Ad

புதன், 17 மே, 2023

``கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அமைதி காப்பது ஏன்?!” - சாடும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி  அதிமுகவின் மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் நேற்று (17-05-2023) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் போலி மதுபானங்களை தயாரிக்க, தமிழகத்தின் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்கு எரி சாராயம் கொண்டுவரப்படுகிறது. அதன்மூலம் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள தி.மு.க துணையோடு பல திமுக உறுப்பினர்கள் தமிழகத்திற்கு போலி மதுபானம் கடத்தல்  தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அ.தி.மு.க சார்பில் தொடர் குற்றச்சாட்டை கூறி வருகிறோம்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி கலால் துறை மூலம் ஒரு சில வழக்குகள் பதியப்பட்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? அதன் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தாமல் கூலி தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதேபோல புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவாவின் தொகுதியான வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்பட்டதாக பலமுறை அ.தி.மு.க சார்பில் கூறியிருந்தோம். அதேபோல் காரைக்காலில் இருந்தும் தி.மு.க பிரமுகரின் தலைமையின் கீழ் மதுபானம் மற்றும் போலி சாராயம் கடலூர், நாகப்பட்டினம், சிதம்பரம், சீ்ர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுவதாக கூறியிருக்கிறோம்.

புதுச்சேரி கலால் துறையின் துணை ஆணையரின் கையெழுத்தை போலியாக வைத்து, கர்நாடகத்திலிருந்து போலி பெர்மிட் மூலம் மதுபான ஆர்.எஸ் கொண்டுவரப்பட்டது என்ற குற்றச்சாட்டை நாங்கள் கூறியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரி கலால் துறை பாராமுகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மெத்தனால் என்ற ரசாயன எரி சாராயத்தை, புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்த அனுமதித்ததால், நான்கு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிர் குடித்த கள்ளச்சாராயம்

அப்போது தமிழக முதலமைச்சர், துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மஸ்தான் மற்றும் கடத்தலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென அறிக்கை வெளியிட்டார். நாங்கள் கூறும்போதே சம்பந்தபட்டவர்கள் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம். மெழுகுவர்த்தி தயாரிக்கவும், சிரஞ்ச், சானிடைசர், இருமல் மருந்து தயாரிக்க மூலப்பொருளாக இந்த மெத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலப்பொருட்கள் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் தற்போது இயக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் மெத்தனால் அதிக தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் புதுச்சேரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தி.மு.கவைச் சேர்ந்த ஏழுமலை என்பவர்  வில்லியனூர் தொகுதியில் தட்டாஞ்சாவடி கிளை செயலாளராக உள்ளார். இவர் தி.மு.க எம்.எல்.ஏவும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவாவுக்கு நெருக்கமானவர். இது போன்ற குற்றச்செயலில் அதிகம் ஈடுபட்டு வருபவர்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தி.மு.கவினர்தான்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள தி.மு.கவினர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு கூட்டு வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 22 பேர் இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர். ஆனால் இது தொடர்பாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.கவினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதே அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். அவற்றால் அரசுக்கு எந்த வருமானமும் கிடையாது. அதற்கு பதிலாக மதுபான கடைக்கு அனுமதி கொடுத்து விடலாம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-admk-allegation-over-dmk-members-smuggled-fake-liquor-into-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக