Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

ஸ்ரீகணேச பஞ்சரத்னம் மூலமும் தமிழ் விளக்கமும்: அதிகாலையில் பாடினால் அன்றைய தினமே அருமையாக அமையும்!

காலையில் நாம் எழும்போதே பிரச்னைகளும் அதனால் டென்ஷனும் கூடவே எழுந்து கொள்கின்றன. இன்றைக்கு இந்தந்த வேலைகளை முடிக்க வேண்டும்; இவ்வளவு ரூபாய்களை செட்டில் செய்தாக வேண்டும்; இத்தனைப் பேர்களை சந்தித்தாக வேண்டும்; இத்தனைப் பிரச்னைகளை முடித்தாக வேண்டும் என்று விடியும்போதே நீள்கின்றன பணிகள். அத்தனைப் பணிகளையும் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்க நிதானமும் தெளிவும் மனதில் ஒரு திடமும் தேவைப்படுகின்றன. அதைத் தரக் கூடியது தெய்வ வழிபாடுகளே. அது வெறும் விக்ரக ஆராதனை மட்டும் கிடையாது. எழுந்ததும் நமக்குள் நாமே பேசிக் கொள்வது, அன்றைய தினத்துக்கான பணிகளைத் திட்டமிடுவது, அதற்குத் தேவையான ஆற்றலை சில எளிய மந்திர ஜபத்தால் பெற்றுக் கொள்வது எல்லாமே ஆன்மிக வழிபாடுகள்.
ஆதிசங்கரர்

மன் + திறம் என்பதே மந்திரம் என்றானது என்பர் பெரியோர். மனதுக்குத் தேவையான திறத்தை அளிப்பதே மந்திரம். தைர்யம், பலம், தெளிவு, உற்சாகம், நிதானம், ஆரோக்கியம் ஆகியவற்றை மனதுக்கு அளிப்பதே மந்திரம். அந்த வகையில் உங்களின் ஒவ்வொரு நாளுக்குத் தேவையான மன ஆற்றலை அளிக்கக் கூடிய மந்திரம் ஸ்ரீகணேச பஞ்சரத்னம். ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய இந்த அற்புதமான மந்திரம், அவரது சீடர்கள் வலிமையான மன ஆற்றலைப் பெறவும் முறையான நியம நிஷ்டைகளைக் கடைப்பிடிக்கவும் உருவானது. முழுமுதல் கடவுளான ஸ்ரீகணேசனை வணங்கி இந்தப் பாடலைப் பாடினால் அன்றைய நாளில் வரவிருக்கும் தடைகள் யாவும் நீங்கும். சிக்கலான விஷயங்கள் யாவும் மிக எளிமையாக மாறும். உங்களிடம் கோபமாகப் பேச இருந்தவர்கள் கூட மனம் மாறி இனிமையாகப் பேசுவார்கள். உங்கள் சூழலே இனிமையாக மாறும். உங்களுக்கான வசியம் கூடி எல்லோரும் நட்பாக மாறுவார்கள். இதை எல்லாம் இந்த மந்திரம் செய்யும் என நம்பப்படுகிறது.

ஜகத்குருவின் வார்த்தைகள் எந்நாளும் பொய்ப்பதில்லை. இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு அட்சரமும் மகிமை வாய்ந்தவை. ஸ்ரீபரமேஸ்வரனின் அம்சம் என்று போற்றப்படும் ஜகத்குரு ஆதிசங்கரரின் இந்த அற்புத மந்திரத்தை நீங்களும் நாள்தோறும் அதிகாலையில் உச்சரித்தோ அல்லது கேட்டோ உங்களின் ஒவ்வொரு நாளையும் வெற்றியாகவும் உற்சாகமாகவும் மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக பேச்சாற்றல், சொல்வன்மை, செல்வாக்கு விரும்பும் அன்பர்கள் இந்த மந்திரத்தைக் கட்டாயம் பாட வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்.

ஸ்ரீகணேச பஞ்சரத்னம்:

விநாயகர்

முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்

கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்

அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்

நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.

மோதகம் ஏந்தி, எப்போதும் மோட்சம் அளிக்கும் விநாயகரே உம்மை வணங்குகிறேன். சந்திரப் பிறை அணிந்தவரும், அமைதியானவரைக் காப்பவரும், வலிமையற்றவருக்கு துணையானவரும், யானை அசுரனைக் கொன்றவரும், வணங்கியவர் குறை தீர்த்துக் காப்பவருமான விநாயகரே உம்மை வணங்குகிறேன்.

நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்

நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்

ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்

மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

விளங்காதவருக்கு விநாயகர் அச்சம் அளிக்கலாம். உதித்தெழும் கதிரவன் போல விளங்குபவர் விநாயகர். தேவ, அசுரர் வணங்க, வணங்கியவரின் தீமைகளைப் போக்குபவர், தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கணங்களுக்கும், கஜாசுரனுக்கும் தலைமை தாங்கும் பரம்பொருளே உம்மை சரணமடைகிறேன்.

ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்

தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

கஜாசுரனை வதைத்து சகல லோகத்துக்கும் நன்மை செய்தவர் விநாயகர். பருத்த தொந்தியும், யானை முகமும் கொண்டவர். கருணாமூர்த்தி, பொறுமையானவர், மகிழ்ச்சியின் அடையாளம், புகழ் சேர்ப்பவர். துதிப்பவருக்கு நன்மைகள் அளிக்கும் கணேசரை வணங்குகின்றேன்.

கணபதி

அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்

புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்

ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்

கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்

எளியவர்களின் துன்பத்தைப் போக்கி, புனித நூல்கள் போற்ற நிற்பவர். ஈசனின் மூத்த பிள்ளையாய், அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். தேவர்களுக்கும் கணங்களுக்கும் மூத்தவரான வாரண முகத்தவரை வணங்குகிறேன்.

கணபதி

நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்

அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்

தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

ஒளிரும் அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய ஈசனின் மைந்தர். எண்ணிலடங்கா உருவம் கொண்டவர். ஆதியும் அந்தமும் இல்லாதவர். தடைகளைத் தகர்ப்பவர். ஞானிகளின் உள்ளத்தில் குடிகொண்ட ஏகதந்தரை எப்பொழுதும் தியானிக்கிறேன்.

காணிப்பாக்கம் கணபதி

மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்

அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்

கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம்!

கணங்களுக்கு எல்லாம் தலைவனான கணேசரைப் போற்றும் இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் ஒருவர் தினமும் காலையில் ஸ்ரீகணபதியை தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாரோ, அவர் நோயின்றி குறையேதுமின்றி, கல்வி, ஞானம், நன்மக்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.


source https://www.vikatan.com/spiritual/gods/shri-ganesha-pancharatnam-lord-ganapathy-worship-with-spiritual-slogans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக