Ad

சனி, 2 ஏப்ரல், 2022

"பெருந்தன்மை பெரும் பலனளிக்கும்!"- ஃபீல்ட் மார்ஷல் மானெக் ஷா வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்

விருப்பமில்லாத வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அதிலும் உச்சம் தொடலாம்

நைனிடாலில் உள்ள கல்லூரியில் மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் கல்வியை முடித்தார் மானெக் ஷா. லண்டனுக்குச் சென்று மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் அப்பா இதற்கு அனுமதிக்கவில்லை (இத்தனைக்கும் அவரும் டாக்டர்தான்). ‘வெளிநாட்டில் தனியே தங்கும் அளவுக்கு உனக்கு வயது ஆகவில்லை’ என்று ஒரு காரணத்தைக் கூறினார். ஒருவித வெறுப்பில் இந்திய ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வை எழுதினார் மானெக் ஷா. அதில் தேர்வாகி பி​ன் ராணுவத்தில் பணியாற்றி அதிலும் உச்சம் தொட்டார்.

மானெக் ஷா

நகைச்சுவை உணர்வு என்றும் கைகொடுக்கும்

ஒருமுறை பர்மாவில் நடைபெற்ற யுத்தத்தில் மானெக் ஷாவின் உடலில் கடும் காயம் ஏற்பட்டது. குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது அவரது உடல். உடனடி அறுவை சிகிச்சை தேவை என்று தீர்மானித்த டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு மானெக் ஷா ‘பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கழுதை என்னை உதைத்துவிட்டது’ என்றாராம். துன்பப்படும் நேரத்திலும் நேரத்தில் எப்படி ஒரு நகைச்சுவை பாருங்கள்! வாழ்வின் பல கட்டங்களில் இந்த நகைச்சுவை உணர்வு அவருக்குக் கைகொடுத்ததாம்.

தொடக்கப்புள்ளியாக நீங்கள் இருக்கலாம்

பங்களாதேஷ் என்ற புதிய நாடு இந்தியாவின் உதவியுடன் உருவானது. அதற்குப் பிறகு நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது அதை ஆண்டுகொண்டிருந்த மன்னர் மகேந்திரா, ராயல் நேபால் ஆர்மி என்ற அமைப்பின் கௌரவத் தளபதியாக அவரை நியமித்து அதற்கு அடையாளமாக ஒரு வாளையும் அளிக்க முன்வந்தார். இதற்கு ஒத்துக் கொண்டார் மானெக் ஷா. இதுதான் இரண்டு அண்டை நாடுகள் தங்கள் மாற்றுத் தளபதிகளை கௌரவ ராணுவத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்குத் தொடக்கமாக அமைந்தது.

பெருந்தன்மை பெரும் பலனளிக்கும்

பாகிஸ்தானிய ராணுவம் சரணடைந்தது. இதற்காக டாக்காவுக்குச் சென்று அந்தச் சரணடைதல் நிகழ்வை ஏற்குமாறு மானெக் ஷாவைப் பணித்தது இந்திய அரசு. அவர் அதை மறுத்தார். மாறாகக் கிழக்குப் பகுதியின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகஜீத் சிங்தான் இதை ஏற்கத் தகுதியானவர் என்று கூறினார். இதுபோன்ற பெருந்தன்மை அவருக்குப் பெரும் மரியாதையை ஈட்டித் தந்தது.

மானெக் ஷா

நியாயமான துணிச்சல் தவறே அல்ல

அந்தக் காலத்தில் பிரதம மந்திரி இந்திரா காந்தி சர்வ வல்லமை படைத்தவராக விளங்கினார். தனது ஆணைகள் அப்படியே மற்றவர்களால் பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் கொட்டிக் கிடந்தது. ஒரு காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் மீது உடனடியாக ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூற மானெக் ஷா நேரடியாக அவர் கண்களை பார்த்து முடியாது என்று மறுத்தாராம். அதற்கான சமயம் இது அல்ல என்று அவர் பளிச்சென்று கூறியதுடன் தான் கூறியதை பிரதமர் ஏற்கவில்லை என்றால் வேறு ஒருவரை தன் இடத்திற்கு நியமித்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/lessons-we-can-learn-from-the-life-of-field-marshal-sam-manekshaw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக