில் ஒரு அரசியல் தலைவருக்கு இந்தளவுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததில்லை என்ற சரித்திரத்தை எடப்பாடி படைத்துள்ளார். அவருக்கு பின்னால் உள்ள சட்ட பின்புலம் என்பது தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொடநாடு குறித்து யாரும் பேசக்கூடாது என்று ஒரு தீர்ப்பு வாங்குகிறார். அடுத்து கொடியை யாரும் பயன்படுத்த கூடாது என்று ஒரு தீர்ப்பை வாங்குகிறார்.

நீதிமன்ற தீர்ப்புகளை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரம் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளை பார்க்காமல், எடப்பாடி பழனிசாமியின் சதியை பார்க்காமல் வழங்கப்பட்ட தீர்ப்புகள்.

நீதிமன்ற தீர்ப்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்து கொண்டுள்ளார். தொண்டர்களுக்கு எம்ஜிஆர் வழங்கிய உரிமையை  பறித்துள்ளார். ஜெயலலிதா கூட கட்சி விதிகளை மாற்றவில்லை. ஒரு தொண்டன்தான் தலைமையை தீர்மாணிக்கவேண்டும். ஒரு தொண்டன் தலைமையிலும் அமர வேண்டும் என்பதுதான் அதிமுக தொடங்கபட்டதன் காரணம்.

அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதில் அடிப்படையான சில விதிகளை மாற்ற முடியாது. அதுபோல், அதிமுக கட்சி விதிகளை மாற்ற முடியாது. ஆனால், எம்ஜிஆர் எழுதி வைத்த முக்கிய விதியை எடப்பாடி மாற்றியுள்ளார்.

இதே எடப்பாடி பழனிசாமி ஏழையாக இருந்திருந்தால் இதுபோல் செய்திருக்க முடியுமா? ஒரு நீதிமன்றம் ஒரு கட்சிக்கான தலைமையை தீர்மானிக்க முடியாது. அதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். அது சரியா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

ஒரு நாள் இரவில் அதிபராகி விட்டதாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த தீர்ப்புகள் அனைத்தையும் குறைபாடு உள்ள தீர்ப்பாகவே பார்க்கிறோம்.

2017 ல் அதிமுக தலைமைக்கு எதிராக சசிகலா போட்ட வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பல அரசியல் வழக்குகள் நகராமலேயே உள்ளது. ஆனால், மாதம் மாதம் ரேசனில் அரிசி வாங்குவதுபோல் எடப்பாடி பழனிசாமி தீர்ப்புகளை வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த தீர்ப்புகளில் எங்களுக்கு மன மாச்சரியம் உண்டு. அது தொண்டர்களுக்கு எதிரான தீர்ப்பு.

எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதே தவிர மக்கள் மன்றம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு இரண்டு சம்பவங்கள் உண்டு.. ஒன்று ஈரோடு இடைத்தேர்தல். மற்றொன்று பசும்பொன்னில் நடந்த சம்பவம். அதிகாலையிலயே ஆள்கள் வருவதற்கு முன்பே முதலமைச்சர் வரும்போதே அவருடன் ஒட்டிக்கொண்டு பவுன்சர் சகிதமாக வந்த எடப்பாடி பழனிசாமி பயந்தபடி வந்தார்.

ஓபிஎஸ் சென்ற இடமெல்லாம் சிறப்பு, எடப்பாடி சென்ற இடமெல்லாம் செருப்பு என்பதுபோல் ஒற்றை செருப்பு அவரை வரவேற்றது. அதிமுகவுக்கு தலைமை தாங்கிய எந்த தலைவருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.

ஓபிஎஸ்

கடந்த தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றது. ஆனால், வருகின்ற தேர்தலில் எடப்பாடியை பிடிக்காத காரணத்தால் ஒரு கோடி வாக்காளர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.

இவ்வளவு விஷயங்களை நான் குறிப்பிட காரணம், சட்டமன்றம் முடிந்தபின்பு எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சை தடித்த வார்த்தைகளால் பேசியுள்ளார். தன்னிடம் இல்லாத சூடு, சொரணையை ஓபிஎஸ்ஸிடம் கேட்டுள்ளார். அவர் கூவத்தூரில் குழந்தையாக தவழ்ந்ததையும், தினகரனுக்கு தொப்பிக்கு வாக்கு கேட்டதும், அதன் பின்பு நான்கரை வருடம் ஆட்சியை நடத்த ஓபிஎஸ் காலில் விழுந்ததையும், அடுத்து ஆட்சியில் நடைபெறும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க பாஜக காலில் விழுந்ததையும் யாரும் மறக்கவில்லை.

இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார்.

எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளும் எடப்பாடி சம்பந்தி மீதான ஊழல் வழக்கும் தற்போது தூங்குகிறது. எடப்பாடிக்கு எதிரான எந்த வழக்கையும் திமுக நடத்தவில்லை. திமுகவின் பி டீம் எடப்பாடி பழனிசாமிதான்.

40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவே அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. விஷச்செடிக்கு இரண்டரை ஆண்டுகளாக பாஜக அரசு உரம் போட்டு வளர்த்ததை இப்போது புரிந்துகொண்டுள்ளது.

மருது அழகுராஜ்

எடப்பாடி பழனிசாமி ஒ.பி.எஸ் குறித்து பேசுவதற்கு அருகதையற்றவர், ஜெயலலிதாவின் ஜீவ நாடி திமுக எதிர்ப்புதான், தற்காலிக தீர்ப்பினால் அதிமுக அலுவலகத்த்திற்கு ஒ.பி.எஸ் செல்லவில்லை, ஒ.பி.எஸின் கருத்தை கேட்டு இருந்தால் இன்று அதிமுக மீது ஊழல் வழக்குகள் வந்திருக்காது.

ஒ.பி.எஸின் கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை, நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக வேஷ்டிக்கு பதிலாக காவி வேஷ்டி கட்ட வேண்டிய நிலை வந்துள்ளது. காவி வேஷ்டி கட்டி வரும் ஒ.பி.எஸ்ஸை பார்த்து அதிமுக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு என்னோடு சேர்ந்துகொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார், இதுவரை எத்தனை மன்னிப்பு கடிதம் வந்துள்ளது என்பதை சொல்வாரா? விஷம் குடித்து செத்தாலும் சாவோம்,  எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்ல மாட்டோம்.

எடப்பாடி பழனிசாமி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். எந்த தீர்ப்பும் இறுதியானது அல்ல.

அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என எதுவும் இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது, பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன, பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக தலைமை கழகம் இறுதி முடிவு எடுக்கும்" என கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/marudhu-azhaguraj-press-meet-in-madurai-attacked-edappadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக