Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

`சூதாட்ட ஆப் உரிமையாளரிடம் சத்தீஷ்கர் முதல்வர் ரூ.508 கோடி பெற்றாரா?’ - அமலாக்கப்பிரிவு பகீர் தகவல்

சத்தீஷ்கரை சேர்ந்த செளரப் சந்திராகர் என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து `மகாதேவ் புக்’ என்ற மொபைல் சூதாட்ட ஆப்பை இந்தியா உட்பட உலகம் முழுவதும் நடத்தி வருகிறார். இந்த மொபைல் ஆப் மூலம் இந்தியாவில் சம்பாதிக்கப்படும் பணம் ஹவாலா மூலம் துபாயில் தங்கி இருக்கும் செளரப்பிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தங்களது மொபைல் ஆப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க சத்தீஷ்கர் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸாருக்கு செளரப் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.

சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் சத்தீஷ்கர் முதல்வர் புபேஷ் பாகலுக்கு மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்கள் ரூ.508 கோடியை கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூதாட்டம்

மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்கள் சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு பணத்தை இறக்கி இருப்பதாக அமலாக்கப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 2-ம் தேதியில் இருந்து இரண்டு நாள்கள் சத்தீஷ்கரில் மகாதேவ் மொபைல் ஆப்பிற்கு எதிராக ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் பினாமி வங்கி கணக்கில் இருந்த 15.59 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அதோடு 5.39 கோடி ரூபாய் பறிமுதலும் செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பணத்தை டெலிவரி செய்யும் ஒருவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் சத்தீஷ்கர் முதல்வர் புபேஷுக்கு மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்கள் ரூ.508 கோடி கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆசிம் தாஸ் என்ற அந்த நபரிடம் இருந்து ரூ.5.39 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ததாகவும், சத்தீஷ்கர் முதல்வர் புபேஷ் பாகலிடம் டெலிவரி செய்ய எடுத்து சென்றதாக ஆசிம் தாஸ் தெரிவித்துள்ளார்” என அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆசிம் தாஸிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் தடயவியல் அறிக்கை, மகாதேவ் மொபைல் ஆப் மோசடியில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுபம் சோனி அனுப்பிய மெயில் ஆகியவற்றை ஆய்வு செய்த போது அடிக்கடி மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்கள் சத்தீஷ்கர் முதல்வருக்கு பணம் அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. இது வரை 508 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு இருக்கிறது. அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புபேஷ் பாகெல்

இதே போன்று சத்தீஷ்கரை சேர்ந்த கான்ஸ்டபிள் பீம் யாதவ் என்பவரையும் அமலாக்கப்பிரிவு கைது செய்து இருக்கிறது. யாதவ் கடந்த 3 ஆண்டில் துபாய் சென்று மகாதேவ் மொபைல் ஆப் நிறுவனர்களை சந்தித்து பேசி விட்டு வந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு மகாதேவ் மொபைல் ஆப் விழாக்களிலும் யாதவ் கலந்து கொண்டதோடு துபாய் செல்வதற்கான செலவையும் மகாதேவ் ஆப் ஏற்றுக்கொண்டுள்ளது. யாதவ் மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்களிடம் பணமும் பெற்றுள்ளார் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாதவ் மற்றும் தாஸ் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கரில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அமலாக்கப்பிரிவு இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ராஜஸ்தானிலும் அமலாக்கப்பிரிவு காங்கிரஸ் தலைவர்களின் இல்லங்களில் தேர்தல் நேரத்தில் ரெய்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/trending/chhatishkar-chief-minister-get-rs-508-crores-from-mahadev-mobile-app-owners-says-ed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக