Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

``சண்டையெல்லாம் நாடகம்; பாஜக-வின் கண்ணசைவில்தான் இன்றும் அதிமுக இயங்குகிறது!" - முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலுக்கான களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க-வும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இதன் முன்னோட்டமாக கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரத்திலும், திருச்சியிலும் தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இதன் தொடர்ச்சியாக, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய 7 மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 50 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம், திருப்பூரை அடுத்த காங்கேயம் அருகே உள்ள படியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இதன் நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, ``மக்களவைத் தேர்தலின் தொடக்கப் புள்ளியாக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். கோடிக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட இயக்கத்துக்காக தேர்தல் பணி செய்பவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள். பல கட்ட ஆய்வுக்குப் பிறகு தான், வாக்குச்சாவடி பொறுப்பாளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இங்கு கொடுத்த பயிற்சிகளை மனதில் வைத்து தேர்தல் களத்தில் செயல்பட வேண்டும்.

பயிற்சிக் கூட்டம்

உங்கள் வார்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். வாக்குச் சாவடிக்கு உள்பட்ட குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாள்தோறும் கட்சிக்காக 1 மணி நேரமாவது ஒதுக்குங்கள். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள். வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கொண்டுவந்து தரும் மக்களின் நியாயமான கோரிக்கையை செவிசாய்த்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நாம் நடத்துவதால், வாக்காளர்கள் யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு விதத்தில் பயன்பெறும் வகையில் தி.மு.க. ஆட்சி உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் மிகப்பெரியது பெண்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டம். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குப் பின் பெண்களிடம் நமக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்திலும் பெண்கள் பயன்பெற்றுள்ளானர். நகைக்கடன் தள்ளுபடி, காலை உணவுத்திட்டம் என தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் நேரடியாக ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை மாதம் பயன்பெற்று வருகின்றனர்.

பேனாவுடன், கலைஞர் சிலை

ஆனால், மத்தியில் 2-ஆவது முறையாக ஆளும் மோடி அரசு, 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வர துடிக்கிறது. அவர்கள் அடுத்த முறை ஆட்சிக்கு வரக் கூடாது. கொள்ளை அடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என மோடி சொன்னார். இவற்றையெல்லாம் செய்தாரா? மாறாக இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார்.

நாட்டை 2024- 2025-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் 5 டிரில்லியன் டாலராக மாற்றுவோம் என்று சொன்னார் மோடி. இன்றைக்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-க்குப் பிறகு, கோவை, திருப்பூர் நகரங்கள் நொடிந்து போய்விட்டன. டாலர் சிட்டி திருப்பூர் இன்றைக்கு டல் சிட்டியாக மாறிவிட்டது. மத்திய பா.ஜ.க.-வின் தவறான பொருளாதார கொள்கையால் கோவை மாநகரம் திறனற்ற நகராகிவிட்டது.

வரவேற்பு

சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம், ஜவுளி சந்தைக்கான உட்கட்டமைப்பை ஈரோட்டில் மேம்படுத்துவதாக மத்திய பாஜக வாக்குறுதி தந்தது. ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்குது. ஆனால் அந்த தொழில் மோசமடைந்துவிட்டது. மோடி டிசைன், டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு? வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இன்னும் உள்ளன.

சந்திரயான் விட்டதும், ஜி-20 மாநாட்டை மோடி பெருமையாக சொல்கிறார். சுழற்சி அடிப்படையில் ஜி20-க்கு இந்தியா தலைமை தாங்கியது. நிலவை நோக்கிய பயணம் பாஜகவின் சாதனை அல்ல. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பலரின் விண்வெளி ஆராய்ச்சி பங்கு இதில் உண்டு. இதை மறைப்பதற்குதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து பாஜக கணக்கு காட்ட பார்க்கிறது. ஆனால், அதையும் உடனடியாக அமலுக்கு கொண்டு வரமுடியாத நிலைதான் உள்ளது. 2029-ம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்த உள்ளார்கள்.

இந்த வஞ்சக திட்டத்தை எதிர்த்து, தி.மு.க.-தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்கவிடக் கூடாது. அதனால்தான் அதிமுகவை அச்சுற்றுத்தி வைத்துள்ளனர். சண்டை போட்டுக் கொள்வதாக வெளியில் காட்டிக் கொள்கிறார்களே தவிர உள்ளுக்குள் நட்பாகத்தான் உள்ளனர். எதற்காக இந்த நடிப்பு? அதிமுக ஆதரித்தால், அவர்களின் ஊழலுக்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டி வரும். பாஜகவை ஆதரித்தால் அதன் மதவாதத்துக்கு அதிமுக துணை போக வேண்டி வரும் என்பதால் இரண்டு பேரும் நடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். பாஜக தோப்புக்கரணம் போடச் சொன்னால், எத்தனை போட வேண்டும் என்று கேட்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது.

கூட்டம்

இங்கு பாஜகவினரும், அதிமுகவினரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, ஊழல் வழக்கில் தன்னை தண்டித்துவிடக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வைச் சந்தித்தார். இரண்டு நாள்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதற்காக பாஜக தலைவர்களைச் சந்தித்தனர்.

சென்னையில் இருந்து டெல்லி சென்றால் தெரிந்துவிடும் என்று கொச்சின் சென்று, அங்கிருந்து டெல்லி சென்றதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்னவென்று எங்களுக்குத் தெரியாதா? ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எதையும் செய்யாமல், இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு அதிமுக ஆதரிக்கிறது.

கூட்டம்

ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு கரம் தருகிறது. சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால், அதிமுகவின் இன்றைய நிலையும் போய்விடும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக படுதோல்வி அடைய வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/fight-between-bjp-admk-is-a-fake-drama-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக