Ad

திங்கள், 20 பிப்ரவரி, 2023

`டெல்லி கதாசிரியர்கள் முடிவு செய்கிறார்கள்' - உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு

சிவசேனாவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உத்தவ் தாக்கரேயிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. சிவசேனா பெயர் மற்றும் சின்னத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் சிவசேனாவின் அலுவலகங்களை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையில் ஷிண்டே ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மும்பை சட்டமன்ற வளாகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே நேற்று முறைப்படி தன்வசப்படுத்திக்கொண்டார். இதனால் மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தையும் ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவாளர்கள் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அந்த அலுவலகத்திற்கு இருவரும் உரிமை கொண்டாடியதால் மாநகராட்சி நிர்வாகம் அதனை அடைத்து வைத்து இருக்கிறது. மீண்டும் அந்த அலுவலகத்தை கைப்பற்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றிலிருந்து உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்புக்கு இருந்து வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மும்பை மாநகராட்சி சிவசேனா கவுன்சிலர்கள் யாரும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேரவில்லை. அவர்கள் அனைவரும் தொடர்ந்து உத்தவ் தாக்கரே அணியில் இருக்கின்றனர்.

அவர்களில் 40 பேரையாவது தனது பக்கம் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக இருக்கிறார். கவுன்சிலர்களை விலை கொடுத்து வாங்க ஷிண்டே தனி அணியை உருவாக்கி இருக்கிறார். அடுத்த ஓரிரு மாதத்தில் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் அவர்களை தனது பக்கம் கொண்டு வரவேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக இருக்கிறார். இத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதில் பாஜக-வும் தீவிரமாக இருக்கிறது.

டெல்லி கதாசிரியர்கள்

சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை வாங்க ரூ.2,000 கோடி செலவிட்டுள்ளதாக சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி இருந்தார். அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், ``பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் இதில் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கக்கூடாது என்று சொன்ன பிறகும் அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டிய அவசியம் என்ன? இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று நடந்திருந்திருக்கிறது. எப்போது என்ன நடக்கவேண்டும், எப்போது முடிவு எடுக்கப்படவேண்டும், எந்த நாளில் ஆளுநர் மாற்றப்படவேண்டும், எப்போது அமித் ஷா வரவேண்டும் என்பது கதையின் ஒரு பகுதி. டெல்லியில் இருப்பவர்கள் கதாசிரியர்கள். மகாராஷ்டிராவில் இருப்பவர்கள் வெறும் சிப்பாய்கள் ஆவர். இதில் சுப்ரீம் கோர்ட் முடிவுதான் இறுதியானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் சின்னம் வழங்கப்பட்டு இருப்பதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதோடு ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை பறிக்க கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இன்றைய விசாரணை அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இவ்வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தொடர்ந்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கு முன்பு நடந்த விசாரணையின் போது மக்கள் பிரதிநிதிகள் விலைக்கு வாங்கப்படுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

சிவசேனாவின் வெப்சைட் நேற்று டெலிட் செய்யப்பட்டுவிட்டது. அதனையும் ஷிண்டே கைப்பற்றிவிடுவார் என்று கருதி உத்தவ் தாக்கரே அதனை டெலிட் செய்துவிட்டார். அதேசமயம் ட்விட்டரில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் பெயரையும், அடையாளத்தையும் மாற்றி இருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-scriptwriters-decide-what-should-happen-will-uddhav-get-justice-in-the-supreme-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக