Ad

செவ்வாய், 17 ஜனவரி, 2023

சேலம்: உலக அமைதி வேண்டி சௌடேஸ்வரி அம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை!

சேலம், குகை ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா, ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் தொடங்கி 5 நாள்கள் நடைபெறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தை முதல் நாளில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் திருவிழா தொடங்கியது.

ஐம்பதாவது பொன்விழா ஆண்டான இந்த ஆண்டில் அம்மனுக்குப் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாகத் தை முதல் நாள் அன்று விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான வீரக்குமாரர்கள் உடலில் கத்திபோட்டுக் கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து இரண்டாம் நாள் நேற்று ஸ்ரீ சாமுண்டி அழைப்பு உள்ளிட்ட சிறப்பு வைப்பவங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்குப் பல்வேறு விதமான பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்திப் பல்வேறு விதமான ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

மேலும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் திருவிழாவை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், திருமண பாக்கியம் வேண்டியும், திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இந்தத் திருவிளக்கு பூஜையில் 1,008 சுமங்கலிகள் கலந்துகொண்டனர்.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். எனவே திருவிளக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் சகல வித செல்வங்களும் திருமண பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவாச்சார்யர்கள் வேதங்கள் முழங்க சுமங்கலிகள் பூக்கள் மற்றும் குங்குமத்தால் திருவிளக்குக்குப் பூஜை செய்தனர்.

பிறகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தைக் காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவின் ஏற்பாட்டினை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வீரக்குமாரர்கள் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.



source https://www.vikatan.com/spiritual/temples/news-about-salem-thiruvillaku-poojai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக