Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

Traffic Violation: ட்விட்டரில் போட்டோ, உடனே ஆயிரங்களில் அபராதம் - இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?

Greater Chennai Traffic Police என்றொரு ID, ட்விட்டர் சமூகவலைதளத்தில் இருக்கிறது. உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். எப்போதாவது நேரம் கிடைக்கும்போது இதை ஓப்பன் செய்து பார்த்தால், காவல்துறையைவிட பொதுமக்களே காவல்துறையாகவே மாறி ஏகப்பட்ட பேர் இதில் ஆக்டிவ் ஆக இருப்பது தெரியும்.

யாராவது ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டினால், சிக்னலை மீறினால், நோ பார்க்கிங்கில் வாகனங்களை பார்க் செய்திருந்தால், ஒன்வேயில் திருட்டுத்தனமாக வண்டி ஓட்டினால், ட்ரிப்பிள்ஸ் அடித்தால்… என்று இப்படி டிராஃபிக் வயலேஷன்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் வரிசையாக வந்து விழுகின்றன. ‘இவனைப் புடிங்க சார்; புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ எனும் ரீதியில் அந்தப் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய கமென்ட்டுகள்.

உடனே அந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்து, ‘Thank you for your tweet. It has been sent to the concerned officer for follow-up action’ – இப்படி ஒரு பொதுவான ரிப்ளை ட்வீட் காவல்துறையிடம் இருந்து வருகிறது. அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்தச் சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதச் சலான் பறக்கிறது. அந்தப் பதிவும் வந்து விழுகிறது அந்தப் பக்கத்தில். 

‘என்னடா நடக்குது இங்க; எல்லோருமே போலீஸ் இன்ஃபார்மர்ஸ் ஆகிட்டாங்களா’ என்று Greater Chennai Traffic Police ட்விட்டர் பக்கத்துக்கு ஒரு எட்டுப் போனேன்.

Triple Riding Traffic Violation

அது மெரினா பீச் சாலை என்று நினைக்கிறேன். ‘பெரிய ஆபீசர் போல; ஹெல்மெட் இல்லை; வண்டி ஓட்டும்போது போன் பேசுறார்’ என்று போட்டோவுடன் ஒரு பதிவு. அதைப் பதிவிட்டிருந்தவர் பாலாஜி என்கிற ஒரு நபர். அடுத்த கொஞ்ச நேரத்தில் காவல்துறையிடம் இருந்து அந்த வாகனத்துக்கு அபராத சலான் நோட்டீஸ் வந்து விழுந்திருக்கிறது. 

நடைபாதையில் ஒரு காரும் சில ஆட்டோக்களும் பார்க் ஆகியிருந்த புகைப்படம் ஒன்று பதிவாகியிருந்தது. பெரியமேடு பகுதியில் ராஜா முத்தையா சாலையில் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ‘Hope necessary action will be taken on the vehicles’ என்று அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டுடன் அதைப் பதிவிட்டிருந்தார் ஆனந்தன் என்பவர். அடுத்த சில மணி நேரங்களில் அந்த வாகனங்களுக்கு ‘இந்தா புடி’ என்று வரிசையாக 500 ரூபாய் அபராதச் சலான்கள் வந்திருந்தன. 

Traffic Violations
Fine

‘ஒன்வேயில, அதுவும் ஹெல்மெட் இல்லாமப் போறான் பாருங்க’ எனும் ரீதியில் புழுதிவாக்கம் பகுதியில் எடுத்த ஒரு வீடியோவையே வெளியிட்டிருந்தார் ரமேஷ் என்பவர். சில மணி நேரத்தில் அந்த வெள்ளை நிற ஆக்டிவாவின் நம்பர் பிளேட்டை ட்ரேஸ் செய்து, ஒன்வே டிரைவிங் மற்றும் ஹெல்மெட்லெஸ் டிரைவிங் என இரண்டுக்கும் சேர்த்து 1,500 ரூபாய் சலான் வந்திருந்தது. 

இன்னொரு புகைப்படம்; கணவன் பின்னால் மனைவி கட்டைப்பையுடன் அமர்ந்து டூவீலரில் பயணம் செய்கிறார். அவருக்கு 1000 ரூபாய் அபராதம் வந்திருந்தது. ‘கட்டைப் பை கொண்டு போனா ஃபைனா’ என்று தேடிப் பார்த்தால்… அந்தப் பில்லியன் பெண்மணி ஹெல்மெட் போடவில்லை என்பதற்கான அபராதமாம் அது! 

Defective Number Plate

இதைவிட ஒருவர் ‘தளபதி’ விஜய் ரசிகர் போல! அவரது பல்ஸர் பைக்கின் நம்பர் பிளேட்டில் ‘மெர்சல்’ பட விஜய், மெர்சலாக கை நீட்டி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். சென்னை அண்ணா நகர் மெட்ரோ பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த அந்த பைக்கைப் புகைப்படம் எடுத்துக் காவல்துறையின் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் மஹாராஜா ஜெயின் என்பவர். அந்த விஜய் ரசிகருக்கு ‘Defective Number Plate’ என்று 1,500 ரூபாய் அபராதம்! 

இந்த அபராத விஷயங்கள், சம்பந்தப்பட்ட அந்த நபர்களைச் சென்றடைந்ததா… அவர்கள் அபராதத்தைக் கட்டிவிட்டார்களா என்பது தெரியவில்லை.

எல்லாம் ஓகே! ‘‘இப்படிச் சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துச் செயல்படலாமா? இதில் தவறான பழி பழி வாங்கும் நோக்கம் வந்து விடாதா?’’ என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு ரங்கசாமியிடம் கேட்டேன். 
Lawyer Babu Rangasamy

‘‘இதற்கு சட்டத்தில் நிச்சயம் இடம் இருக்கிறது சார். இப்படி மக்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைத் தனிநபர் ஒருவர் புகைப்படமோ வீடியோவோ எடுத்து காவல்துறைக்குத் தெரிவிக்க, தண்டனை பெற்றுத் தர, சட்டத்தில் எவ்விதத் தடையும் இல்லை. மக்கள் தொகை மிகுந்த சென்னை மாநகரத்தில் இப்படி எத்தனை விதிமீறல்கள் நடக்கின்றன? இவை எல்லாவற்றையும் கவனிக்க காவல்துறையால் மட்டுமே முடியாது. மக்கள் ஒருவகையில் காவல்துறைக்கு நன்மைதான் செய்கிறார்கள். இருந்தாலும், தவறான புகார்கள் வந்தால், அதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து, மத்திய/மாநில அரசுகள், சட்டத்தில் இதை எப்படி இடம்பெற வைப்பது என்பதைப் பற்றி சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" என்றார் பாபு. 

சைபர் க்ரைம் வழக்கறிஞர் சத்ய நாராயணன்
‘தவறு செய்பவர்களுக்குத் தண்டனை உடனே கிடைப்பது’ என்பது நல்ல விஷயம்தான் என்றாலும், மக்கள் இதில் பழிவாங்கும் நோக்கில் செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது. என்றோ எடுத்த பழைய போட்டோவையோ, பகைமை உணர்வை மட்டுமோ மனதில் வைத்தும் இதுபோல் செயல்களில் ஈடுபடலாம் அல்லவா? அப்போ யார் வேண்டுமானாலும், யாரையும் புகைப்படம் எடுத்துப் போட்டால், உடனே அபராதம் உறுதிதானா? இது பற்றி இன்னொரு சைபர் க்ரைம் வழக்கறிஞர் சத்ய நாராயணன் என்ன சொல்கிறார்?

‘‘இது ஒன்றும் தவறில்லை; நல்ல விஷயம்தானே! க்ரைம்களில் சின்ன க்ரைம்; பெரிய க்ரைம் என்று இருக்கிறதா என்ன? தப்பு செய்தால் எல்லோருக்குமே தண்டனை கிடைக்க வேண்டும்தான். காவல்துறையிலேயே ஒரு குற்றத்தைப் பதிவு செய்வது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர் (Victim) மட்டுமே புகார் அளிப்பதை வைத்து FIR என்கிற First Information Report பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இல்லை. அதை Witness செய்தவர்களும் புகார் அளிக்கலாம். அதேபோல்தான் இதுவும். 

ட்விட்டரில் மட்டுமல்ல; இப்போது மொபைலில் Police-E-Eye என்கிற ஆப் மூலமும் பலர் இதுபோல் காவல்துறைக்குப் புகார் அளிக்கிறார்கள். இதில் நீங்கள் சொல்வதுபோல், தவறு செய்தவர் புகைப்படத்தில் இருக்கும் அந்த நபர்தானா… சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒரிஜினலா… எப்போது எடுத்தது… போன்ற சமாச்சாரங்களை உறுதி செய்ய வாய்ப்பளித்த பிறகே, அபராதம் வழங்க வேண்டும்! இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான்!’’ என்றார். 

Pillion not wearing helmet

காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்:

க்ரைம் என்பதில் சின்ன க்ரைம் இல்லைதான்; ஆனால் குழந்தைகளைக் கொண்டு போய் விடும் தாய்மார்களை, ஹெல்மெட் போடாத பாவமான பில்லியன் ரைடர்களையெல்லாம் படம்பிடித்து 1000 ரூபாய் வசூலித்தால், மக்கள் காசிலிருந்தே விரைவில் தமிழ்நாட்டின் கடனையே அடைத்து விடலாம்போல! குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை, ஒன்வேயில் சர்புர் எனப் பறப்பவர்களை, சாலைகளில் ஸ்டன்ட் அடிக்கும் பயங்கரவாதிகளைப் பிடித்து அபராதம் விதித்தாலே… விபத்துகளையும், குற்றங்களையும் முக்கால்வாசிக்கு மேல் தடுத்துவிடலாம். 

முந்தியெல்லாம் டிராஃபிக் போலீஸைப் பார்த்தா மட்டும்தான் பயப்படுவோம்; இப்போ செல்போன் வெச்சிருக்கிற யாரைப் பார்த்தாலும் பயமாத்தான்யா இருக்கு! இனிமே கேர்ஃபுல்லா ரூல்ஸை மதிச்சு வண்டி ஓட்டுங்க மக்கா!


source https://www.vikatan.com/government-and-politics/regulations/chennai-city-traffic-police-takes-action-against-traffic-violations-via-twitter-posts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக