Ad

புதன், 18 ஜனவரி, 2023

சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை: `வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுங்கள்’ - வைகோ கோரிக்கை

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 17 வயது சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தாம்பரம் கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியில் வசித்து வரும் கணவனை இழந்த கைம்பெண் பிரியா. இவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். உறவுகள் இல்லாத ஆதரவற்ற நிலையில் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ வயது 17 பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

வைகோ

சொந்த வீடு இல்லாததால் குடிநீர் ஏற்றும் லாரிகளை பார்த்துக்கொள்ளும் வாட்ச்மேன் பணி செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார். கணவர் பழனி 2019-ம் ஆண்டு இறந்த பின் குடும்ப பாரத்தைத் தானே சுமந்து மகன் கோகுல் ஸ்ரீ தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலையில் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு பொம்மை கடையில் வேலைக்குச் சேர்த்து உள்ளார். இந்நிலையில் கடந்த 29.12.2022 அன்று நண்பர்களைப் பார்க்கச் சென்று விட்டு ரயிலில் தாம்பரம் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது பணியிலிருந்த ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணியளவில் கோகுல் ஸ்ரீ தாய் பிரியாவுக்கு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து அழைத்து உன் மகன் பூரி சாப்பிடும் போது வலிப்பு ஏற்பட்டது. அதனால், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை அழைத்துச் செல்வதாகவும், அவரை விரைவில் வரச்சொல்லி உள்ளனர். சற்று நேரத்திற்குப் பிறகு அதே நபர் உன் மகனை எமர்ஜென்சி வார்டில் சேர்த்துள்ளோம் என்று சொல்லியுள்ளார். பின்னர் அதே நபர் பத்து நிமிடம் இடைவெளியில் உன் மகன் இறந்து விட்டான் என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ

இரவு 8 மணி அளவில் செங்கல்பட்டு மருத்துவமனை சென்று சிறுவனின் தாய் பிரியாவை, மகனின் உடலைப் பார்க்க அனுமதிக்காமல் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலரின் உத்தரவின் பேரில் கட்டாயமாகச் செங்கல்பட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர் யாரிடமும் பேச விடாமல் செல்போனை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டனர். மறுநாள் 2023 ஜனவரி 1-ம் தேதி பகல் ஒரு மணி அளவில் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு சென்று இறந்த நிலையிலிருந்த கோகுல் ஸ்ரீயை காட்டியுள்ளனர்.

கீழ் உதடு இரண்டாகக் கிழிந்து உடல் முழுவதும் கொடூர காயங்கள் இருந்துள்ளது. `என் மகன் வலிப்பு நோயால் இறக்கவில்லை. நீங்கள் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்துள்ளீர்கள்’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரை மீண்டும் வலுக்கட்டாயமாக அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குக் கொண்டு சென்று மீண்டும் அவர் வீட்டுக் காவலில் வைத்து ஜனவரி 2ம் தேதியன்று சீர்திருத்தப் பள்ளியின் அதிகாரி ஒருவர் வெள்ளைப் காகிதத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த கொடுமையான சூழலில் சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

சிறுவனின் தாய்

அவரும் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு மருத்துவர்கள் சிறுவன் கோகுல் ஸ்ரீ உடலை உடற்கூராய்யு செய்யப்பட்டுள்ளது. பின்னர், மேல் கூறாய்வுக்கு கிண்டியில் உள்ள கிங் மருத்துவ இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதில், இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல் ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

இதற்குப்பின் செங்கல்பட்டு நகரக் காவல்துறை இதைக் கொலை வழக்காக மாற்றி, லாக்கப் சித்ரவதை கொலையில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், சந்திரபாபு ஆகிய ஆறு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்த தமிழகக் காவல்துறை பணி பாராட்டுக்குரியது. இந்த வழக்கைச் சட்டம் ஒழுங்கு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அபலைப் பெண் பிரியா சட்டவிரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி

கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள தாய் திருமதி பிரியாவுக்குத் தகுந்த பாதுகாப்பும் அவரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பும் நிவாரணமும் வழங்கி வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்குத் தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/mdmk-vaiko-request-tn-cm-to-transform-the-chengalpattu-reformatory-school-teenage-boy-lockup-death-case-to-cbcid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக