Ad

செவ்வாய், 24 ஜனவரி, 2023

`புரோமோஷன் இல்லை’ - தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளர் - மன அழுத்தம், குடும்ப பிரச்னை காரணமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர், 1996-ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தாராம். முதலில், ராணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 30 வயதில் ஒரு மகளும், 26 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதன்பின்னர், திண்டிவனத்தை சேர்ந்த மேகலா என்பவரை திருமணம் செய்துக் கொண்டவர், அவருடனே வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு 11-ம் வகுப்பு பயிலும் மகன் ஒருவன் உள்ளான். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், நேற்று(24.01.2022) அதிகாலை 12.30 மணி அளவில் திண்டிவனத்தில் உள்ள அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

ஒரு காவல்துறை அதிகாரியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் பேரில் முருகனின் உடலை மீட்ட காவல்துறை அதிகாரிகள், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முருகனின் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்த போலீஸார், முதல் மனைவி ராணி அளித்த புகாரின் அடிப்படையில் 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முருகனின் மரணம் குறித்து அவரது இரண்டாவது மனைவி மேகலா-விடம் பேசினோம். "அவருக்கூட வேலையில சேர்ந்தவங்க எல்லாம் இப்போது, டி.எஸ்.பி., கேடர்ல இருக்காங்க. ஆனா, 'தனக்கு புரோமோஷன் கிடைக்கலியே' என்ற ஸ்டிரஸ் (மன அழுத்தம்) தான் அவருக்கு" என்று கூறி கதறிய அவரால், அதற்கு மேல் பேச முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து பேசிய முருகனின் உறவினர்கள், "கிட்டதட்ட 30 வருடத்திற்கு முன், உதவி ஆய்வாராகதான் இவர் பணியில் சேர்ந்தார். ஆனால், இன்றுவரை அவருக்கு புரோமோஷன் என்பதே இல்லை. யாருக்கும் இசைந்து கொடுக்காமல் பணியில் நேர்மையாக இருந்ததால் அடிக்கடி இவருக்கு சார்ஜ் கொடுப்பதும், இடமாறுதல் செய்வதும்தான் பரிசாக கிடைக்கும். இதனாலேயே அவருக்கு புரோமோஷன் இல்லாமல் இருந்தது வந்தது.

முருகன் எஸ்.ஐ

இவருடன் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., கேடரில் இருக்கிறார்கள். ஆனால், தனக்கு 58 வயது ஆகப்போகின்ற வரையிலும் புரோமோஷன் என்பதே இல்லையே என்ற மன அழுத்தம் இவருக்கு மிகவும் அதிகம். கூடுதலாக பணிச்சுமையும் இருந்து வந்துள்ளது. புரோமோஷன் தொடர்பாக சுமார் 4 தடவை தலைமை செயலகத்தில் மனுவும் கொடுத்திருக்கிறார். ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை. இதனை கொண்டே வீட்டில் அவ்வப்போது பிரச்னையும் ஏற்படும். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கொஞ்ச நாளிலேயே அவருடைய அம்மா கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டார். ஒரே மகன் என்பதால், மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனையில் அம்மாவை அனுமதித்து இவர்தான் பார்த்துக்கொண்டார்.

அதற்காகதான் 50 நாள்கள் மருத்துவ விடுப்பும் எடுத்திருந்தார். அதன் பின்னர், மீண்டும் பணியை தொடர்வதாக டிசம்பர் மாதம் காவல் நிலையத்திற்கு சென்று ரிப்போர்ட் செய்துவிட்டு வந்தார். ஆனால், அவருடைய அம்மாவின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகிப் போனது. இந்த வரும் ஜனவரி மாத துவக்கத்தில், 6-ம் தேதி போலதான் அவருடைய அம்மா இறந்துவிட்டார்கள். இதுவும் அவரது மனதை பெரிதும் பாதித்திருந்தது. இதனால், 'பணியை தொடர்கிறேன்' என காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்தவர், பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தான், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" என்றனர்.

திண்டிவனம் காவல் நிலையம்

மேலும், இதுகுறித்து திண்டிவனம் காவல்நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம். "இவருக்கு இரண்டு மனைவிகள். அதனால் குடும்ப பிரச்னைகள் இருந்திருக்கிறது. மேலும், பணியில் இருந்து அவ்வப்போது இவரே தனிச்சை விடுப்பில் சென்றுவிடுவாராம். இதனாலேயே இவருக்கு புரோமோஷன் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடைசியாக, கடந்த வருடம் இறுதியில் தியாகதுருகம் காவல் நிலையத்தில் 50 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தவர், 21-12-2022 அன்று பணியில் ஈடுபடுவதாக ரிப்போர்ட் செய்திருக்கிறார். ஆனால், அதன் பின்னர் தன்னிச்சையாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்திருக்கிறார். மேலும், குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. 23-ம் தேதி அவரின் வீட்டில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், 24-ம் தேதி அதிகாலை 12.30 மணி அளவில் அனைவரும் தூங்கிய பிறகு கதவை உட்புறமாக பூட்டிவிட்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடற்கூறாய்விற்கு பின்னர், அவரது உடல் சொந்த ஊரான ஆலம்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/a-police-sub-inspector-hanged-himself-in-tindivanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக