Ad

திங்கள், 27 பிப்ரவரி, 2023

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெற்றால் பணி நீக்கம்… ஆட்சியர் அதிரடி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாதத்தில் ஒரு நாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை துறை சார்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வழிவகை செய்வர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அந்த வகையில் இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை பணம் வசூலிக்கிறார்கள், மேலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து விவசாயிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட ஊழியரை உடனடியாக களை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் சட்டத்துக்குப் புறம்பாக பணம் வசூலிக்கப்பட்டால் தற்காலிக பணிநீக்கம் முதல் அனைத்துவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் உடனடியாகக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர்

இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் கரவொலி எழுப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/agriculture/government/mayiladuthurai-collector-has-warned-in-the-agricultural-grievance-redressal-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக